இயற்கை முறை முருங்கை விவசாயம் தொழிற்நுட்பங்கள்

இயற்கை விவசயம் மூலம் முருங்கை சாகுபடி செய்யும் சடையாண்டி கூறுகிறார்

செடிமுருங்கை… நாட்டுமுருங்கை ஓர் ஒப்பீடு

முருங்கையில் நாட்டு முருங்கை, செடிமுருங்கை என இரண்டு வகைகள் இருக்கின்றன. இதில், நாட்டுமுருங்கையில் மருத்துவக் குணமும், சுவையும் அதிகமாக இருக்கும். செடிமுருங்கையில் காய்கள் சற்று திடமாக இருந்தாலும், சற்றே சலசலப்புடனும் இருக்கும். செடிமுருங்கையின் ஆயுள் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள். நாட்டு முருங்கையின் ஆயுள் அதிகபட்சம் 50 ஆண்டுகள். செடிமுருங்கை விதை மூலமும், நாட்டுமுருங்கை நாற்றுகள், போத்து (விதை குச்சிகள்) மூலமும் நடவு செய்யப்படுகின்றன.

காய் விலை பற்றி கவலையே இல்லை!

ஆண்டு முழுவதும் முருங்கைக்கு விலை கிடைக்காவிட்டாலும் கவலைப்படத் தேவையில்லை. அறுவடை செய்யாமல் விட்டு விட்டால் முற்றி நெற்றாகும். அதில் இருந்து விதைகளைப் பிரித்தெடுக்கலாம். ஒரு ஏக்கரில் இருந்து ஆண்டுக்கு 240 கிலோ விதை கிடைக்கும். ஒரு கிலோ விதை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிட்டத்தட்ட காய் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம், விதை மூலம் கிடைத்து விடும்.

இலைக்கும் கிராக்கி!

முருங்கை இலைக்கும் (கீரை) தேவை அதிகமாகவே இருக்கிறது. இதைப் பற்றி சொன்ன சடையாண்டி, “இயற்கையில விளையுற முருங்கை இலைக்கும் (கீரை), காய்க்கும் நல்ல வரவேற்பு இருக்கு. குறிப்பா முருங்கை இலைக்கு காயை விட அதிகத் தேவை இருக்கு. இலை பறித்தால் காய் மகசூல் குறையும். அதனால, விவசாயிகள் இலை விற்பனையில் கவனம் செலுத்துறதில்லை. இலைக்காக சாகுபடி செய்றவங்க, அடர் நடவு முறையில் 5 அடி இடைவெளியில் நடவு செய்யலாம். 40 நாட்களுக்கு ஒரு முறை இலைகளை அறுவடை செய்து விற்பனை செய்யலாம். மதுரை மாவட்டத்துல இலைக்கான வியாபாரிகள் இருக்காங்க. இலைக்கான விற்பனை வாய்ப்பை, விசாரிச்சிட்டு, இலை சாகுபடியில் இறங்கலாம்” என்றார்.

விண்பதியன் முறையில் ஒட்டு நாற்றுகள்!

சடையாண்டி, ‘‘விண்பதியன் முறையில் ஒட்டுக்கட்டி புதிய முருங்கை நாற்றுகளை உருவாக்குவது இப்படித்தான்-

தென்னைநார்க் கழிவோடு சிறிதளவு பஞ்சகவ்யா, சிறிதளவு அசோஸ்பைரில்லம் ஆகியவற்றைக் கலந்து ஒரு மணி நேரம் ஊற வைத்து 40% ஈரப்பதம் இருப்பது போல் பிழிந்து கொள்ள வேண்டும் (ஈரமாக இருக்க வேண்டும். பிழிந்தால் தண்ணீர் சொட்டக் கூடாது. இதுதான் ஊட்டமேற்றிய தென்னை நார்க்கழிவு).

முருங்கை மரம் பூவெடுக்கும் தருவாயில், அந்த மரத்தில் கட்டை விரல் அளவுள்ள குச்சியில் ஓர் இடத்தில் பட்டையை நீக்க வேண்டும். அந்த இடத்தில், ஊட்டமேற்றப்பட்ட தென்னை நார்க்கழிவை வைத்து, பிளாஸ்டிக் காகிதத்தால் காயத்துக்குக் கட்டு போடுவது போல இறுக்கமாக கட்டி வைக்கவேண்டும்.

40 நாட்கள் கழித்துப் பார்த்தால், அந்தப் பகுதியில் புது வேர்கள் உருவாகி இருக்கும். பிறகு, அந்தக் குச்சியை வெட்டி எடுத்து, ஊட்டமேற்றிய மண்புழு உரம் நிரம்பிய பிளாஸ்டிக் பைகளில் வைத்து நீர் ஊற்றி 60 நாட்கள் வளர்த்து நிலத்தில் நடவு செய்யலாம். விவசாயிகள் இப்படி நாற்று தயாரித்து விற்பதன் மூலமும் வருமானம் பார்க்க முடியும்” என்றார்.


இப்படித்தான் செய்யணும், முருங்கை சாகுபடி!

சடையாண்டி முருங்கை சாகுபடி குறித்துச் சொன்ன விஷயங்களை அப்படியே பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.

‘முருங்கையை களர், உவர் மண் தவிர அனைத்து மண் வகைகளிலும் பயிரிடலாம். நிலத்தை நன்றாக உழவு செய்து, 16 அடி இடைவெளியில் நீளமாக வாய்க்கால்களை அமைத்துக்கொள்ள வேண்டும்.

வாய்க்கால்களின் மையத்தில் 16 அடி இடைவெளியில் ஒன்றரை அடி ஆழத்துக்குக் குழியெடுத்துக் கொள்ள வேண்டும். இதன்படி பார்த்தால், செடிக்குச்செடி 16 அடி, வரிசைக்கு வரிசை 16 அடி இடைவெளி இருக்கும்.  ஒவ்வொரு குழியிலும் மூன்று கைப்பிடி தொழுவுரம், ஒரு கைப்பிடி வேப்பம் பிண்ணாக்கு மற்றும் ஒரு கைப்பிடி மண்புழு உரம் போட்டு… நாட்டுமுருங்கை நாற்றை நடவு செய்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அடுத்து 3 மற்றும் 5-ம் நாட்களில் தவறாமல் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தொடர்ந்து வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும்.

20-ம் நாள் ஒவ்வொரு செடியின் தூரிலும் 200 கிராம் கடலைப் பிண்ணாக்கை வைத்து பாசனம் செய்ய வேண்டும். 40 மற்றும் 70-ம் நாட்களில் புதிய இளம் கிளைகளைக் கவாத்து செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால் பக்கவாட்டுக் கிளைகள் அதிகமாக வளரும்.

120-ம் நாளுக்குள்  செடியின் வளர்ச்சியைப் பொறுத்து மூன்றாவது முறையாக கவாத்து செய்ய வேண்டும். 6-ம் மாதத்திலிருந்து காய்க்கத் தொடங்கும். ஆண்டுக்கு மூன்று முறை காய்ப்பு இருக்கும். ஒவ்வொரு காய்ப்புக்கும் 40 நாட்கள் மட்டுமே காய் இருக்கும். காயை அறுவடை செய்வதற்கு முன்பாக, ஒவ்வொரு மரத்துக்கும் 200 கிராம் கடலைப் பிண்ணாக்கு கொடுக்க வேண்டும். அதே போல மகசூல் முடிந்தவுடன், ஒவ்வொரு மரத்துக்கும் 30 கிலோ தொழுவுரம் வைக்க வேண்டும். இதை முறையாகச் செய்தால்தான் தரமான விளைச்சல் கிடைக்கும். இதைத்தவிர முருங்கையில் வேறு பராமரிப்பு தேவையில்லை.’’


பூச்சி, நோய் பராமரிப்பு!

முருங்கையில் பூச்சி, நோய் பற்றி சடையாண்டியின் அனுபவம்…

முருங்கை இலைகளில் (கீரை) துளைகள் தென்பட்டால் புழுத் தாக்குதல் என்று அர்த்தம். இந்தப்புழு கண்ணுக்குத் தெரியாது. இந்த அறிகுறி தெரிந்தால், இலைகள் முழுக்க நனையும் அளவுக்கு மூலிகைப் பூச்சிவிரட்டி தெளித்து புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.

சில சமயங்களில் கம்பளிப்பூச்சித் தாக்குதல் இருக்கும். வேப்பெண்ணைக் கரைசல் அல்லது அடுப்புச் சாம்பலைத் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

ஒவ்வொரு முறையும் பூவெடுக்கும் முன்பாக பஞ்சகவ்யா கரைசலைத் தெளித்து வந்தால், எந்த நோயும் தாக்காது. இயற்கை முறையில் பெரும்பாலும் பூச்சிகள், நோய்கள் வருவதில்லை.

தொடர்புக்கு, சடையாண்டி, செல்போன்: 09791374087 .

நன்றி: பசுமை விகடன்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *