வறட்சியை தாங்கி வளர உதவும் பி.பி.எப்.எம். பாக்டீரியா கரைசலை ராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலையம் மாவட்டத்தில் முதல் முறையாக வியாழக்கிழமை விவசாயிகளுக்கு அறிமுகம் செய்துள்ளது.
ராமநாதபுரம் அருகேயுள்ள ஆலங்குளத்தில் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் சார்பில் வயல்விழா நடத்தப்பட்டது. இவ்விழாவில் மாலங்குடி, ஆலங்குளம், கண்ணாங்குடி கிராமங்களைச் சேர்ந்த 75க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இவ்விவசாயிகளுக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் புதிய கண்டுபிடிப்பான பி.பி.எப்.எம். பாக்டீரியா கரைசல் அறிமுகம் செய்யப்பட்டது.
இது குறித்து விவசாயிகளிடையே பேசிய வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் பேராசிரியர் இரா.துரைசிங் பேசியது:
ராமநாதபுரம் மாவட்டம் அடிக்கடி வறட்சிக்கு இலக்காகும் மாவட்டம். இம்மாவட்டத்தில் மானாவாரியாக நெல் நேரடி புழுதி விதைப்பாக சாகுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு செய்யப்படும் சாகுபடியானது, பயிர் முளைத்து தூர்கட்டும் பருவத்திலிருந்து வறட்சிக்கு உள்ளாகி இழப்பை ஏற்படுத்துகிறது.
இத்தகையை பிரச்னைக்குத் தீர்வு காணவே, வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் இப்பாக்டீரியா கரைசல் கண்டுபிடிக்கப்பட்டு, ராமநாதபுரம் வேளாண் அறிவியல் நிலையம் மூலமாக மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களிலும் இதனை அறிமுகப் படுத்தி வருகிறோம் என்றார். விவசாயிகளும் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்