மரபணு மாற்றம் – இந்தியாவை மலடாக்கும் சதி

மரபணு மாற்றம் பற்றிய மசோதா (Biotechnology Regulatory Authority of India – BRAI bill) எந்த நேரத்திலும் மக்களவையில் வர இருக்கும் நேரம் இது. மன்மோகன் சிங்க் UPA அரசாங்கம் நம் நாடியே தாரை வாற்று கொடுத்து விட்டு தான் ஒழியும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார். இந்த மசோதாவை பற்றி ஏற்கனவே நாம் படித்து உள்ளோம். இதோ, தினமணியில் வந்துள்ள ஒரு கட்டுரை.

மரபணு மாற்றம் – இந்தியாவை மலடாக்கும் சதி

வேளாண்மையில் உற்பத்தியை உயர்த்த நாம் உண்ணும் அனைத்துப் பொருள்களிலும் விஷத்தை உருவாக்கும் புதிய உயிரித்தொழில் நுட்பம் உண்மையில் மனித உயிர்களைக் கொல்லும் நுட்பமாக மாறிவருவதை இந்தியர்கள் கவனிப்பதாகத் தெரியவில்லை. வேளாண்மையில் விஷத்தைப் பரப்பும் மரபணு மரண ஆராய்ச்சிக்கு மத்திய அரசு ஒப்புதல் தந்துவிட்ட சூழ்நிலையில், நாம் உண்ணும் பழங்கள், காய்கறிகள், பருப்பு, தானியங்களில் மெல்ல மெல்ல அணுசக்தி விஷமும் கதிர்வீச்சாகப் பரவுவதை யாரேனும் கவனித்தது உண்டா? பசுமைப்புரட்சியின் அலங்கோலத்தால் வீரிய ரக விதை, ரசாயன உரம், உயிர்க்கொல்லிப் பூச்சி மருந்துகள் காரணமாக விஷப்பரவல் மண், மனிதன், பறவை, விலங்கினம் என்று நமது உயிர்ச்சூழலே நோயுற்று அதிலிருந்து நாம் மீள்வதற்குள் மரபணு மாற்றம் என்ற அடுத்த விஷம் தயாராகிவிட்டது.

“”வாழ்வதெல்லாம் வைத்தியத்துக்கே” என்ற அவலம் நம்மைச் சூழ்ந்துவிட்டது. மரபணு மாற்றம் என்பது பல புதிய அயல் அணுக்களைத் தோற்றுவிக்கும். பன்முகமான விஷப்பரவலைத் தோற்றுவித்து அதனால் கல்லீரல், சிறுநீரகம், கணையம், இதயம், ரத்தக்குழாய் எல்லாம் பழுதுபடும். புற்றுநோய் அபாயமும் உண்டு. பசுமைப் புரட்சி கக்கிய விஷம் நாகப்பாம்பு என்றால், மரபணு மாற்றம் விளைவிக்கும் விஷம் கட்டுவிரியன்.

இந்தியா ஏமாந்த நாடு என்பதாலும், இந்திய விஞ்ஞானிகள் பணத்துக்கு விலைபோகக் கூடியவர்கள் என்பதாலும் அமெரிக்கா இந்தியாவை மலடாக்க முனைந்துவிட்டது. இந்தியாவில் நாம் தினமும் உண்ணக்கூடிய பொருள்களில் மரபணு மாற்றம் செய்த விதைப்பயன்களின் விவரங்களை அறிந்தால் மூச்சு நின்று மூர்ச்சையாகி விடுவோம். இந்தியாவில் உள்ள அனைத்து வேளாண்மை ஆய்வு நிலையங்கள் மட்டுமல்ல; வேளாண்மைத் தொடர்பு இல்லாத அணுமின் ஆய்வு நிறுவனங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள் போன்றவை இணைந்து யு.எஸ். உயிரித் தொழில்நுட்ப உடன்பாட்டின் அடிப்படையில் உண்ணும் பொருள்களிலும் கதிர்வீச்சைப் பாய்ச்சுகின்றன.

இந்தியாவின் மரபணு மாற்றத் தொழில்நுட்பத் தகவல் மையமான “”இக்மோரிஸ்” வழங்கும் தகவலின்படி, மிகவும் புனிதமான ஏற்றுமதி மதிப்புள்ள ஆயுர்வேத மூலிகையான அசுவகந்தா உள்பட, அரிசி, கோதுமை, மக்காச்சோளம், துவரை, உளுந்து, கொண்டைக்கடலை, தட்டாம்பயறு, கேழ்வரகு, கம்பு, மிளகு, ஏலக்காய், பிராமி, தேயிலை, கரும்பு, சோளம், நிலக்கடலை, சோயா, கடுகு, பருத்தி, சணல், மூங்கில், ஆமணக்கு, ரப்பர், புகையிலை…. உள்ளிட்ட 74 பயிர் வகைகளில் மரபணு ஆய்வுகள் நிகழ்த்த அனுமதிக்கப்பட்டு – எந்தவிதமான பாதுகாப்பு முறையும் இல்லாமல் விஷம் பரப்பும் திட்டம் வேகமாகப் பரவி வருகிறது.

இப்படிப்பட்ட ஆய்வுகளுக்கு யார் யார் நிதி உதவி தருகிறார்கள்? யு.எஸ். தொழில்நுட்ப உடன்பாட்டுக்கு மக்களின் வரிப்பணம் செலவாகிறது. இந்தியாவில் ஏறத்தாழ 400 ஆராய்ச்சி அமைப்புகள் எந்தவிதமான பாதுகாப்பு விதிகளையும் கையாளாமல் மரபணு மாற்றச் சோதனையில் ஈடுபடுகின்றன.

அமெரிக்காவில்கூட மரபணு ஆய்வு சோதனை வயல்கள் உகந்த பாதுகாப்பு விதிகளை மீறாமல் செயல்படுகின்றன. பல்வேறு தனியார் அமைப்புகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் பாபா அணு ஆராய்ச்சி மையம், ராணுவ ஆராய்ச்சி – வளர்ச்சி நிறுவனம், நபார்டு நிதி உதவி செய்கின்றன. அமெரிக்கா தவிர, வேறு பல மேற்கு நாடுகளிலிருந்தும் பணம் வருகிறது. இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்துக்கு பட்ஜெட் ஒதுக்கீடு உண்டு. மத்திய அரசின் பயோ டெக்னாலஜி துறை மானியம் வழங்கி மரபணு ஆய்வை ஊக்குவிக்கிறது.

மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம் எதுவெனில், இந்திய மண் முழுவதிலும் – இந்தியாவே மரபணு மாற்றம் தொடர்பான விஷப்பரீட்சையின் கூடாரமாகிவிட்டது.

இந்தியாவைவிட ஏழ்மையான நாடுகளில்கூட இந்த விஷப்பரீட்சை இப்படி நிகழவில்லை. ஏன் இந்த விஷப்பரீட்சை என்று கேட்டால், “”இந்தியாவில் இரண்டாவது பசுமைப்புரட்சிக்கு இதுவே வழி” என்று பதில் கூறி, அவசரம் அவசரமாக எல்லா பாதுகாப்பு விதிகளையும் புறக்கணித்துவிட்டு இரண்டாவது விஷப்பரவல் தொடங்கிவிட்டது.

இரண்டாவது விஷப்பரவல் எதுவெனில், காற்று மூலம் மரபணு மாற்றப் பயிர்களின் மலர்களிலிருந்து வெளிப்படும் மகரந்தப் பொடி காற்றில் பரவாமல் இருக்க மரபணு மாற்றச் சோதனை வயல்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் மரபணு மாற்றம் செய்யப்படாத பயிர்களைப் பயிர் செய்து அந்த இடத்துக்கும் அப்பால் உள்ள தனியார், பொது நிலங்களில் மரபணு மாற்றத் துகள் பரவாதபடி கவனிக்க வேண்டும்.

இந்தியாவில் சுமார் 400 மரபணு மாற்றச் சோதனை வயல்கள் என்ற போர்வையில் மரபணு விஷத் துகள்களைப் பரவவிட்டு, நமது இயற்கையான பாரம்பரிய ரகங்களை முற்றிலும் அழித்துவிட்டு, இனி எந்த விதை என்றாலும் மரபணு மாற்ற விதை மட்டுமே அங்காடியில் விற்கப்பட வேண்டும் என்ற வெறித்தனம் விதை நிறுவனங்களுக்கு விலை போய்விட்ட விஞ்ஞானிகளிடம் உள்ளது.

இந்த விஷயத்தில், அதாவது இந்தியாவுக்குள் மரபணு மாற்ற விஞ்ஞானம் வரக்கூடாது என்ற கொள்கையுடன் போராடிக் கொண்டிருக்கும் வேளாண்மைச் சூழலியல்வாதிகளுடனும், விழிப்புணர்வுள்ள இயற்கை விவசாயிகளுடனும் அரசியல்வாதிகளும் சேர்ந்துள்ளது நல்ல திருப்பம்.

சிவப்புக் கொடி காட்டியவர் வேறு யாருமல்ல, பிகார் முதல்வர் நிதீஷ் குமார்தான். சமஷ்டிப்பூர் அருகில் உள்ள புசா நிறுவனத்தில் – இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் கிளை அமைப்புக்குரிய லிச்சிலான் தோட்டத்தில் மரபணு மாற்ற மக்காச்சோளப் பயிர் சட்டத்துக்குப் புறம்பாக நடப்பட்டிருந்ததை எதிர்த்து பிகார் அரசு மத்திய அரசின் கவனத்தை ஈர்த்தது. சுமார் 600 சதுர மீட்டரில் எத்தகைய எச்சரிக்கை, பாதுகாப்பும் இல்லாமல் மரபணு மாற்றப் பயிர் சாகுபடி செய்யப்பட்டதை எதிர்த்த நிதீஷ் குமார், பிகார் மாநிலத்தில் மாநில உயிரித் தொழில்நுட்ப கூட்டுக் கமிட்டியே இல்லை என்பதால் இது சட்டவிரோதமானது – உச்ச நீதிமன்ற உதவியை நாடுவோம் என்று மத்திய அரசுக்குத் தாக்கீது அனுப்பவே, அப்போது சுற்றுச்சூழல் அமைச்சராயிருந்த ஜெய்ராம் ரமேஷ் உடனே அந்த மக்காச்சோள மரபணு மாற்றச் சோதனை வயலை அழிக்க உத்தரவிட்டார்.

மார்ச் 11-ம் தேதி விடியற்காலை டிராக்டர் மூலம் அந்த மக்காச்சோளப் பயிரை களை வெட்டுவதுபோல் வெட்டி மண்ணுக்குள் புதைத்து, உழுது, உளுந்தும் பயறும் விதைத்துவிட்டு எதுவுமே நடக்காததுபோல் விஞ்ஞானிகள் நடந்துகொண்டனர். உண்மையில் சோதனை வயல் எரிக்கப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு உழவோட்டி விஷப்பயிர்களை மண்ணுக்குள் களையாக வெட்டிப் புதைத்ததையும் நிதீஷ் குமார் கண்டித்துள்ளார். விஷ மக்காச் சோளத்தை அழிக்கும்போது, மாநில விவசாயத் துறைக்குத் தகவல் தராமல் தகாத முறையில் மத்திய அரசு செயல்படுவது ஏன்?

மரபணுப் பயிர் சோதனை வயல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் அரசியல்வாதிகளில் முதன்மையாகத் திகழும் நிதீஷ் குமாருடன் முன்னாள் கேரள வேளாண்மை அமைச்சர் முல்லக்கார ரத்னாகரன், மத்தியப் பிரதேச விவசாய அமைச்சர் ராமகிருஷ்ண குஷ்மாரியா, ஹிமாசலப் பிரதேச அமைச்சர் பிரேம்குமார் தூமதும் கைகோத்துள்ளனர். கேரள முன்னாள் அரசு மரபணு மாற்றத் தொழில் நுட்பத்துக்கே ஒட்டுமொத்தத் தடையை விதித்துள்ளது.

தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், அது திமுக என்றாலும் சரி, அதிமுக என்றாலும் சரி மரபணு மாற்றத் தொழில் நுட்பம் தோற்றுவிக்கும் ஆபத்தைப் பற்றிய உணர்வே இல்லை என்பதாலும், எந்த எதிர்ப்பும் காட்டாமல் மத்திய அரசின் ஆதிக்கத்தை ஏற்கும் சுயநலப் பண்பு ஓங்கியிருப்பதாலும் தமிழ்நாட்டில் மரபணு மாற்றப் பயிர்களின் சோதனை வயல்கள் பொறுப்பற்ற சில வேளாண்மை விஞ்ஞானிகளின் பிடியில் உள்ளன.

விலைபோய்விட்ட விஞ்ஞானிகளிடம் நியாயத்தை எதிர்பார்க்க இயலாது. தமிழ்நாட்டில் கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் மரபணு மாற்றச் சோதனை வயல்கள் உள்ளன. என்ன எச்சரிக்கை? என்ன தற்காப்பு? யாருக்குத் தெரியும்? விஷ மகரந்தப் பரவல் வேலையைக் காண்பித்தால் பூக்கும் தாவரங்கள், தேன் எல்லாம் விஷமாகும். மலட்டு மகரந்தங்கள் மற்ற பயிர்களுக்குப் பரவி – தாய்மைப் பண்புள்ள பயிர்கள் எல்லாம் காயடித்த காளைகளாகும்.

இந்திய விவசாயம் துகிலுரியப்பட்டுவிட்டது. துகிலுரிந்தது வேளாண்மைப் பல்கலைக் கழகங்கள் அல்லவா? எரிக்கப்பட வேண்டியவை மரபணு மாற்றப் பயிர் சோதனை வயல்கள் அல்லவா?

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *