மரவள்ளி சாகுபடியில் பூச்சி கட்டுப்பாடு முறைகள்

பருவ நிலை மாற்றம் காரணமாக அதிகமான உஷ்ணம் நிலவுகிறது. இந்நிலையில் மரவள்ளி பயிரிடும் விவசாயிகள் எத்தகைய பராமரிப்பு முறைகளை கையாள வேண்டும் என்பதை விளக்குகிறார் புதுச்சேரி பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தின் பூச்சியியல் நிபுணர் என். விஜயகுமார்.

மரவள்ளி நடும் முறைகள்

  • மரவள்ளி நடும்போது நல்ல வளர்ச்சி அடைந்த குச்சியை நட வேண்டும்.
  • மரவள்ளிக் குச்சியில் டார்ச் அளவு 33 சதவீதத்துக்கு அதிகமாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அப்படி இருந்தால் பூச்சி தாக்குதல் இருக்காது.
  • குச்சியைப் படுக்க வைத்து நடக்கூடாது. நேராகவும் நடக்கூடாது. சாய்வாக நட வேண்டும். அப்போதான் சாறு உறிஞ்சும் பூச்சுகள் தாக்காது. வைரஸ் நோயும் வராது.
  • விதை கரணைகளை இப்படி தேர்வு செய்து நட்டால் பூச்சி தாக்குதலைக் குறைக்க முடியும்.
  • உஷ்ணம் அதிகமாக இருப்பதால் மரவள்ளியில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் அதிகமாகக் காணப்படுகின்ற. உஷ்ணம் அதிகமாக இருப்பதால் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் இனப்பெருக்கம் அதிகமாக இருக்கும். உஷ்ணம் அதிகமாக இருப்பதால் மரவள்ளி வேர்ப்பகுதியில் ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • மரவள்ளி, கிழங்கு வகை பயிர். பணப்பயிரும்கூட. 9 மாதம் வயது உடையது.
  • 3 முதல் 4 மாதம் உள்ள செடிகளில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் குறிப்பாக செஞ்சிலந்தி,மாவு பூச்சி, வெள்ளை ஈ மற்றும் செதில்பூச்சி உள்ளிட்ட பூச்சிகள் தாக்குகின்றன. இந்த எல்லா பூச்சிகளுக்கும் பற்கள் இல்லை.
  • அதனால் மரவள்ளி இலை, தண்டு பாகத்தில் உள்ள சாற்றை உறிஞ்சி உண்ணும் பழக்கம் உடையவையாக இருக்கின்றன. இதனால் இவை சாறு உறிஞ்சும் பூச்சிகள் என்று அழைக்கப்படுகின்றன. சாறு உறிஞ்சும் பூச்சிகள் சாற்றை உறிஞ்சுவதால் பச்சை நிறத்தில் உள்ள இலைகள் மஞ்சள் நிறத்துக்கு மாறுகிறது. ஒளிசேர்க்கை தடைப்பட்டு மகசூல் பாதிக்கும் நிலை ஏற்படலாம்.

பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள்:

  • வெள்ளை ஈ என்ற பூச்சி மொசைக் வைரஸ் என்ற நச்சு உயிரி நோயைப் பரப்பும்.மரவள்ளி வயலில் முதல் 4 இலைகளை மட்டும் வெள்ளை ஈ தாக்கும். கீழ் இருக்கும் எல்லா இலையையும் மாவு பூச்சி தாக்கும்.
  • செஞ்சிலந்தி தாக்குதல் குறைந்து இருந்தால் டைகோ பால் என்ற மருந்தை 1.5 மி.லி. அளவு எடுத்து 1 லிட்டர் நீரில் கரைத்து அல்லது டெகாசஸ் என்ற மருந்தை 2.5. மி.லி. எடுத்து 1 லிட்டர் நீரில் கரைத்து இலையின் மீது படும்படி மரவள்ளி நடவு செய்த 3, 5, 7 மாதங்களில் தெளிக்க வேண்டும்.
  • செஞ்சிலந்தி தாக்குதல் அதிகமாக இருந்தால் புராபர்கைட் 1.5 மி.லி. எடுத்து 1 லிட்டர் தண்ணீரில் கரைத்து அதனுடன் 2 கிராம் பெவிஸ்டின் மருந்து 1 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
  • செஞ்சிலந்தி தாக்குதல் இருந்தால் இலைகள் கீழ்ப்பக்கமாக வளைந்திருக்கும். வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்த மரவள்ளி வயலைச் சுற்றி மணத்தக்காளி செடி நடலாம். வெள்ளை ஈக்கு அதிகமாகப் பிடித்து மணத்தக்காளி. அந்தச் செட்டியில் ஒட்டிக் கொள்ளும். இது எளிதான வழி. துத்தியும் நடலாம்.
  • வெள்ளை ஈ தாக்காத ஒரு மரவள்ளி ரகம் இப்போது வந்துவிட்டது. கோ டிபி4 என்பது அந்த ரகத்தின் பெயர். இது வெள்ளை ஈக்கு எதிர்ப்புத் தன்மை உள்ள ரகம்.
  • மஞ்சள் வண்ண ஒட்டுப் பொறி 1 ஏக்கருக்கு 40 வரப்பு ஓரங்களில் வைப்பதால் வெள்ளை ஈ கவரப்பட்டு அதில் ஒட்டிக் கொள்ளும்.
  • வெள்ளை ஈ தாக்குதல் அதிகமாக இருக்கும் வயல்களில் டைமீதோஏத் என்ற மருந்தை 2 மி.லி. எடுத்து 1 லிட்டர் நீரில் கரைத்து தெளிக்க வேண்டும். பயிரில் களைகளை அப்புறப்படுத்த வேண்டும்.
  • மாவு பூச்சியை அழிக்க மீன் எண்ணெய் சோப்பு 40 கிராம் எடுத்து 1 லிட்டர் நீரில் கரைத்து கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். அந்த மாவு பூச்சியின் வெண்மை நிற படலம் கீழே கொட்டிக் கொள்ளும்.
  • முசுக்கொட்டை செடி அல்லது பப்பாளி, நெய்வேலி காட்டாமணக்கு வரப்பு ஓரங்களில் வளர்க்க வேண்டும். அதில் மாவு பூச்சி ஒட்டிக் கொள்ளும்.
  • தாக்குதல் நிறைய இருந்தால் புரோபனோபாஸ் 2 மி.லி. எடுத்து 1 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். செதில் பூச்சியைக் கட்டுப்படுத்த காஸ்டிக் சோடா 150 கிராம், மரபிசின் 500 கிராம், தண்ணீர் 4 லிட்டர் கலந்து தெளிப்பதால் இதை அழிக்கலாம்.
  • செயற்கை தன்மையுள்ள பைரித்திராய்டு மருந்துகளை எந்தக் காரணம் கொண்டும் பயன்படுத்தக் கூடாது.

நன்றி: கடலூர் செய்திகள்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *