வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் களர் மற்றும் உவர் நிலங்களை அரசின் மானிய உதவியுடன் சீரமைக்கலாம் என வேலூர் வேளாண்மை உதவி இயக்குநர் சிவகுமார் சிங் தெரிவித்தார்.
சாகுபடி செய்யும் நிலங்களில் களர் மற்றும் உவர் நிலப் பிரச்னைகள் காணப்படுகின்றன. அதனால் பயிர் எண்ணிக்கை பராமரிக்க முடியாமலும், இடப்படும் எரு, உரங்கள் மற்றும் நீர் வேரினால் உறிஞ்ச முடியாத தன்மையாலும் பயிர் வளர்ச்சி குன்றியும், நுண்ணூட்டச் சத்து பற்றாக்குறையால் பெரும் மகசூல் இழப்பும் ஏற்படுகிறது.
- களர் மற்றும் உவர் நிலச் சீர்திருத்தம் செய்ய நிலம் 25 முதல் 30 சென்ட் பரப்புக்குட்பட்டதாக இருக்க வேண்டும்.
- பெரிய நிலமாக இருந்தால் நடுவில் வாய்க்கால் அமைக்கலாம். நிலத்தின் சரிவுக்கு ஏற்ப வடிகால்கள் அமைக்க வேண்டும்.
- வயலின் பரப்பிற்கேற்ப ஜிப்சத்தை கணக்கிட்டு பரவலாக இட்ட பிறகு சுமார் 10 செ.மீ. நீர் தேக்கி நன்கு உழவு செய்ய வேண்டும்.
- நிலத்தில் தேக்கிய நீர் தானாகவே மண்ணில் ஊறி வடிகாலில் சேரும்படி செய்ய வேண்டும். இதற்கு ஓரிரு நாள்களாகலாம்.
- மீண்டும் குறைந்தபட்சம் இதை 4 முறையாவது செய்ய வேண்டும்.
- பிறகு மண்ணில் ஈரம் காய்வதற்கு முன் சணப்பு அல்லது தக்கை பூண்டை விதைத்து பூக்கும் சமயத்தில் மடக்கி உழ வேண்டும்.
- பின்னர் வழக்கம்போல் விவசாயிகள் விரும்பும் பயிரை சாகுபடி செய்யலாம்.
மானியம்
- தமிழக அரசு களர், உவர் நிலச் சீர்திருத்த திட்டத்தின் மூலம் களர், உவர் நிலங்களால் பாதிக்கப்பட்ட வயல்களில் மண் மாதிரி எடுத்து அதன் பரிந்துரை அடிப்படையில் ஜிப்சம் மற்றும் ஜிங் சல்பேட் உரங்கள் 50 சதவீத மானியத்தில் வழங்குகிறது.
- மேலும் வடிகால் அமைக்க ஊக்கத் தொகையாக ஒரு ஏக்கருக்கு ரூ.1,000 மானியம் வழங்கப்படுகிறது.
வேலூர் தற்போது 2010-11-ம் ஆண்டில் இத்திட்டம் வேலூர் மாவட்டத்தில் காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் புதுப்பட்டு, வேடல், அன்வர்திகான்பேட்டை, கைலாசபுரம் சாலை, மின்னல், வையலாம்பாடி, சேரி ஐயம்பேட்டை, தச்சம்பட்டறை மற்றும் பெருவளையம் கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம், ஒன்றியத்தில் லாடாவரம், சிறுவள்ளூர், வீரளூர், கிடாம்பாளையம், காம்பட்டு, படாகம் மற்றும் அனையாலை, சேத்துப்பட்டு ஒன்றியத்தில் பிலாசூர், கொரல்பாக்கம், கரைப்பூண்டி, மட்டப்பிறையூர் மற்றும் ராந்தம் ஆகிய கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது என சிவகுமார் சிங் தெரிவித்துள்ளார்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
One thought on “களர் மற்றும் உவர் நிலங்களை சரி செய்ய மானியம்”