31 ஆண்டுகளுக்கு பின்னரும் துரத்தும் போபால் சோகம்!

ந்தக் கொடூரத்தை இன்றைய தலைமுறை விரிவாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆம்! உலகத்தின் மிகக்குரூரமான தொழிற்சாலை விபத்தான போபால் விஷவாயு பேரழிவு நிகழ்வு கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடம் இருந்து மூடி மறைக்கப்பட்டு விட்டது. இந்தியாவே மறந்தாலும் இன்னும் அந்த மண்ணின் மைந்தர்கள் அனுதினமும் கண்ணீர் சிந்தியே நாட்களை கடத்தி கொண்டிருக்கின்றனர்.

1984-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி இரவில், மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள போபாலில் யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தொழிற்சாலையில் நடந்த விபத்தால் கசிந்த விஷவாயு, 3500 க்கும் அதிகமானோரை ஒரே இரவில் பலி வாங்கியது. சுமார் ஐந்து லட்சம் மக்களின் கை, கால்களை காவு வாங்கி அவர்களை முடக்கி போட்டது.

உலகளவில் நடந்த இந்த மோசமான பேரழிவில் பாதிக்கபட்டவர்களுக்கு இன்னமும் சரியான நீதியும் கிடைக்கவில்லை, நிவாரணமும் கிடைக்கவில்லை. இரண்டாம் உலகப்போரில் அணுகுண்டு வீச்சினால் எப்படி ஜப்பான் பாதிக்கபட்டதோ அதேபோன்ற நிலைமையில்தான் போபாலில் உள்ள மக்கள் வாழ்கின்றனர். விபத்து நடந்து 31 ஆண்டுகள் கடந்தும்,  ஏறக்குறைய மூன்றாவது தலைமுறையும் கடுமையாக பாதிக்கப்பட்டு பல குழந்தைகள் கோரமாகவும், பல்வேறு பிறவிகுறைபாடுகளுடனும் பிறப்பதை சமீபத்தில் வெளிவந்த மருத்துவ ஆய்வுகள் உறுதிபடுத்தியுள்ளது கடும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

போபாலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து போராடி வரும் ‘சம்பாவ்னா’ சேவை அமைப்பு,  முப்பது மருத்துவர்களை கொண்டு கடந்த மூன்றாண்டுகளாக நடத்திய ஆய்வு முடிவுகளில்தான் இந்த அதிர்ச்சி செய்தி கிடைத்திருக்கிறது.

1984-ம் ஆண்டு போபாலில் பேரழிவை ஏற்படுத்திய தினத்தன்று, கடும் நச்சுத்தன்மை மிகுந்த Methyl isocyanate வாயு,  சுமார் 40 டன் அளவுக்கு கசிந்ததுதான் இக்கோரவிபத்துக்கு காரணம். அன்றைய தினம் பாதிக்கப்பட்ட மக்களில் சிலருக்கு சமீபத்தில் பிறந்த பேரக்குழந்தைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

போபாலில் சுமார் 20 ஆயிரம் குடும்பங்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள், விஷவாயுவை சுவாசித்ததால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள், விஷவாயு கலந்த நீரை பயன்படுத்தி பாதிக்கபட்டவர்கள், விஷவாயு மற்றும் விஷவாயு கலந்த நீர் ஆகிய இரண்டாலும் பாதிக்கப்பட்டவர்கள், விஷவாயு மற்றும் விஷவாயுவால் பாதிப்புக்குள்ளான நீர் ஆகிய இரண்டில் இருந்தும் தப்பித்தவர்கள் என நான்கு வகைகளில் பிரித்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்த 20,000 குடும்பங்களில் இருந்து சுமார் 2500 குழந்தைகள் சோதிக்கப்பட்டனர். அதில் ஏறக்குறைய 1700 குழந்தைகள் பிறவியிலேயே பல்வேறு உடல் மற்றும் மன ரீதியான  குறைபாடுகளோடு பிறந்திருக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது

1700 குழந்தைகளில் 164 குழந்தைகள் பெருமூளை செயல்பாடு மட்டுப்பட்டு மன வளர்ச்சி குன்றியவர்களாக இருக்கிறார்கள் என்பது இன்னொரு பேரதிர்ச்சி. தவிர போபால் விஷவாயு நடந்த அன்று போபாலில் வசித்தவர்களுக்கு, அதற்கு பின்னர்  பிறந்த குழந்தைகள், பேரக்குழந்தைகளில் பெரும்பாலோனோருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

போபாலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வரும் தன்னார்வலர்கள், போபால் விஷவாயுவால் பாதிக்கப்பட்ட மக்களின் அடுத்த இரண்டு தலைமுறையினரும் தொடர்ந்து ஏதாவதொரு மோசமான நோயால் பாதிக்கpபடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என கவலை தெரிவிகின்றனர். கடந்த 2013-ம் ஆண்டு போபாலில் ஆய்வு செய்த ஜோதிர்மயி மற்றும் தேவேந்திர பஞ்சல் ஆகிய இரு மருத்துவர்களும், போபால் பகுதிகளில் பிறவி குறைபாட்டோடு பிறக்கும் குழந்தைகளின் விகிதம் மற்ற ஊர்களை விட ஏழு மடங்கு அதிகமாக இருக்கிறது என அறிக்கை அளித்திருக்கிறார்கள்.

போபால் விஷவாயு காற்றில் பரவியதில், ஏறக்குறைய 8 ஆயிரம் டன் புற்றுநோயை ஏற்படுத்தும் நச்சுபொருட்கள் அந்த மண்ணில் படிந்துள்ளது. தவிர நீர் நிலைகளிலும் கலந்து அந்த பகுதியின் ஒட்டுமொத்த சுற்றுச்சூழலும் மாசாகி கிடக்கிறது.

போபால் விஷவாயு குறித்து பல சால்ஜாப்புகளை சொல்லி வந்த யூனியன் கார்பைடு நிறுவனம், உண்மை கண்டறியும் அமைப்பின் சோதனையில் மாட்டியுள்ளது. உண்மை கண்டறியும் அமைப்பின் 2002-ம் ஆண்டின் அறிக்கைபடி பாதரசம், காரீயம், டிரைகுளோரோபென்சீன், டை குளோரோ மீத்தேன், குளோரோபார்ம் ஆகிய நச்சு பொருட்கள் போபாலில் வசிக்கும் தாய்மார்களின் தாய்ப்பாலில் இருப்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. அங்கு வாழும் மனிதர்களின் உடலில் இன்னும் நச்சு தேங்கி கிடக்கிறது. பெண்களையும், ஆண்களையும் அந்த நச்சு வாயுக்கள் பாதித்தன் விளைவாகத்தான் அங்கே ஒழுங்கற்ற முறையில் விகாரமாக குழந்தைகள் பிறக்கின்றன.

போபாலில் இன்னொரு சோகம் என்னவென்றால், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அங்கே ஆய்வு நடத்துவதை கூட நிறுத்தி ஏறக்குறைய 20  ஆண்டுகள் ஆகின்றது. ஒரு முதலாளியை காப்பாற்ற லட்சக்கணக்கில் மக்களை டீலில் விடுபவர்களை பச்சை துரோகிகள் என்றுதான் அடையாளப்படுத்த வேண்டும்.

இப்படிப்பட்ட அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகளை படிக்கையில் ஏனோ கல்பாக்கம், கூடங்குளம் பகுதிகள் நினைவுக்கு வருவதை தவிர்க்க இயலவில்லை. ஏனெனில் அணு உலைகளின் லட்சணத்தை சில ஆண்டுகள் முன்பு ஜப்பானில் கண்டோமல்லவா!

– பு.விவேக் ஆனந்த்

நன்றி: ஆனந்த விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *