நாகலிங்க பூ!

இளஞ்சிவப்பு வண்ணமும், சிவப்பு வண்ணமும் கலந்த மாறுபட்ட தோற்றம் கொண்ட மலர்கள், தொலைவிலிருந்து கவர்ந்து இழுக்கும் நறுமணம். மகரந்தத் தூவிகள் படமெடுத்து ஆடும் பாம்பு போல் வித்தியாசமாக இருப்பதால், பெயரும் வித்தியாசம்தான்: நாகலிங்க மலர்கள்.

நீலகிரி மலைப் பகுதிக்கு ஆங்கிலேயர்களால் இந்த மரம் அறிமுகப் படுத்தப்பட்டது. மிதமான தட்பவெப்ப நிலையில் வளரும் தன்மை கொண்ட இந்த மரங்கள், நீலகிரி மாவட்டம் பர்லியாறு பகுதியில் அதிகம் காணப்படுகின்றன.

Courtesy: Wikipedia
Courtesy: Wikipedia

கடல் கடந்து

பல தாவரங்கள் கடல் கடந்து நம் மண்ணை வந்தடைந்துள்ளன. அவை நம்மிடையே பரவலானது மட்டுமில்லாமல், உள்ளூர் மக்களின் ஆதரவைப் பெற்று நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவும் மாறிவிடுவது உண்டு. அவற்றில் ஒன்றுதான் இந்த நாகலிங்க மரமும்.

இதன் தாவரவியல் பெயர் Couroupita guianensis. தென்அமெரிக்காவின் வெப்பமண்டலப் பகுதிகள், மேற்கிந்தியத் தீவுகளைத் தாயகமாகக் கொண்ட இந்த மரம் Lecythidaceae (Barringtonia) தாவரவியல் குடும்பத்தைச் சேர்ந்தது. 1755-ம் ஆண்டு பிரெஞ்சு தாவரவியல் அறிஞர் ழீன் பாப்டிஸ்ட் கிறிஸ்டோபர் இந்த மரத்துக்குத் தாவரவியல் பெயரைச் சூட்டினார்.

வித்தியாசப் பூக்கள்

ஆண்டு முழுவதும் பூக்கும் தன்மை கொண்டது. அடிமரத்தில் இருந்து நேரடியாகக் கிளைகள் பெருகிவிடாத மரம். சராசரியாக 35 மீட்டர் உயரம்வரை வளரும், இந்த மரத்தில் பூக்கள் கொத்துக்கொத்தாகப் பூக்கும். நீண்ட கிளைகள் போன்ற காம்புகளில் பூக்கள் பூப்பதால் மரமே பூக்கள் நிறைந்து காட்சியளிக்கும். ஒரு மரத்தில் ஒரு நாளில் அதிகபட்சமாக ஆயிரம் மலர்கள்கூடப் பூக்கலாம். நம் நாட்டைத் தவிர்த்த பல நாடுகளில் அலங்காரத்துக்காக இம்மரம் வளர்க்கப்படுகிறது.

பாம்பு படமெடுப்பது போன்ற மலரின் தோற்றத்தால் இந்த மலர் புனிதமாகக் கருதப்படுகிறது. நாட்டின் பல சிவாலயங்களில் இந்த மரம் வளர்க்கப்பட்டிருக்கிறது. இலங்கை புத்த மத வழிபாட்டிலும் இந்த மலர் முக்கியமானதாக இருக்கிறது.

Courtesy: Wikipedia
Courtesy: Wikipedia

பீரங்கிக் குண்டு

ஆங்கிலத்தில் இந்த மரத்துக்குக் கேனான் பால் ட்ரீ (பீரங்கிக் குண்டு மரம்) என்று பெயர். மலர்களின் நறுமணம் கவர்ந்தாலும், காய்கள் உருண்டு பெருத்தவை. மரத்துக்குக் கீழே நின்றால் எந்த நேரத்திலும் தலையில் விழுந்து பதம் பார்க்கும் அபாயம் உண்டு.

இந்தத் தாவரத்துக்குப் பல்வேறு மருத்துவக் குணங்கள் உள்ளதாகக் கருதப்படுகிறது. வலி நிவாரணம், உயர் ரத்தஅழுத்தம், கட்டிகளைக் குணப்படுத்த அமேசான் பகுதி மக்கள் இந்தத் தாவரத்தைப் பயன்படுத்திவருவதாகக் கூறப்படுகிறது. பல் வலி, சரும நோய்கள், வயிற்று வலி, மலேரியாவைக் குணப்படுத்தவும் இந்தத் தாவரம் பயன்படுத்தப்படுவதாகத் தகவல்.

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *