தென்னிந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் அரிட்டாபட்டி மலையில் மட்டுமே அரிய வகை ‘லகர் ஃபால்கன்’ பறவை கூடு கட்டி வசித்து வருவதாக பறவையியல் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ளது அரிட்டாபட்டி மலை. இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான சமண சிற்பங்கள், படுக்கைகள், தமிழ் பிராமி கல்வெட்டுகள், வட்டெழுத்து கல்வெட்டுகள், குடவரைக் கோயில்கள் இங்கே காணப்படுகின்றன. இது போன்ற புராதனச் சின்னங்களுக்குப் பெயர் பெற்ற மலையில் கல், மண், மரங்கள் மட்டுமின்றி அதையும் கடந்து பல அரிய வகை உயிரினங்களும் வசித்து வருகின்றன. அதில் ஒன்று ‘லகர் ஃபால்கன்’ பறவை.
இந்தியா முழுவதும் பரவலாகக் காணப்பட்ட இப்பறவைகள் தற்போது ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் மட்டுமே காணப்படுகின்றன. ஆனால் மிக அரிதாக அரிட்டாபட்டி மலையில் இந்தப் பறவைகள் வசித்து வருகின்றன.
வேட்டைப் பறவைகளான கழுகு இனத்தைச் சேர்ந்த இவை மலை உச்சியில் உள்ள பாறைகளின் இடுக்குகளில்தான் கூடு கட்டும். தமிழ்நாட்டின் பிற பகுதிகள் மட்டுமின்றி தென்னிந்தியாவில் வேறு எங்குமே இந்தப் பறவை இனங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பறவையியல் ஆர்வலர் ரவீந்திரன் கூறிய தாவது:
‘லகர் ஃபால்கன்’ பறவைகள் ‘லகுடு’ என அழைக்கப்படுகின்றன. கடந்த இரண்டரை ஆண்டுகளுக் கும் மேலாக இந்தப் பறவைகளைத் தொடர்ந்து அரிட்டாபட்டி மலையில் கண்காணித்து வருகிறோம். எலி, பாம்பு ஆகியவற்றை வேட்டையாடி உண்கின்றன. இதன் வேட்டையாடும் பாணி வித்தியாசமானது. பறவைகள் பறக்கும்போதே வேட்டையாடும் திறன் கொண்டவை. சூழல் மற்றும் விவசாயத்துக்கு மிகவும் பயனுள்ள இந்தப் பறவைகள் மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் பறக்கும்.
இப்பறவைகள் சில ஆண்டுகளுக்குமுன் இந்தியா முழுவதும் பரவலாகக் காணப்பட்டன. ‘லகர் ஃபால்கன்’ பறவைகளை மதுரை நகரிலேயே 1970-ம் ஆண்டில் காண முடிந்தது. ஆனால் இவற்றின் வாழ்விடங்களை நாம் அழித்ததன் காரணமாக தற்போது இந்தப் பறவைகளை மிக அரிதாகவே காண முடிகிறது. இந்நிலை நீடித்தால் பிணம் தின்னிக் கழுகுகளைப் போலவே இந்த இனமும் அழியும் நிலை ஏற்படும்.
எனவே, அனைத்து உயிரினங்க ளுக்கும் சொந்தமான இந்த உலகத்தில் எந்த உயிரினத்தையும் அழியாமல் பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் பொறுப்பு.
பறவையியல் ஆர்வலர் ரவீந்திரன்.
மலையைக் கடவுளாக வணங்கும் அரிட்டாபட்டி பகுதி மக்கள் இந்த மலையை பாதுகாத்து வருகின்றனர். அவர்களது இந்த மகத்தான பணியால் அரிட்டாபட்டி மலை பல உயிரினங்களுக்கு வாழ்விடமாகவும், பாதுகாப்பிட மாகவும் விளங்குகிறது. இதேபோல் பொறி வல்லூறு, ராசாளி ஆகிய பறவையினங்களும் குளிர் மற்றும் கோடை காலங்களில் அரிட்டாபட்டியைச் சுற்றியுள்ள மலைகளுக்கு வந்து செல்கின்றன என்றார்.
நன்றி: ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்