தற்போது பெய்து வரும் மழைக்கு, நெல் நடவு செய்துள்ள விவசாயிகள், மேலுரம் இட வேண்டுமென, வேளாண் இணை இயக்குனர் கார்த்திகேயன், யோசனை தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டத்தில், நெல், வாழை, கரும்பு, மஞ்சள், மக்காச்சோளம் போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நடப்பு பருவத்தில் மாவட்ட அளவில், 30 ஆயிரம் ஹக்டர் வரை நெல் சாகுபடி செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, 18,000 ஹக்டேர் சாகுபடி நடந்துள்ளது. இந்நிலையில், கடந்த, ஒரு வாரத்துக்கு மேலாக தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இம்மழையால், தண்ணீர் கட்டுதல், நடவுப்பணி, களை அகற்றுதல் போன்ற பணிகள் சுலபமாகும்.
இம்மழை குறித்து, வேளாண் இணை இயக்குனர் கார்த்திகேயன் கூறியதாவது:
- இம்மழை, மொத்த விவசாயத்துக்கும் ஏற்றதாகும். நெல் நடவு செய்துள்ள விவசாயிகள், இன்னும், 40 நாட்களுக்கு மருந்து அடிக்க தேவை இல்லை எனும் அளவுக்கு மழை பெய்துள்ளது.
- இம்மழையால், பூச்சி தாக்குதல் போன்ற பிரச்னை எழாது.களை எடுத்துவிட்டு, 15 நாட்களுக்கு ஒரு முறை என, மூன்று முறை, வேப்பம் புண்ணாக்கு கலந்த யூரியாவை மேலுரமாக இட வேண்டும்.
- ஒரு ஏக்கருக்கு, 12 கிலோ யூரியா, 3 கிலோ வேப்பம் புண்ணாக்கு சேர்த்து தெளித்தால், அதிகமாக துார்கட்டி, நல்ல விளைச்சல் தரும். பிற பயிர்களுக்கும், இம்மழை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது.
- பூச்சி தாக்குதலை மட்டும் கண்காணித்து, மருந்து அடித்தால் நல்ல மகசூல் பெறலாம்.
- தற்போதைய மழை மற்றும் தொடர் வளர்ச்சிக்கு, அனைத்து பயிருக்கும் தேவையான உரம், ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. தட்டுப்பாடு இன்றி, உரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்