பழவகை மரங்களுக்கு ஏற்ற தொழில் நுட்பங்கள்

பழவகை மரங்களில் கூடுதல் மகசூல் பெறவும், நோய் தாக்காமல் தடுக்கவும் ஏற்ற சிறப்பு தொழில் நுட்பங்கள் குறித்து தேனி மாவட்டத்தில் உள்ள போடி தோட்டக்கலை உதவி இயக்குநர் வே.கெர்சோன் தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

மா மரம்:

  • ஒட்டு மாங்கன்றுகளில் வேர் பாகத்திலிருந்து வளரும் தளிர்களை நீக்கிவிடவேண்டும்.
  • 5 ஆண்டு வரை பூக்கும் பூக்களை கிள்ளிவிடவேண்டும்.
  • பின்னர் நல்ல காய்கள் பிடிக்கும் வகையில் உள்நோக்கி வளரும் கிளைகளையும், பலவீனமான கிளைகளையும் நெருக்கமான நுனிக் கிளைகளையும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கவாத்து செய்ய வேண்டும்.
  • 2 ஆண்டுக்கு ஒருமுறை பசுந்தாள் உரப் பயிர்களை  பயிரிட்டு மடக்கி உழுதல் வேண்டும்.
  • மா மரத்தில் ஊடுபயிராக 5 ஆண்டு வரையிலும் மரவள்ளி, நிலக்கடலை மற்றும் காய்கறிப் பயிர்களை பயிரிட்டு கணிசமான வருமானம் பெறலாம்.

 கொய்யா:

  • கொய்யாவில் புதிய வாதுகளில் இலைகளின் பிரிவில்தான் பூக்கள் தோன்றி காய்கள் பிடிக்கும்.
  • செப்டம்பர், அக்டோபர் மற்றும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் முந்தைய ஆண்டு வாதுகளில் 10-15 செ.மீ. செடியின் நுனிக்கிளைகளை வெட்டிவிடவேண்டும்.
  • இதனால் புதிய தளிர்கள் தோன்றி காய்கள் அதிகம் பிடிக்கும்.
  • வெட்டிய காயமுள்ள பகுதியின் மூலம் பூஞ்சாள நோய்கள் பரவி விடாமல் தடுக்க 1 சதவீத போர்டோ கலவை அல்லது பைட்டோலான் 3 கிராம் 1 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
  • பூக்கள் அதிகம் பிடிக்க 1 கிராம் யூரியா 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
  • மேல் வளரும் குச்சிகளை வளைத்து கற்களை கட்டித் தொங்கவிடுவதன் மூலம் காய்ப்புத் திறனை அதிகரிக்கலாம்.
  • கொய்யாவில் விதைகள் அதிகம் தோன்றுவதை தடுக்க ஜிப்ரலிக் அமிலம் 1 கிராம் 10 லிட்டர் நீரில் கரைத்து மொட்டுகள் தோன்ற ஆரம்பித்த உடன் கைத்தெளிப்பானால் ஒருமுறை தெளித்தால் விதைகள் எண்ணிக்கையைக் குறைக்கலாம்.

சப்போட்டா:

  • சப்போட்டாவில் காய்கள் பிடிப்பதை அதிகரிக்க போரிக் அமிலம் 1 சதவீதக் கரைசலை தெளிக்க வேண்டும்.
  • சப்போட்டா கன்றுகளில் வேர்ச்செடியிலிருந்து வரும் துளிர்களையும், நீர் போத்துக்களையும் அவ்வப்போது நீக்க வேண்டும்.
  • தரை மட்டத்திலிருந்து வளரும் பக்க கிளைகளை நீக்க வேண்டும்.
  • சப்போட்டாவில் ஒரே ரகமாக நடாமல் பல ரகங்களை கலந்து நடவு செய்தால் அயல்மகரந்த சேர்க்கை அதிகரிக்கும். காய்கள் உற்பத்தியும் அதிகரிக்கும்.

 நெல்லி:

  • நெல்லி கன்றுகளில் தரையிலிருந்து 3 அடி உயரத்துக்கு பக்க கிளைகள் உருவாகாமல் அவ்வப்போது வெட்டிவிட வேண்டும்.
  • பின்பு பக்க கிளைகள் எதிரெதிர் திசைகளில் அனுமதித்தல் வேண்டும்.
  • ஒட்டுக்கு கீழே வளரும் கிளைகளை தொடர்ந்து நீக்கிவிடவேண்டும்.
  • நோய்வாய்ப்பட்ட உடைந்த மற்றும் குறுக்கே செல்லும் கிளைகளை நீக்கிவிட வேண்டும்.

 எலுமிச்சை:

  • எலுமிச்சை பூக்கள் பூக்கும் தருணத்தில் காய் பிடிப்பதை அதிகரிக்க 2, 4 டி-20 மில்லிகிராம் மருந்தை 1 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவும்.
  • ஜிங்க் சல்பேட் கரைசல் 5 கிராம் ஒரு லிட்டர் நீரில் கலந்து ஆண்டுக்கு மூன்று முறை மார்ச், ஜூலை, அக்டோபர் மாதங்களில் தெளிக்க வேண்டும்.
  • காய்ந்த கிளைகளை அகற்றி கார்பன்டசிம் 1 கிராம் அல்லது காப்பர் ஆக்சிகுளோரைடு 3 கிராம் ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவும்.

 மாதுளை:

  • மாதுளை காய்ந்த, நோய் தாக்கிய குறுக்கு நெடுக்குமாக வளர்ந்துள்ள கிளைகள் மற்றும் போத்துக்களை நீக்கிவிடவேண்டும்.
  • புதிய கிளைகளில் பழங்கள் தோன்றும். எனவே புதிய கிளைகளின் வளர்ச்சியைத் துரிதப்படுத்த பழங்களை அறுவடை செய்த பிறகு டிசம்பரில் பழைய கிளைகளை மூன்றில் ஒரு பகுதி நீக்கிவிடவேண்டும்.
  • பூக்கள் அதிகமாக இருந்தால் போதிய எண்ணிக்கை விட்டு, மீதமுள்ளவற்றை நீக்கிவிட்டால் பெரிய பழங்களைப் பெறலாம்.
  • திரவ பாரபின் ஒரு சதம் மருந்தை ஜூன் மாதத்தில் 15 நாள் இடைவெளியில் இருமுறை தெளிப்பதன் மூலம் பழங்களில் வெடிப்பு உண்டாவதைத் தடுக்கலாம்

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “பழவகை மரங்களுக்கு ஏற்ற தொழில் நுட்பங்கள்

Leave a Reply to Ellappan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *