மானாவாரி பருத்தி சாகுபடி செய்வதற்கு மண் பரிசோதனை அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத் திட்ட ஒருங்கிணைப்பாளர் இரா. மாரிமுத்து வெளியிட்ட செய்திக்குறிப்பு:
எங்கள் அறிவியல் மையமானது, பருத்தி சாகுபடியில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து பல்வேறு ஆய்வுகளைச் செய்கிறது.இந்த ஆய்வுகளின் முடிவுப்படி, மானாவாரிப் பருத்தி பயிருக்கு மண் பரிசோதனை மிகவும் அவசியமாகும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் பருத்தி பயிரிடும் கரிசல் மண் வகை அதிகளவிலும், செம்மண் வகை ஒரு சில பகுதிகளிலும் காணப்படுகிறது.
மண் பரிசோதனை செய்யும்போது, மண் ஆய்வக வல்லுநர்கள் வயலில் தழை, மணி, சாம்பல் மற்றும் நுண்ணூட்டச் சத்து என்னென்ன அளவுகளில் உள்ளன, எதிர் வரும் பருவத்தில் பயிரிட உள்ள பயிருக்கு எவ்வளவு உரம் தேவை என்பதைத் தெளிவாக கண்டறிந்து அறிக்கை தருவர்.
இதன்படி பயிருக்கு உரமிடும்போது பயிர் செழிப்பாகவும், தேவையில்லாத உர செலவு குறைவு, மண்ணின் தரம் கெடுவதையும் தவிர்க்க முடியும்.
ஏக்கருக்கு ரூ. 1,000 முதல் ரூ. 1,500 வரையிலான உரச் செலவைக் குறைந்து, குறைந்த செலவில் அதிக வருமானமும் பெற முடியும்.
மேலும் தழைச் சத்தான யூரியாவை பருத்திப் பயிருக்கு அதிகளவில் இடும்போது, பருத்தியில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் அதிகளவில் தாக்கி, சேதத்தை ஏற்படுத்துவதுடன், அதைக் கட்டுப்படுத்த அதிகளவில் பூச்சி மருந்து தெளிப்பதால் செலவு கூடுவதுடன் மகசூல் குறைந்து, குறைந்த வருமானமே பெற முடியும்.
எனவே, எதிர் வரும் பருவத்தில் பருத்தி பயிரிடும் விவசாயிகள் மண் பரிசோதனை செய்து அதிக லாபம் பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு, வேளாண் அறிவியல் மையத்தை நேரிலோ அல்லது 04328293251, 04328293592, 04328292365 ஆகிய எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்