கூடுதல் மின்வெட்டால் சம்பா பயிர்கள் கருகும் அபாயம்

தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக நிலவும் கூடுதல் மின்வெட்டு தொடர்ந்தால் சம்பா, தாளடிப் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் சம்பா, தாளடிப் பயிர்கள் சுமார் 4.30 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டன. அறுவடைப் பணிகள் ஜனவரி மாதத்தில் தொடங்கி இப்போது கிட்டத்தட்ட 40 சதம் அளவுக்கு நிறைவடைந்துள்ளன.

ஏறத்தாழ 60 சதப் பரப்பளவில் சம்பா, தாளடி சாகுபடிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.மேட்டூர் அணை பிப்ரவரி 5-ம் தேதி மூடப்பட்டுவிட்டதால், சம்பா, தாளடி விவசாயிகள் மின் மோட்டார்களை நம்பி சாகுபடி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தஞ்சை மாவட்டத்தில் சுமார் 5 மணி நேரம் மின்வெட்டு இருந்து வந்த நிலையில், கடந்த சில நாள்களாக சுமார் 8 மணி நேரம் வரை முன் அறிவிப்பின்றி மின் வெட்டு செய்யப்படுகிறது.

இதேபோல, விவசாயத்துக்கான மும்முனை மின்சாரமும் 4 – 6 மணிநேரம் மட்டுமே கிடைப்பதால், விவசாயிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

இதுகுறித்து காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் தஞ்சை மாவட்டச் செயலர் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் கூறியது:

விவசாயத்துக்கான மும்முனை மின்சாரம் 4 முதல் 6 மணி நேரம்தான் விநியோகம் செய்யப்படுகிறது. அதுவும் பகல்  அல்லது இரவில் விநியோகம் செய்யப்படுமா என்பது தெரியவில்லை.

எந்த நேரத்தில் மின்சாரம் வரும் என்பது தெரியாததால், சம்பா, தாளடிப் பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மின்வெட்டு நேரம் கடந்தசில நாள்களாக முன் அறிவிப்பின்றி அதிகரிக்கப்பட்டுள்ளது.   இது தொடர்ந்தால், பயிர்கள் காய்ந்து கருகும் அபாயம் ஏற்படும். மேலும், மகசூலும் பாதிப்படையக்கூடும்.

இதேபோல, அறுவடைக்குத் தயார் நிலையில் உள்ள வாழை, கரும்பு பயிர்களும் தண்ணீர் இல்லாததால், பாதிப்படையக் கூடிய சூழ்நிலை நிலவுகிறது.

இதுதொடர்பாக சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் யாருமே குரல் எழுப்பாதது வருத்தமளிக்கிறது.

இந்நிலையில், விவசாயிகள் சிலர் டீசல் மோட்டாரை பயன்படுத்தி தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். ஏற்கெனவே, இடுபொருள்கள் செலவு அதிகரித்துவிட்ட நிலையில் இப்போது கூடுதல் செலவு செய்யும் நிலை ஏற்படுகிறது.

இதுபோல, பல்வேறு சிரமங்களுக்கு இடையே விவசாயிகள் சாகுபடி பணிகள் மேற்கொண்டாலும் நஷ்டமடையும் சூழல்தான் நிலவுகிறது.எனவே, மீனவர்களுக்கு டீசல் மானியம் வழங்கப்படுவது போல, விவசாயிகளுக்கும் டீசல் மானியம் வழங்க அரசு முன்வர வேண்டும் என்றார் விமல்நாதன்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *