பருத்தியில் மாவு பூச்சி கட்டுப்பாடு

மாவு பூச்சியை பற்றியும் அதனை கட்டு படுத்தும் வழிமுறைகளை பற்றியும் ஏற்கனவே படித்துள்ளோம். இதோ, பருத்தியில் மாவு பூச்சி பற்றி ஒரு கட்டுரை

மாவுபூச்சியின் அறிகுறிகள்

  • உங்கள் பருத்தியில் எறும்பு நடமாட்டம் உள்ளதா?
  • நுனிக்கிளைகள் கொத்தாக உள்ளனவா?
  • வெயில் நேரத்தில் இலைகள் பளபளப்பாக மின்னுகின்றனவா?
  • பஞ்சுபோல் அடை, அடையாக நுனிக்குருத்து இலைகள், காய்களில் ஒட்டிக் கொண்டிருக்கின்றனவா?

அப்படியென்றால் உங்கள் பருத்திப்பயிரில் மாவுப்பூச்சி தாக்குதல் உள்ளது என தெரிந்துகொள்ளலாம்.
மாவுப்பூச்சி தாக்குதல்

  • பொதுவாக மாவுப்பூச்சி தாக்குதல் துவக்கத்தில் இங்கும் அங்குமாக ஒரு சில செடிகளில் மட்டுமே காணப்படும்.
  • நுனிக்குருத்து, இலைகள், காய்கள் ஆகியவற்றில் இப்பூச்சி தோன்றி சாற்றை உறிஞ்சும்.
  • இதனால் தாக்கப்பட்ட செடிகள் மஞ்சள் நிறமாக மாறி, வாடி காய்ந்துவிடும். சில சமயங்களில் இலைகள் காய்கள் உதிர்ந்துவிடும்.
  • இப்பூச்சி கூட்டம் கூட்டமாக பஞ்சுபோல் அடையாக இலை மற்றும் தண்டுகளில் ஒட்டிக்கொண்டிருக்கும்.

பரவும் விதம்:

  • மாவுப்பூச்சிகள் வெளியேற்றும் தேன் போன்ற துளிகள் இலைகளில் படிந்து பளபளவென்று மின்னுகின்றன.
  • இத்தேன் போன்ற துளிகளை குடிக்க வருகின்ற எறும்புகள் மாவுப்பூச்சியின் குஞ்சுகளை அடுத்த செடிகளுக்கு எடுத்துச்சென்று பரப்பிவிடுகின்றன.
  • அருகில் அறுவடை முடிந்தபின்னரும் அகற்றப்படாத கத்தரி, பருத்தி, வெண்டை செடிகள் இருப்பின் அவற்றில் மாவுப்பூச்சிகள் பெருகி, காற்று மற்றும் மனித நடமாட்டம் மூலம் அருகிலுள்ள புதிய பயிர்களுக்குப் பரவுகின்றன.

தாக்கப்படும் பிற பயிர்கள்:

பருத்தியைத்தவிர வெண்டை, புடலை, கோவை, செம்பருத்தி, புகையிலை, வாழை, கொய்யா, சீத்தாப்பழம் போன்ற பயிர்களிலும் குரோட்டன்ஸ், நாயுருவி போன்ற செடிகளிலும் காணப்படுகின்றது.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

  • வயலைச் சுற்றிலும் நன்கு உயரமாக வளரக்கூடிய சோளப் பயிரினை நெருக்கமாக வேலி போல் பயிரிட்டால் அரண் போல் இருந்து காற்று மூலம் பரவும் மாவுப்பூச்சிகள் வயலினுள் வருவது தடுக்கப்படும்.
  • மக்காச்சோளம், தட்டைபயறு போன்றவற்றினை வாய்க்கால் வரப்புகளில் ஆங்காங்கே பயிரிட்டால் முறையே கிரைசோபா, பொரிவண்டு போன்ற நன்மை தரும் பூச்சிகள் பெருகி மாவுப்பூச்சிகளின் பல்வேறு பருவங்களைக் கட்டுப்படுத்துகின்றன.
  • காற்று மூலம் பரவும் மாவுப்பூச்சிகளை கண்காணிக்க நெடுஞ்சாலை மஞ்சள் நிறம் பூசப்பட்ட டப்பாக்களில் விளக்கெண்ணெய் தடவி ஏக்கருக்கு ஐந்து என்ற அளவில் இரண்டடி உயரக் குச்சிகளில் கவிழ்த்து வைக்க வேண்டும்.
  • பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிகமாக தழைச்சத்து உரங்களை இடுவது தவிர்க்கப்பட வேண்டும்.
  • இதனைக் கட்டுப்படுத்த மீதைல் பாரத்தியான் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு மூன்று மில்லி வீதம் அல்லது குளோர்பைரிபாஸ் மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஐந்து மில்லி வீதம் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு பயிர் முழுவதும் நனையும்படி தெளிக்க வேண்டும்.
  • மருந்துக்கரைசல் பயிரின் பாகங்கள் மற்றும் மாவுப்பூச்சியின் மீதுள்ள மாவு போன்ற படலத்தினுள் நன்கு பரவிப் படிவதற்காக வேளாண்மைக்கான திரவ சோப்புகளான சாண்டோவிட், இன்ட்ரான், ஸ்டிக்கால், தனுவெட் போன்றவற்றுள் ஏதேனும் ஒன்றினை ஒரு லிட்டர் மருந்து கரைசலுக்கு கால் மில்லி வீதம் சேர்த்துக் கலக்கிக் கொள்ள வேண்டும். 10-15 நாட்கள் கழித்து மீண்டும் மருந்து தெளிக்க வேண்டும்.
  • கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க பயிரின் வளர்ச்சியினைப் பொருத்து ஏக்கருக்கு 200 முதல் 400 லிட்டர் வரை மருந்துக்கரைசல் தேவைப்படும்.

ந.முருகேசன், பேராசிரியர் மற்றும் தலைவர், பருத்தி ஆராய்ச்சி நிலையம், ஸ்ரீவில்லிபுத்தூர்-626 125.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *