மிளகாயில் இலை சுருட்டல், மற்றும் நுனிகருகல் நோயை கட்டுப்படுத்த இளையான்குடிதோட்டக்கலைத்துறை ஆலோசனை வழங்கியுள்ளது.
இளையான்குடி வட்டாரத்தில் நடப்பாண்டில் சுமார் 3 ஆயிரத்து 500 எக்டேர் பரப்பளவில் மிளகாய் பயிரிடப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் விதைக்கப்பட்ட மிளகாய் விதைகள் பூக்கும் நிலையில் வளர்ந்துள்ளது. தற்போது நிலவி வரும் தொடர் பனி, மழைக்கு வேர் அழுகல் நோய், நுனி கருகல் நோய், இலை சுருட்டல் நோய் பரவ வாய்ப்புள்ளது. நுனி கருகல் நோய் தாக்கிய செடியின் நுனி இலைகள் கருகிவிடும்.
இந்த நோய் தீவிரமாகும்போது நுனியிலிருந்து கீழ்நோக்கி பரவி, பூக்களும் உதிர்ந்து விடும். இதனைக் கட்டுப்படுத்த நிலத்தில் தண்ணீர் தேங்க விடக்கூடாது. மேலும் 1 லிட்டர் தண்ணீரில், 2.5 கிராம் காப்பர் ஆக்சி குளோரைடு (அல்லது) மேன்கோசைப் கரைத்து தெளிக்க வேண்டும். இலை சுருட்டல் நோய், இலையின் நடு நரம்பில் சுருண்டு உருமாற ஆரம்பிக்கும்.
மேலும் குட்டை வளர்ச்சி, இடைகணுக்கள், சிறிய இலையாக காட்சியளிக்கும். பூ மொட்டுக்கள் பெரிய அளவை அடையும் முன் உதிர்ந்து விடும். முக்கியமாக வெள்ளை ஈ மூலம் பரவுவதால், 1 லிட்டர் தண்ணீரில் 2மி.லி டைமீத்தோயேட் (அல்லது) 2மி.லி அசிப்பேட் கலந்து தெளிக்க வேண்டும். மேலும் நோய் தாக்கப்பட்ட நச்சுயிரி செடிகளை வேருடன் களைந்து துரத்தில் புதைக்க அல்லது எரிக்க வேண்டும்.
இவ்வாறு தகுந்த ஆலோசனைகளை கடைபிடித்தால் மிளகாயில் அதிக மகசூலைப் பெறலாம் என இளையான்குடி வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலர் ரவிசங்கர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
நன்றி: தினகரன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்