ஆரோக்கியமான மிளகாய் நாற்றுகளை பெற வழிகள்

வீரிய ஒட்டு ரக மிளகாயை பயிரிட்டாலும் ஆரோக்கியமான நாற்றுகளை உற்பத்தி செய்து நடவு செய்வதன் மூலமே நல்ல மகசூல் பெற முடியும்.

மேட்டுப்பாத்தி நாற்றங்கால்:

  • பாத்திகளை ஓரளவு நிழல்படியும் படியான இடத்தில் 10-15 செ.மீ. உயரத்தில் தயாரிக்க வேண்டும்.
  • அதன் அகலம் 1 மீட்டர், நீளம் 3 மீட்டர் வரை அமைக்கலாம். மண் மிருதுவாகவும், ஈரம் காக்கும் தன்மையுடையதாகவும் இருக்க வேண்டும்.
  • இதற்காக மண்ணின் தன்மையைப் பொறுத்து குறுமண், மணல் ஆகியவற்றை கலக்க வேண்டும்.
  • நன்கு பண்படுத்திய ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு 20 கிலோ மக்கிய தொழு உரம் அல்லது கம்போஸ்ட் சேர்க்க வேண்டும்.
  • ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு இரண்டு கிலோ டிஏபி உரம் இடுவதால் நாற்றுகள் ஊட்டத்துடன் வளர்கின்றன.
  • நாற்றுகளை பிடுங்கும் போது வேர் அறுபடாமல் இருக்கும்.
  • நாற்றங்காலில் நூற்புழு, இளம்பயிரில் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுபடுத்த ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு 250 கிராம் வீதம் பீயுரிடான் குருணைகளை இட வேண்டும்.
  • அழுகல் நோய் வராமல் தடுக்க ஒரு சத வீரியமுள்ள போர்டா கலவையால் மண்ணை நேர்த்தி செய்ய வேண்டும்.
  • மேட்டுப்பாத்தியின் மேற்பரப்பை மரப்பலகையால் சமப்படுத்த வேண்டும்.
  • அதில் 10 செ.மீ. இடைவெளியில் 1.2 செ.மீ. ஆழத்துக்கு கோடுகள் போட்டு, அந்தக் கோடுகளில் விதை நேர்த்தி செய்த விதைகளை, பரவலாக, சீரான இடைவெளியில் விதைக்க வேண்டும்.
  • அடர்த்தியாக விதைப்பது அழுகல் நோயை உண்டாக்கும். மேலும் நாற்றுகள் மெலிந்து காணப்படும்.
  • விதைக்கும் ஆழம் விதைகளின் விட்டத்தை விட 3-4 மடங்கு அதிகம் இருக்க வேண்டும்.
  • விதைகளை மணல் அல்லது நாற்றங்கால் மண் கொண்டு மூடிவிட்டு பூவாளியால் நீர் பாய்ச்ச வேண்டும்.
  • பின் வைக்கோல் அல்லது உலர்ந்த இலைகளை பாத்திகளின் மேல் பரப்ப வேண்டும்.
  • விதைத்து 10 முதல் 15 நாள்கள் கழித்து பாத்திகளின் மேல் பரப்பிய வைக்கோல் அல்லது இலைகளை அகற்றி விட வேண்டும்.
  • தினமும் பூவாளி கொண்டு காலை, மாலை நேரங்களில் நீர் ஊற்றுவது நாற்றுகள் நல்ல வளர்ச்சி அடைவதற்கும்,விதைகள் நாற்றங்காலை விட்டு வெளியே வராமல் இருப்பதற்கும் உதவுகிறது.
  • நாற்றங்காலில் வேர் அழுகல் நோயைக் கட்டுபடுத்த பதினைந்து நாள்கள் இடைவெளியில் காப்பர் ஆக்ஸிகுளோரைடு அல்லது புளுகாப்பர் 2.5 கிராம் மருந்தை 1 லிட்டர் நீரில் கரைத்து ஊற்ற வேண்டும்.
  • நடவுக்காக நாற்று பிடுங்குவதற்கு 12 மணி நேரத்துக்கு முன்பே மேட்டுப்பாத்திகள் நன்கு மூழ்கும் அளவுக்கு நீர் பாய்ச்ச வேண்டும்.

குழித்தட்டு நாற்றங்கால்:

  • நாற்றுகள் நல்ல வாளிப்பாகவும் முழுமையான வேர்களுடனும் கிடைக்க புரோடிரே எனப்படும் குழித்தட்டு நாற்று அட்டைகள் உதவுகின்றன.
  • இம்முறையில் நன்கு மக்கிய தென்னை நார்க்கழிவை வளர் ஊடகமாக பயன்படுத்தி பூச்சிகள் புகாத நிழல் வலைக் கூடாரங்களில் நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
  • இம்முறையைப் பயன்படுத்தி பருவமற்ற காலங்களிலும் நாற்றுகளை உற்பத்தி செய்யமுடியும். குழித்தட்டுகளில் நாற்றுகள் உற்பத்தி செய்யும் போது வழக்கமான முறையை விட விதையளவு 30-40 சதவீதம் குறைவாக தேவைப்படும்.
  • பாதுகாப்பான சூழலில் நாற்றுகள் வளர்க்கப்படுவதால் பூச்சி, நோய்களின் தாக்குதல்களை கண்காணிப்பது எளிது.

மேலும் விவரங்களை பெற தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை அலுவலகத்தை அணுகலாம்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *