தோல் பதனிடும் மற்றும் சாயப்பட்டறையினால் இறந்த நதிகள்!

தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் ஒன்றான ஈரோடு, விவசாயத்திற்கும் தொழில்வளத்திற்கும் அறியப்பட்ட மாவட்டங்களில் ஒன்று.

காவிரி, பவானி, நொய்யல் என மூன்று ஆறுகள் பாய்வதால் விவசாயம் செழித்து வளர்ந்த பூமியாக விளங்கியது இந்த மாவட்டம். கரும்பு, மஞ்சள், நெல் என வளம் கொழிக்கும் பகுதி.

பிறகு, விசைத்தறி, பின்னலாடைத் தொழிலில் ஏற்பட்ட வளர்ச்சியும் அருகில் உள்ள கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஜவுளி உற்பத்தித் தொழிலில் ஏற்பட்ட வளர்ச்சியும் ஈரோட்டில் பெரும் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தியது.

இங்குள்ள நீர்வளம் பெரும் எண்ணிக்கையில் சாயப்பட்டறைகளை கொண்டுவந்தது. அதேபோல, தோல் பதனிடும் தொழிற்சாலைகளும் இங்கு அதிக எண்ணிக்கையில் உருவாக்கப்பட்டன.

பெருந்துறையில் சுமார் 2700 ஏக்கர் பரப்பளவில் இயங்கிவரும் சிப்காட், ஆசியாவின் மிகப் பெரிய தொழிற்பேட்டைகளில் ஒன்று. இங்குள்ள நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகளில் சாயப்பட்டறைகளும் தோல் தொழிற்சாலைகளும் அடக்கம்.

ஒட்டுமொத்தமாக ஈரோடு மாவட்டத்திலிருந்து மட்டும் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஜவுளி ஏற்றுமதி இருந்து வந்தது.

இவை எல்லாவற்றுக்கும் அடிப்படையாக அமைந்தது காவிரி, பவானி நதிகளின் நீர். விவசாயத்திற்கு மட்டுமல்லாமல் ஈரோட்டின் தொழில்துறையே இந்த நீரை நம்பி உருவெடுக்க ஆரம்பித்தது.

ஆனால், இப்படி பிரம்மாண்டமாக வளர்ந்த இந்த தொழில்துறையே ஆறுகளுக்கு எமனாகவும் மாற ஆரம்பித்தது.

தோல் தொழிற்சாலைகளில் இருந்தும் சாயப்பட்டறைகளில் இருந்தும் இரவு – பகல் பாராது வெளியேற்றப்பட்ட கழிவுநீர் காவிரி, பவானி நதிகளை முற்றிலுமாக நாசம் செய்திருக்கிறது.

நொய்யல் நதியைப் பற்றி கேட்கவே வேண்டாம். நொய்யலின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் ஒரத்துப்பாளையம் அணையை திறக்கக்கூடாது என்று விவசாயிகள் போராடும் அளவுக்கு அந்த நதி நாசமடைந்திருக்கிறது.

பெருமளவில் மழை பெய்து, மேட்டூர் அணை திறக்கப்படும் காலங்களில் மட்டுமே ஈரோட்டில் காவிரி காணத்தக்கதாக இருக்கிறது. மற்ற காலங்களில் வறண்டும், கறுப்பு நிற கழிவுநீரோடுமே காணப்படுகிறது.

”ஈரோட்டைப் பொறுத்தவரை மாநகராட்சியின் கழிவுநீர் உட்பட ஒரு நாளைக்கு ஒன்பது கோடி லிட்டர் தண்ணீர் கழிவு நீராக வெளியேறுகிறது. தொழிற்சாலைகளுக்கான பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அதிகம் இல்லாத காரணத்தால், சுத்திகரிப்பு நிலையங்களை வைத்திருக்கும் தொழிற்சாலைகள் மட்டும் சுத்திகரித்த கழிவுநீரை வெளியிடுகின்றன. மற்றவை நேரடியாகவே கழிவு நீரை ஆறுகளிலும் ஓடைகளிலும் கலக்கின்றன” என்கிறார் தமிழ்நாடு தொழில், வணிக பேரமைப்பின் இணை பொதுச் செயலாளர் சிவநேசன்.

பெருந்துறை சிப்காட்டைச் சுற்றியுள்ள சுமார் 5 கி.மீ. சுற்றளவில் நிலத்தடி நீர் பயன்படுத்தவே முடியாத அளவுக்குக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

“இந்த ரசாயனத்தின் மூலம் விவசாயமும் பாதிக்கப்படுகிறது. ஒரு காலத்தில் காளிங்கராயன் கால்வாய் பாசனத்தில் மூலம் ஒரு நாளைக்கு 50 மூட்டை எடுத்துக்கொண்டிருந்த பகுதியில் இப்போது, 20 மூட்டை எடுப்பதற்கே சிரமப்படுகிறோம். நிலங்கள் மலடாக மாறிக்கொண்டிருக்கின்றன. மஞ்சளுக்காக அறியப்பட்ட ஈரோட்டில் தற்போது மஞ்சள் விவசாயம் செய்யவே யோசனையாக இருக்கிறது. ஒரு காலத்தில் ஓர் ஏக்கருக்கு 15 குவிண்டால் எடுத்த இடத்தில் தற்போது 6-7 குவின்டால் எடுக்கவே சிரமமாக உள்ளது” என்கிறார் பாப்பம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயியான லோகநாதன். இவர், அங்குள்ள காகித ஆலையிலிருந்து வெளியேறும் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரில்தான் விவசாயம் செய்துவருகிறார்.

தோல் தொழிற்சாலைகளும் சாயப்பட்டறைகளும் நிலத்தடி நீரையும் ஆறுகளையும் மாசுபடுத்துவதால் அவற்றுக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதில் பல தோல் பதனிடும் கூடங்களும் சாயப்பட்டறைகளும் மூடப்பட்டிருக்கின்றன. இதனால், இங்கிருந்து நடக்கும் ஏற்றுமதி வெறும் ஐயாயிரம் கோடி ரூபாயாக குறைந்திருக்கிறது என்கிறார்கள் வர்த்தக சங்கங்களைச் சேர்ந்தவர்கள்.

“சுத்திரிப்பு நிலையங்களை அமைப்பதற்கான செலவு மிக அதிகம். தினமும் ஒரு லட்சம் லிட்டர் நீரை சுத்திகரிப்பதற்கான ஆலையை அமைக்க சுமார் ஒரு கோடி ரூபாய் செலவாகும் என்பதால் தனியாக ஆலையை அமைக்கத் தயங்குகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் 17 பேர் க்ளஸ்டராக இணைந்து 250 யூனிட்டிற்காக ஒரு பொது சுத்திகரிப்பு நிலையத்தை அருள்புரத்தில் ஏற்படுத்தி, செயல்படுத்தி வருகிறார்கள். அதுபோல ஓர் ஏற்பாடு இங்கே ஏதும் இல்லை” என்கிறார் சிவநேசன்.

நீர் மாசுபாடு பிரச்சனையை மனதில் கொண்டு 10 ஆண்டுகளுக்கு முன்பே தொழில் வணிகர்கள் சபையின் சார்பில் ஒரு கோரிக்கை தமிழக அரசிடம் முன்வைக்கப்பட்டது. அதாவது, 700 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு பொது சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்து, கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களின் கழிவுநீரை சுத்திகரித்து, பைப் மூலம் கரூர் வரை எடுத்துச் சென்று, அங்கே ஒரு சேகரிக்கும் அமைப்பை வைத்து திருச்சி வழியாக நாகப்பட்டினத்தில் சென்று கடலில் சேர்ப்பதுதான் அந்த திட்டம்.

“இந்தத் திட்டத்தை முதல்வர் 110 விதியின் கீழ் அறிவிக்கவும் செய்தார். இது நடந்து ஏழெட்டு ஆண்டுகளாகிவிட்டன. இன்னும் ஒன்றும் நடக்கவில்லை. இதனைச் செயல்படுத்தினால், சாயத் தொழிற்சாலை, தோல் தொழிற்சாலை உள்ளிட்ட பல தொழிற்சாலைகளை மாசுபாடு இன்றி நடத்த முடியும். ஒட்டு மொத்த மேற்கு மண்டலமுமே வளர்ச்சியடையும். ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு கட்சி வேட்பாளரிடமும் இந்தக் கோரிக்கையை வைக்கிறோம். ஆனால், நடப்பதில்லை.” என்கிறார் சிவநேசன்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொத்தமுள்ள 33 மாவட்டங்களில் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் காவிரியின் நீரை ஏதோ ஒரு வகையில் சார்ந்திருக்கும் மாவட்டங்கள். ஆனால், ஈரோடு மாவட்டத்தை காவிரி கடந்து செல்லும்போது பெரிய அளவில் மாசுபடுத்தப்படுகிறது. இந்த மாசுபடுத்தப்பட்ட நீரே திருச்சி, தஞ்சை மாவட்டங்களுக்குச் செல்கிறது.

மாசுபட்ட குடிநீரைக் குடிப்பது, மாசுபட்ட நீரில் வேலை செய்வது போன்ற காரணங்களால் தமிழகத்தின் புற்றுநோய் தலைநகராக ஈரோடு உருவாகிவருகிறது என்ற கவலையும் இங்கே அதிகரித்துவருகிறது. ஒவ்வொரு நாளும் 20 முதல் 25 புதிய புற்றுநோயாளிகள் ஈரோடு மாவட்டத்தில் அடையாளம் காணப்படுகின்றனர்.

“இதற்குக் காரணமே, மாசு ஏற்படுத்தும் என்பதால் பிற நாடுகளில் தடைசெய்யப்பட்ட தொழில்கள் இங்கே அனுமதிக்கப்படுவதுதான். இப்போது உள்ளூராட்சி, மாநகராட்சிகளின் கழிவுகள் அப்படியே ஆற்றில் கலக்கப்படுகின்றன. அதிலிருந்தே குடிநீர் எடுத்து வழங்கப்படுகிறது. இதனால், மாவட்டம் முழுக்க நோய் பரவியிருக்கிறது. இப்போது உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகளின் வடிகாலாகத்தான் இங்கிருக்கும் ஆறுகள் இருக்கின்றன. கோடையில் இங்கிருக்கும் நீரைக் குடிக்கவே முடியாது” என்கிறார் தமிழ்நாடு கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லுச்சாமி.

ஈரோட்டின் கிளை நதியான பவானி, நீலகிரியின் அமைதிப் பள்ளத்தாக்கில் உற்பத்தியாகி, கேரளாவிற்குள் சென்று 35 கி.மீ. பயணித்து பில்லூர் அணைக்கு வருகிறது. அங்கிருந்து பவானி சாகர் அணையை அடைந்து கீழ் பவானி பாசனம், கொடிவேரிப் பாசனம், காளிங்கராயன் கால்வாய் பாசனம் என மூன்று பாசனத் திட்டங்களின் கீழ் 2.5 லட்சம் ஏக்கர் நிலத்திற்கு பாசன வசதியளிக்கிறது. ஆனால், பெரும்பாலும் பவானியின் நீர் விவசாயிகளுக்குக் கிடைப்பதில்லை என்கிறார் நல்லுசாமி.

“கிழக்கு நோக்கிச் சென்றுகொண்டிருந்த பவானி நதி, தற்போது குழாய்களின் மூலம் தெற்கு நோக்கி பாயச்செய்யப்படுகிறது. கோவை முதலில் சிறுவாணித் தண்ணீரையே குடிநீருக்குப் பயன்படுத்திக்கொண்டிருந்தது. ஆனால், நகரம் பெரியதானதால், பல குடிநீர்த் திட்டங்களை பவானியின் நீரிலிருந்து செயல்படுத்துகிறார்கள். இப்போது மூன்றாவது குடிநீர் திட்டத்தை பில்லூரிலிருந்து செயல்படுத்தவிருக்கிறார்கள். இப்படி ஒரு வடிநிலத்திலிருந்து இன்னொரு வடிநிலத்திற்கு நீரை எடுத்து பயன்படுத்துகிறார்கள். அதனால், யார் பிரதானமாக பயன்பெற்று வந்தார்களோ அவர்களுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை” என்கிறார் நல்லுசாமி.

ஆனால், ஈரோடு நகரத்தைப் பொறுத்தவரை பவானியின் நீரை எடுத்து நேரடியாக பயன்படுத்த முடியாத நிலையில்தான் உள்ளது. தொழிற்சாலைகளால் மாசுபடுத்தப்பட்ட தண்ணீர் குமாரபாளையம், பள்ளிப்பாளையம் பகுதிகளில் நேரடியாக பவானியோடு கலக்கிறது. அதனால், ஈரோட்டிற்கான குடிநீரை நகருக்குள் இருந்து எடுக்க முடியாமல் ஊராட்சிக்கோட்டை என்ற இடத்திலிருந்து எடுத்து, மக்களுக்கு வழங்கிவருகிறது ஈரோடு மாநகராட்சி.

“மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தைக் கேட்டால், முழுமையாக சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரே ஆற்றில் கலக்கிறது என்கிறார்கள். அது உண்மையென்றால் ஏன் ஊராட்சிக் கோட்டையிலிருந்து தண்ணீர் எடுக்க வேண்டும்?” என்று கேள்வியெழுப்புகிறார் நல்லுசாமி.

நீலகிரி மலைப்பகுதி, தாளவாடி மலைப்பகுதி, பர்கூர் மலைப்பகுதிகளில் இருந்த காடுகள் அழிக்கப்பட்டுவிட்டன. இதனால் மழைப் பொழிவு வெகுவாகக் குறைந்துவிட்டதாகவும் நீலகிரியில் விவசாயத்தில் பயன்படுத்தப்படும் பூச்சிமருந்தின் எச்சங்களும் பவானி நீரில் உள்ளதாகவும் இப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

“பவானி அணை கட்டப்பட்டபோது வருடம்தோறும் அந்த அணை நிரம்பிவந்தது. ஆனால், இப்போது பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறையே நிரம்பினால் அதிசயம் என்ற நிலை இருக்கிறது” என்கிறார் தமிழக ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஈ.வி.கே. சண்முகம்.

நதிகளே ஜீவநாடியாக இருக்கும் இந்த மாவட்டத்தில், இந்த மாசுபாட்டுப் பிரச்சனையும் தண்ணீர் பிரச்சனையும் தேர்தலில் எதிரொலிக்குமா?

“தேர்தலில் நிச்சயம் இதெல்லாம் எதிரொலிக்காது. இவையெல்லாம் மறக்கடிக்கப்படும். பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. ஆனால், தற்போது ஏற்பட்டுவரும் விழிப்புணர்வால் எதிர்காலத்தில் தேர்தல் பிரச்சனையாக மாறும் என்றே கருதுகிறேன். இப்போது அந்த வாய்ப்பில்லை” என்கிறார் சண்முகம்.

சிவநேசனைப் பொறுத்தவரை, தொழில்துறையில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவே மிகப் பெரிய தேர்தல் பிரச்சனையாக இருக்குமெனக் கருதுகிறார். “ஈரோட்டில் லட்சக்கணக்கான சிறு, குறு தொழில் செய்பவர்கள் இருக்கிறார்கள். இவர்களின் குடும்பத்தினரையும் சேர்த்தால், அந்த எண்ணிக்கை கணிசமானது. மாசுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்பட்டிருக்கும் பின்னடைவு தேர்தலில் எதிரொலிக்கும்” என்கிறார் சிவநேசன்.

பலரும் சுட்டிக்காட்டுவதைப்போல, ஈரோடு தொகுதிக்கான தேர்தல் பிரசாரங்களிலும் இது தொடர்பான விவாதங்கள் ஏதும் பெரிதாக நடக்கவில்லை.

ஆகவே, மாசுபாட்டைக் குறைக்க அரசு மெல்லமெல்ல எடுத்துவரும் நடவடிக்கைகள் நதிகளையும் இந்த நதிகளைச் சார்ந்திருக்கும் ஈரோட்டையும் மீட்கும் என காத்திருப்பதைத் தவிர, இப்போது வேறு வழியேதும் இல்லை.

நன்றி: பீ பீ சி

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *