வாழை சாகுபடிக்கான டிப்ஸ்!

வாழை சாகுபடி செய்வதற்கு முன்பு நிலத்தைப் பக்குவப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளைச் செய்ய வேண்டும். வாழை நட்டப் பிறகு சில பராமரிப்புப் பணிகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். அப்படி செய்தால் மகசூல் அதிகம் பெற முடியும்.

இதோ, வாழை சாகுபடிக்கான டிப்ஸ் கொடுக்கிறார்,  பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தின் பூச்சியியல் நிபுணர் என். விஜயகுமார்:

  • வாழையில் இரண்டு மாதத்துக்கு ஒரு முறை மண்வெட்டியால் கொத்தி மண் அணைக்க வேண்டும்.
  • பக்கக் கன்றுகளை மாதம் ஒரு முறை நீக்க வேண்டும்.
  • இலைக்காகச் சாகுபடி செய்யப்படும் பூவன், கற்பூரவள்ளி மற்றும் மொந்தன் ரகங்களில் முதல் மூன்று அல்லது நான்கு பக்கக் கன்றுகளை வளர விடலாம்.
  • பக்கக் கன்றுகளைக் கத்தி கொண்டு வெட்டி அழிக்கலாம்.
  • மீண்டும் மீண்டும் துளிர்த்தால் பக்கக் கன்றுகளின் நடுக்குருத்தில் ஒரு கன்றுக்கு இரு சொட்டுகள் மண்ணெண்ணையைக் கவனமாக இங்க் ஃபில்லர் கொண்டு விட்டும் அழிக்கலாம்.
  • அதிக சொட்டுகள் மண்ணெண்ணைய் விட்டால் தாய்க்கன்றுகள் இறந்து விடும்.
  • கடைசி பூ அல்லது சீப்பு வெளிவந்த ஒரு வாரத்தில் ஆண் பூவை ஒடித்து விடவேண்டும்.
  • பிறகு, 10 கிராம் யூரியா தொட்டுக் கொண்டிருக்கும்படி ஒடித்த இடத்தில் உள்ள காம்பு பகுதியில் ஒரு பாலித்தீன் பையில் போட்டு கட்டி விட வேண்டும்.
  • இதனால் சத்துக்கள் அனைத்தும் காய்களுக்கு செல்வதால் வாழைக்காய்கள் சீக்கிரம் முதிர்ச்சியடைகிறது.
  • வாழைக்காய்களின் பருமனை அதிகரிக்க ஒரு கிராம் 2, 4 டி மருந்தை 20 மிலி எரிசாராயத்தில் கரைத்து பின் அத்துடன் 40 லிட்டர் தண்ணீர் கலந்து 200 தார்களில் பூவின் கடைசி மடல் விரிந்ததும் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.
  • வாழையில் விதைப் பிடிப்பின்மை, நீண்ட சதைப் பற்றுள்ள காய் மற்றும் அதிக காய்ப்பிடிப்பு தன்மையை அதிகரிக்க, பயிர் வளர்ச்சி ஊக்கி சைட்டோசைம் 180 மி.லியை 180 லிட்டர் தண்ணீரில் கலந்து ஓர் ஏக்கர் வாழை மரங்களில் நடவு செய்த 90 மற்றும் 120 வது நாட்களில் விசைத்தெளிப்பான் கொண்டு அதிகாலை அல்லது மாலை நேரங்களில் மட்டும் தெளிக்க வேண்டும்.
  • வடிகால் வசதியில்லாத நீர்ப் பிடிப்பு தன்மை அதிகமாக உள்ள வாழை வயலில் ஒரு வாழை மரத்துக்கு யூரியா அல்லது அமோனியம் சல்பேட் 25 கிராம் என்ற அளவில் 10 லிட்டர் தண்ணீரில் கரைத்து விசைத்தெளிப்பான் மூலம் மரங்கள் மீது நன்கு நனையும் படி தெளிக்க வேண்டும்.
  • வறட்சியான சமயங்களில், ஒரு வாழை மரத்திற்கு டை பொட்டாசியம் ஹைட்ரஜன் பாஸ்பேட் 20 கிராம் என்ற அளவில் 10 லிட்டர் தண்ணீரில் கரைத்து விசைத்தெளிப்பான் கொண்டு இலைகள் முழுவதும் நனையும்படி தெளிக்க வேண்டும்.
  • வாழைத் தார் நன்கு பெருக்க, பொட்டாசியம் சல்பேட் 20 கிராம் ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து தார் மீது நன்கு படும்படி தெளித்தல் அவசியம்.
  • வாழைத்தார் நன்கு பெருக்க, ஒரு மரத்துக்கு யூரியா 350 கிராம் மற்றும் மியூரேட் ஆப் பொட்டாஷ் 250 கிராம் வேர்ப்பகுதியில் மண்ணில் இட்டு நீர்ப்பாய்ச்ச வேண்டும்.
  • காய்களின் முதிர்ச்சிக்கு மிக முக்கியமான கண்ணாடி மற்றும் முதல் மூன்று இலைகளைக் கொண்டு தாரை மூடுவதை தவிர்ப்பது எடை அதிகமான தார்களை உண்டாக்கும். இதற்குப் பதிலாக, வாழைக்காய்கள் வெப்பத்தினால் வெடிக்காமல் இருக்க வாழைத்தாரை காய்ந்த இலைகள் கொண்டோ அல்லது பாலித்தீன் பைகள் கொண்டோ மூட வேண்டும்.
  • வாழை குலை தள்ளும் சமயம், மறுதாம்பு பயிருக்கு ஒரு வீரிய கன்றை ஒதுக்கிவிடவேண்டும்.
  • காற்றடிக்கும் நேரங்களில், மரங்கள் சாய்ந்து விடாமல் இருக்க திடமான கம்பு கொண்டு எதிர்புறமாக முட்டுக் கொடுக்க  வேண்டும்.
  • காய்ந்த இலை மற்றும் நோய் தாக்கிய இலைகளை அவ்வப்போது அகற்றி எரிப்பதால் வயலை நோய், பூச்சி தாக்குதலிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
  • காய்களின் நுனியில் ஒட்டியிருக்கும் பூவின் எஞ்சிய பாகத்தை நீக்குவதால் நோய் பரவுதலை தடுக்க முடியும்.
  • குலை வெட்டிய பின்பு, இலையில் வெட்டுப்பாகத்தில் வாசலின் அல்லது களிமண் கொண்டு பூச வேண்டும்.
  • குலை வெட்டிய தாய் வாழைகளை கிழங்குகளுடன் அகற்றி இயற்கை உரமாக தயாரிக்கலாம்.
  • குலை வெட்டிய தாய் வாழை மரங்களின் பட்டைகளிலிருந்து வாழை நார் எடுத்து வணிகச் சந்தைக்கு அனுப்பலாம்.
  • நன்செய் நில வாழையில் ஒவ்வொரு வரிசை விட்டு கால்வாய்கள் எடுக்க வேண்டும்.
  • மேலும், ஐந்து வரிசைகளுக்கிடையில் குறுக்கு கால்வாய்கள் எடுக்க வேண்டும்.
  • நல்ல மகசூல் பெறுவதற்கு, ஒரு வாழை மரத்தில் 10 முதல் 12 பச்சை இலைகள் இருக்க வேண்டும்.
  • கூடுதல் வருமானம் கிடைக்கவும், களைகளைக் கட்டுப்படுத்தவும் வாழையில் ஊடுபயிராக மணிலா, உளுந்து, தட்டைப்பயிர், மொச்சை, சோயா மொச்சை, மிளகாய், கிழங்கு வகைகள், பூ வகைகள், இஞ்சி மற்றும் மஞ்சள் போன்ற பயிர்களைப் பயிர் செய்யலாம்.
  • கொடிவகை காய்கறிகளான பூசணி, தர்பூசணி, பரங்கி, வெள்ளரி, பாகல், சுரை மற்றும் புடலை போன்றவற்றை வாழையில் ஊடுபயிர்களாகப் பயிரிடக்கூடாது.  ஏனெனில், இக்கொடி வகைக் காய்கறிகளில் ஏற்படும் ஒரு வகை வைரஸ் நச்சுயிரி நோய், வாழைக்கு பரவும் அபாயம் உள்ளது.
  • வாழையைத் தாக்கும் ஆப்பிரிக்க நத்தை பூச்சி பப்பாளி, தக்காளி, பலா, சம்பங்கி, சாமந்தி, ரப்பர், பாக்கு, காப்பி, தேயிலை, நெல், காய்கறி மற்றும் கோகோ பயிர்களைத் தாக்குவதால் இந்தப் பயிர்களை எக்காரணம் கொண்டும் வாழையில் ஊடுபயிராகப் பயிரிடக்கூடாது.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

6 thoughts on “வாழை சாகுபடிக்கான டிப்ஸ்!

  1. A.Prakash says:

    Very nice tips….thank u so much…sir….plz give me a details of drop water in banana cultivation govt schemes ……….thanking u…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *