மஞ்சளில் நுண்ணூட்டச் சத்து குறைபாடு

வணிக ரீதியான பயிரில் மஞ்சள் முக்கியப் பங்கு வகிக்கிறது.

மஞ்சள் பயிரில் ஏற்படும் நுண்ணூட்டச் சத்து குறைபாட்டால் மஞ்சள் மகசூல் அதிகளவில் பாதிக்கப்படுகிறது. தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் ம.சங்கீதா, மஞ்சள் பயிரில் ஏற்பட்டுள்ள நுண்ணூட்டச் சத்து குறைபாடு, அவற்றை நிவர்த்தி செய்வது குறித்து கூறியது:

  • ஓர் ஏக்கரில் சராசரியாக 2 முதல் 2.5 டன் உலர் மஞ்சள் கிழங்கு மகசூல் கிடைக்கும்.
  • சரியான உர மேலாண்மை, பயிர் வளர்ச்சிப் பருவத்தில் சரியான நீர்ப்பாசன முறைகளைப் பின்பற்றாததால் மஞ்சள் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்படுகிறது.
  • பொதுவாக மஞ்சள் பயிரானது மேலோட்டமான வேர் அமைப்பு கொண்டிருந்தாலும், நீண்ட காலப் பயிராக சாகுபடி செய்வதாலும், மிகக் குறைந்த இடத்தில் அதிக அளவு உலர் பொருளை உற்பத்தி செய்யக்கூடிய பயிராக இருப்பதாலும் மண்ணிலிருந்து அதிக சத்துக்களை எடுத்துக் கொள்கிறது.
  • மேலும், மற்ற பயிர்களைக் காட்டிலும் மஞ்சள் பயிருக்கு உரத் தேவை அதிகம். எந்தவொரு பயிரும் நன்றாக வளர்ந்து அதிக மகசூல் கிடைக்க பல்வேறு வளர்ச்சி நிலைகளில் மொத்தம் 16 வகையான ஊட்டச் சத்துக்கள் தேவைப்படுகின்றன.
  • பயிரின் வளர்ச்சிக்கு அதிகளவில் தேவைப்படும் பேரூட்டச் சத்துக்களான கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், தழை, மணி, சாம்பல், சுண்ணாம்பு, மக்னீசியம், கந்தகச் சத்து மற்றும் மிகக் குறைந்த அளவில் தேவைப்படுக் கூடிய நுண்ணூட்டச் சத்துக்களான இரும்பு, துத்தநாகம், தாமிரம், போரான், குளோரின் ஆகியவை தேவை.
  • தற்போதைய காலகட்டத்தில் அனைத்து வகையான பயிர்களிலும் நுண்ணூட்டச் சத்து குறைபாடு அதிக அளவில் காணப்படுகின்றன.
  • இதற்கு மிக முக்கியக் காரணங்கள் நவீன விவசாய முறையில் பின்பற்றக் கூடிய தீவிர சாகுபடி முறை, அதிக விளைச்சல் தரக்கூடிய வீரிய ஒட்டு ரகங்களைப் பயன்படுத்துதல், போதுமான அளவு இயற்கை உரம் அல்லது தொழுவுரம் இடாமை, தொடர்ந்து பேரூட்டங்களை மட்டுமே தரக்கூடிய ரசாயன உரங்களைப் பயன்படுத்துதல், பயிரின் வளர்ச்சி பருவம், காலநிலை மாற்றம் ஆகியவை ஆகும்.
  • இவற்றால் மண்ணில் உள்ள நுண்ணூட்டச் சத்துக்கள் கிடைக்காததால் பயிரில் ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கான அறிகுறிகள் அதிகளவில் தோன்றுகின்றன.
  • தற்போது தருமபுரி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மஞ்சள் பயிரில் பரவலாக இரும்பு, துத்தநாக நுண்ணூட்டச் சத்துக்களின் குறைபாட்டுக்கான அறிகுறிகள் அதிகளவில் தென்படுகின்றன.
  • எனவே, விவசாயிகள் இந்த நுண்ணூட்டச் சத்துக்களின் குறைபாடு அறிகுறிகளை அறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதன் மூலம் அதிக மகசூலைப் பெறலாம்.
  • துத்தநாக சத்து: துத்தநாக சத்துக் குறைபாடு மண்ணின் அமில கார நிலை 7-க்கு மேல் உள்ள நிலங்களிலும் அதாவது களர் நிலங்களிலும், களிமண் மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் உள்ள நிலங்களிலும் அதிகமாகக் காணப்படும்.
  • மேலும், இந்தச் சத்து குறைபாடானது தண்ணீர் பற்றாக்குறை அதிகமுள்ள காலங்களில் பரவலாகக் காணப்படும்.
  • இதனால், பயிர்கள் வளர்ச்சி குன்றி, குட்டையாகக் காணப்படும். இலைகள் அளவில் சிறியதாகவும், கணுவிடைப் பகுதியின் நீளம் குறுகியும் காணப்படும்.
  • மேலும், இளம் இலைகள் மஞ்சள் நிறமாக தோற்றமளிக்கும். இலைகள் மேல் நோக்கியோ அல்லது கீழ் நோக்கியோ வளைந்து காணப்படும்.

நிவர்த்தி முறை:

  • இத்தகைய அறிகுறிகள் தெரிந்தவுடன் 0.5 சத துத்தநாக சல்பேட் கரைசலை அதாவது 5 கிராம் துத்தநாக சல்பேட்டை ஒரு லிட்டர் நீரில் கரைத்து மாலை வேளையில், 10 நாள்கள் இடைவெளியில், அறிகுறிகள் மறையும் வரை தொடர்ந்து இலைகள் மீது தெளிக்க வேண்டும்.
  • அடுத்த சாகுபடி செய்யும் பயிர்களில் துத்தநாக சத்து குறைபாடு வராமல் தடுக்க ஹெக்டேருக்கு 15 கிலோ துத்தநாக சல்பேட் உரத்தை அடியுரமாக இட வேண்டும்.
  • மேலும், இதை ஊட்டமேற்றிய தொழுவுரமாக 1:1 என்ற விகிதத்தில் கலந்து மிதமான ஈரப்பதத்தில் 20-25 நாள்கள் வைத்திருந்து பயிருக்கு இடுவதன் மூலம் உரப் பயன்பாட்டை அதிகரிக்கலாம்.

இரும்புச் சத்து:

  • இரும்புச் சத்து குறைபாடானது மணல் பாங்கான நிலங்கள், சுண்ணாம்புச் சத்து அதிகமுள்ள நிலங்கள், களர் உவர் நிலங்களில் அதிகமாகக் காணப்படும்.
  • இந்த சத்துக் குறைபாட்டால் புதியதாக வெளிவரும் துளிர்கள் வெளுத்து மஞ்சள் அல்லது வெள்ளை நிறமாக மாறிவிடும்.
  • இலைகளின் நரம்புகளுக்கு இடைப்பட்ட பகுதிகள் வெளிறியும், இலைகள் நரம்புகள் பச்சை நிறமாகவும் காணப்படும்.
  • இந்த குறைபாடு அதிகமுள்ள நிலங்களில் மஞ்சள் பயிரானது வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும்.

நிவர்த்தி முறை:

  • இரும்புச் சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்ய 0.5 சத இரும்பு சல்பேட் கரைசலை அதாவது, 5 கிராம் இரும்பு சல்பேட்டை ஒரு லிட்டர் நீரில் கரைத்து மாலை நேரங்களில் இலைகளின் மீது நன்றாகபடும்படி தெளிக்க வேண்டும்.
  • இவ்வாறு 10 நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும். மேலும், அடுத்தமுறை பயிர் செய்யும்போது இத்தகைய குறைபாடு தோன்றுவதைத் தவிர்க்க ஹெக்டேருக்கு 30 கிலோ இரும்பு சல்பேட் உரத்தை அடியுரமாக இடவேண்டும் என்றார் அவர்.

மேலும் விவரங்களுக்கு நா.தமிழ்செல்வன், பேராசிரியர் மற்றும் தலைவர் வேளாண்மை அறிவியல் நிலையம், பாப்பாரப்பட்டி, தருமபுரி மாவட்டம் என்ற முகவரியிலோ அல்லது 04342245860 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *