நெல்பயிரில் இயற்கை முறையில் பூச்சி தாக்குதலைச் சமாளிப்பது எப்படி?

நெல் நடவு வயலில் குருத்துப் பூச்சி, இலை சுருட்டுப் புழு, இலை பிணைக்கும் புழு, மஞ்சள் கம்பளிப் புழு, பச்சை கொம்பு புழு, படைப் புழு போன்றவை தாக்கலாம்.

இவற்றை ஒருங்கிணைந்த மேலாண்மை முறை யில் கட்டுப்படுத்த சுற்றுச்சூழல் சார்ந்த  முறை இதோ:

  • ஓர் ஏக்கருக்கு ஓரு விளக்குப் பொறி, 5 இனக்கவர்ச்சி பொறி, 25 டி வடிவ குச்சிகள் ஆகியவற்றை ஓர் ஏக்கரில் வைக்க வேண்டும்.
  • 2 ஒட்டுண்ணி குளவி அட்டைகளை ஓர் ஏக்கருக்கு 2 சிசி வீதம் நடவு நட்ட 30, 37, 44, 51 நாள்களில் கட்ட வேண்டும்.
  • நட்ட 40- 55 நாள் வரை இலையுண்ணும் புழுக்கள் மற்றும் முட்டைக் கொம்பு வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த ஓர் ஏக்கருக்கு 250 மி.லி. வேப்ப எண்ணைய், 100 கிராம் காதி சோப்பு இரண்டையும் கலந்து தெளிக்க வேண்டும்.மேலும் சாணிப்பால் திரவத்தையும் தெளிக்கலாம்.
  • வளர்ந்த புழுக்களைக் கட்டுப்படுத்த ஓர் ஏக்கருக்கு 1 கிலோ பெவேரியா பேசியானா என்ற  மருந்தை 200 லிட்டர் நீரில் கரைத்து அதிகாலை நேரத்தில் தெளிப்பதால் புழுக்களின் மீது நோய் உருவாகி இறக்கும்.
  • புழுக்கள் தாக்குதல் அதிகமாக இருந்தால் பேசில்லஸ் துருஞ்சியான்சிஸ் (பிடி) என்ற  பாக்டீரிய மருந்தை ஓர் ஏக்கருக்கு 250 கிலோ தெளித்தும் கட்டுப்படுத்தலாம்.
  • நெல்லில் கதிர் வரும்போது கதிர் நாவாய் பூச்சி கதிரைப் பாதிக்கும். அப்போது அந்த வயலில் இருந்து ஓர் நாற்றம் வரும். அந்த நேரத்தில் ஓர் ஏக்கருக்கு 100 மி.லி. வேப்ப எண்ணெய் கதிரில் மட்டும் படுமாறு தெளிக்க வேண்டும்.
  • கதிர் வரும் நேரத்தில் டி வடிவ குச்சியை எடுத்துவிட வேண்டும். இல்லையென்றால் காக்கை, குருவி அமர்ந்து கதிரைச் சாப்பிடும்.
  • நெல் வேரைத் தாக்கும் நூல் புழுக்கள், வண்டுகளைக் கட்டுப்படுத்த ஓர் ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இட வேண்டும்.

இவ்வாறு பூச்சி தாக்குதலைச் சமாளிப்பது குறித்து புதுச்சேரி பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தின் பூச்சியியல் நிபுணர் என். விஜயகுமார் கூறினார்

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *