குளிர்ச்சிதரும் பிரமிடு குடில் வீடுகளுக்கு மாறும் தமிழக விவசாயிகள்!

தமிழகத்தில் சமீப காலமாக விவசாயத் தோட்டங்களில் சிமென்ட், கம்பி, ஆணியை பயன்படுத்தாமல் நாட்டு செங்கல், செம்மண், புற்று மண்ணில் கடுக்கா, கருப்பட்டி பாகு கலந்து எகிப்திய கட்டிட முறையில் பிரமிடு குடில் வீடுகள் கட்டுவது அதிகரித்துள்ளது.

பிரமிடு வடிவம், பிரபஞ்ச சக்தியை திரட்டி சேமிக்கும் தன்மை உடையது என்ற உண்மையை, பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர்கள் அறிந்திருந்தனர். அதனால், அவர்கள் பிரமிடு வடிவத்தில் வீடு, குடில், கல்லறைகளை கட்டினர்.

பழங்கள், பால் உள்ளிட்ட பொருட்களை பிரமிடு அறைக்குள் வைத்தால் சீக்கிரத்தில் கெட்டுப் போகாது. அரிவாள், கத்தி, பிளேடு, கடப்பாறை கம்பி உள்ளிட்டவற்றின் கூர்மை மழுங்காமல் இருக்கிறது. பிரமிடு குடில்களில் அமர்ந்து தியானம் செய்தாலோ அல்லது சிறிது நேரம் அமர்ந்து ஓய்வெடுத்தாலோ உடலுக்கு குளிர்ச்சியும், மனதுக்கு புத்துணர்வும் ஏற்படுகிறது.

அதனால், தமிழகத்தில் சமீபகாலமாக விவசாயிகள், பண்ணைத்தோட்டங்களில் மதிய உணவு இடைவேளை ஓய்வுக்காகவும், விவசாயக் கருவிகள், பழங்கள், காய்களை வைக்கவும், பிரமிடு வடிவத்தில் குடில் கட்டுவது அதிகரித்துள்ளது.

இந்த பிரமிடு குடில் வீட்டில் வெயில் காலத்தில் குளிர்ச்சியும், குளிர் காலத்தில் வெப்பமான சீதோஷ்ண நிலையும் இருக்கிறது. திண்டுக்கல் அருகே செட்டியப்பட்டியில் பிரமிட் வடிவ குடில் அமைத்துள்ள விவசாயி ஏ.ஜானகிராமன் கூறியதாவது;

சிமென்ட், கம்பி மட்டுமில்லாது ஒரு ஆணி கூட இந்த குடில் வீட்டை கட்டுவதற்கு பயன்படுத்தவில்லை. தோட்டத்தில் கிடைத்த கம்புகளை கொண்டுதான் கட்டினோம். கம்புகளை, மேற்கூரையில் தென்னங்கீற்றுகளை கட்டுதற்கு இரும்பு ஆணி, கம்பிகளுக்கு பதிலாக செப்பு ஆணி, கம்பிகளை பயன்படுத்தினோம். செங்கல்லிலும், சேம்பர் செங்கலை பயன்படுத்தவில்லை. காளவாசல் நாட்டு செங்கல்லை கொண்டுதான் கட்டினோம்.

திண்டுக்கல் அருகே செட்டியப்பட்டியில் விவசாயி ஏ.ஜானகிராமன் தனது தோட்டத்தில் அமைத்துள்ள பிரமிடு குடில் வீடு. Courtesy: Hindu
திண்டுக்கல் அருகே செட்டியப்பட்டியில் விவசாயி ஏ.ஜானகிராமன் தனது தோட்டத்தில் அமைத்துள்ள பிரமிடு குடில் வீடு. Courtesy: Hindu

இந்தக் குடில், முழுக்க முழுக்க ஓடை மண்ணில் கடுக்கா தூள், கருப்பட்டி பாகு, கலந்து பூசினோம். பூசி முடித்தபின், அதன் மேலே புற்று மண், கரையான் மண் பூசி அதன்மேலே சாணி போட்டு மெழுகினோம். வெளியில் குளிர் அடித்தால், குடிலின் உள்ளே வெப்பமாக இருக்கும். வெளியே வெப்பம் அடித்தால் உள்ளே குளிர்ச்சியாக இருக்கும். இவ்வாறு, இந்த பிரமிடு வடிவ குடில் உடலின் வெடப்பநிலையை சீராக வைக்கிறது.

மேற்கூரையில் தென்னங்கீற்றுகளுக்கு மேல் காமாட்சி புல்லை பரப்பியுள்ளோம். இந்த புல் வெப்பநிலையை சீராக வைத்துக்கொண்டு, பிரமிடு அறைக்குள் குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அதனால், கோடை காலத்தில் குடில் வீட்டில் குளிர்சாதன வசதி தேவையில்லை. மின்விசிறியும் தேவையில்லை. காலை முழுவதும் வேலை செய்துவிட்டு மதியம் இந்தக் குடிலில் ஓய்வெடுத்தால் ஆரோக்கியமும், சுறுசுறுப்பும் ஏற்படுகிறது.

மேலும், கெட்டுப்போகக்கூடிய பழங்கள், காய்கறிகளை வைத்துக்கொள்ள குளிர்பதனக் கிடங்காகவும், இந்த குடில் வீடுகள் மூலம் இரட்டிப்பு பயன் கிடைக்கிறது. இந்த குடில் வீடு அமைக்க 90 ஆயிரம் ரூபாய் செலவாகியுள்ளது. செப்பு கம்பி, ஆணியைக் கொண்டு கம்புகள் கட்டப்பட்டுள்ளதால், எந்த பருவநிலைக்கும் குடில் பாதிக்கப்படாது.

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

5 thoughts on “குளிர்ச்சிதரும் பிரமிடு குடில் வீடுகளுக்கு மாறும் தமிழக விவசாயிகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *