பூசணி சாகுபடி

தமிழர்களின் பாரம்பரிய உணவு முறைகளில் பயன்படுத்தப்படும் காய்கனிகளில் பூசணி வகைகளுக்கு தனியிடம் உண்டு. திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகளிலும் ஹோட்டல்கள் போன்ற அதிகளவில் உணவு தயாரிக்கும் இடங்களில் பூசணி வகைகளைப் புறந்தள்ள முடியாது.

சாம்பல் பூசணி சாகுபடிகுறித்து, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

  • சாம்பல் பூசணியில் கோ 1, கோ 2 ஆகிய ரகங்கள் உள்ளன.
  • நல்ல ஆழமான இருமண்பாட்டு நிலத்தில் சாம்பல் பூசணி நன்கு வளரும்.
  • மானாவாரியில் பயிரிட களிமண் கலந்த நிலம் சிறந்தது.
  • சாம்பல் பூசணியின் வளர்ச்சிக்கு அதிக குளிரில்லாத, ஓரளவு வெப்பமான பருவநிலை மிகவும் உகந்தது.
  • சிறந்த மகசூலுக்கு கார அமிலத் தன்மை 6.5 – 7.5 இருத்தல் வேண்டும்.
  • ஜனவரி, ஜூலை மாதங்களில் விதைக்கலாம்.

விதையளவு:

  • ஹெக்டேருக்கு 2.5 கிலோ விதைகள் தேவை.
  • விதைக்கும் முன்னர் கிலோ விதைக்கு 2 லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் அரைமணி நேரம் ஊறவைத்து, 6 நாள்கள் வைத்திருந்து பிறகு விதைக்க வேண்டும்.
  • நிலத்தை 3 முதல் 4 முறை நன்கு உழுத பின்னர் 2 மீட்டர் இடைவெளியில் 60 செ.மீ. அகலமுள்ள நீண்ட வாய்க்கால்கள் அமைக்க வேண்டும்.
  • இந்த வாய்க்கால்களை ஒட்டி 1.5 மீட்டர் இடைவெளியில் 30 செ.மீ. நீள, அகல, ஆழக் குழி பறிக்க வேண்டும்.
  • 2 x 1.5 மீட்டர் (வரிசைக்கு வரிசை 2 மீட்டர் செடிக்குச் செடி 1.5 மீட்டர்) இடைவெளி விட்டு விதைக்க வேண்டும்.
  • குழிக்கு 3 – 6 விதைகள் நட்டு, முளைத்தவுடன் 3 செடிகளை மட்டும் வைத்துவிட்டு மற்றவற்றை நீக்க வேண்டும்.
  • குழி ஒன்றுக்கு 10 கிலோ தொழு எரு மற்றும் கலப்பு உரம் (6:12:12) தழை: மணி: சாம்பல் சத்து), 100 கிராம் இட்டு நீர் பாய்ச்ச வேண்டும். 30 நாள்களுக்கு பின்பு குழிக்கு 10 கிராம் யூரியா என்ற அளவில் மேலுரம் இடவேண்டும்.
  • இப்கோ காம்ப்ளக்ஸ், யூரியா போன்ற உரங்களை வேளாண் துறையினரின் ஆலோசனைப்படி பயன்படுத்தலாம்.

நீர் நிர்வாகம்:

  • பூசணி விதைகளை விதைக்கும் முன் குழிகளுக்கு நீர் பாய்ச்ச வேண்டும்.
  • விதைத்த அடுத்த நாள் கண்டிப்பாக நீருற்ற வேண்டும்.
  • பிறகு 3-ம் நாள் உயிர்த் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
  • முளைப்புத் திறன் வந்தவுடன் வாய்க்கால்களின் மூலம் வாரம் ஒருமுறை நீர் பாய்ச்சவேண்டும்.

பின்செய்நேர்த்தி:

  • செடிகளைச் சுற்றி 15 நாள்களுக்கு ஒருமுறை களைக்கொத்தியால் களையெடுக்க வேண்டும்.
  • கொடிகளை வாய்க்காலில் படரவிடாமல் அவ்வப்போது எடுத்து இரண்டு வாய்க்கால்களுக்கு இடைப்பட்ட நிலப்பரப்பில் படரச் செய்ய வேண்டும்.
  • விளைச்சல் அதிகரிக்க விதைத்த 15 ஆம் நாளில் 10 லிட்டர் நீருக்கு 2.5 மில்லி என்ற அளவில் எதிரில் என்னும் வளர்ச்சி ஊக்கியை நான்குமுறை ஒரு வார இடைவெளியில் தெளிக்கவேண்டும்.
  • இதனால் கொடிகளில் பெண் பூக்கள் அதிகம் தோன்றி, அதிகக் காய்கள் பிடித்து விளைச்சல் அதிகரிக்கும்.

பயிர்ப் பாதுகாப்பு:

  • பூசணியில் வண்டுகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்த மாலத்தியான் 1 மில்லி அல்லது டைமெத்தோயேட்ட 1 மில்லி அல்லது மீதைல் டெமட்டான் 1 மில்லி மருந்து இவற்றுள் ஏதேனும் ஒன்றுடன் 1 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கவேண்டும்.
  • பழ ஈக்களைக் கட்டுப்படுத்த மாலத்தியான் 1 மில்லி மருந்தை 1 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
  • பழ ஈ தாக்கப்பட்ட பழங்களைச் சேகரித்து அழிக்கவேண்டும். பழ ஈக்களின் தாக்குதல் கோடைக்காலத்தில் குறைவாகவும், மழைக்காலங்களில் அதிகமாகவும் காணப்படும். எனவே இதை அனுசரித்து பயிரிட வேண்டும்.
  • எக்காரணத்தைக் கொண்டும், டிடிசி, பிஎச்சி, கந்தகம், தாமிரத்தைக் கொண்ட பூச்சி, பூசணக்கொல்லி மருந்துகளைத் தெளிக்கக்கூடாது.
  • இது, கொடிக்கு ஆபத்தை விளைவிக்கும். சாம்பல்நோயைக் கட்டுப்படுத்த கார்பன்டாசிம் 0.1 சதம் மருந்தைத் தெளிக்கவேண்டும்.

அறுவடை:

  • காய்கள் முற்றிய நிலையை அவற்றின் மேல் பரப்பில் உருவாகும் சாம்பல்போன்ற பொருள் உதிரத் தொடங்குவதிலிருந்து கண்டுபிடிக்கலாம்.
  • விதைத்த 90ஆம் நாளிலிருந்து காய்களை அறுவடை செய்யலாம்.
  • சாதாரண வெப்ப நிலையில் காய்களை நல்ல காற்றோட்டமான அறைகளில் ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்காமல் இடைவெளியிட்டு சேமிப்பதன் மூலம் 4முதல் 5 மாதங்கள்வரை பாதுகாக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *