தென்னை நார்க்கழிவில் கம்போஸ்ட் உரம்

பட்டுக்கோட்டை, திருவோணம் வட்டார சாலையோரங்களில் ஆங்காங்கே கிடக்கும் தென்னை நார்கழிவுகளை பயன்படுத்தி கம்போஸ்ட் உரம் தயாரிக்கலாம் என்று விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து வேளாண்மை உதவி இயக்குனர் மதியரசன் வெளியிட்டுள்ள அறிக்கை:

  • பட்டுக்கோட்டை, திருவோணம் வட்டாரங்களில் சாலையோரங்களில் ஆங்காங்கே தென்னை நார்கழிவுகள் பயன்பாடின்றி குவியல் குவியலாக குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதை மக்க செய்து கம்போஸ்ட் உரங்களாக பயன்படுத்தலாம்.
  • இதற்கு தென்னை நார்கழிவு 1 டன், புளூரோட்டஸ் காளான்வித்து 1 கிலோ, யூரியா 5 கிலோ வேண்டும்.
  • முதலில் 100 கிலோ தென்னை நார்கழிவை 5 மீட்டர் இன்ட் 3 மீட்டர் நீள, அகலமுடைய மேடான நிலப்பரப்பில் சமமாக பரப்ப வேண்டும்.(சராசரியாக 4 முழுச்சாக்கு கொள்ளளவு கொண்டது).
  • பின்னர் அதன்மேல் 200 கிராம் புளூரோட்டஸ் காளான் வித்துக்களை பரப்ப வேண்டும்.
  • அதன்மேல் தண்ணீர் தெளித்து 100 கிலோ தென்னை நார்கழிவை பரப்பி ஒரு கிலோ யூரியாவை சீராக தூவ வேண்டும்.
  • மீண்டும் அதன்மேல் நன்கு தண்ணீர் தெளிக்க வேண்டும். இதேபோல் நார்கழிவு, புளூரோட்டஸ் காளான்வித்து மற்றும் யூரியாவை 10 அடுக்குகள் வரும்வரை மாற்றி மாற்றி அடுக்கி (ஒரு மீட்டர் உயரம் வரை) ஈரம் காயாதவாறு தினமும் தண்ணீர் தெளித்து வரவேண்டும்.
  • 30 நாட்களுக்கு பிறகு இந்த கழிவானது கருப்பு நிறத்தில் மாறும்.
  • இதுவே கம்போஸ்ட் உரமாக பயிர்களுக்கு பயன்படுத்தக்கூடிய மிகச்சரியான தருணமாகும்.
  • தென்னை நார்கழிவு கம்போஸ்ட் உரத்தால் தென்னை நார்கழிவில் உள்ள நார் பொருட்கள் சிதைக்கப்பட்டு எளிதில் பயிருக்கு கிடைக்கும் சத்தாக மாறுகிறது.
  • கரிமம், நைட்ரஜன் ஆகியவற்றின் விகிதாச்சாரம் 112:1 லிருந்து 21:1 என்ற அளவுக்கு குறைக்கப்படுகிறது. இதனால் நைட்ரஜன் சத்து வீணா வது குறைந்து பயிருக்கு பெருமளவில் கிடைக்கிறது.
  • தழைச்சத்தின் அளவு 0.26 சதத்திலிருந்து 1.06 சதமாக அதிகரிக்கிறது.
  • மக்கிய கம்போஸ்டில் நுண்சத்துக்கள், முதன்மை சத்துக்கள் மற்றும் இரண்டாம் நிலை சத்துக்கள் அளவு அதிகமாக இருக்கும். இக்கம்போஸ்ட் உரமானது மானாவாரி நிலங்களுக்கும், களர் உவர் நிலங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
  • மண்ணின் பவுதீக மற்றும் வேதியியல் தன்மைகளை பாதுகாக்கிறது.
  • இந்த உரமானது நிலத்துக்கு சத்துக்கள் அளிப்பதுடன் மண்ணின் நீர்பிடிப்பு திறனை அதிகரிக்க செய்கிறது.
  • ஒரு ஏக்கருக்கு சாதாரணமாக 5 டன் தொழு உரம் இடும் இடத்தில் இக்கம்போஸ்ட் உரத்தை 3 டன் இட்டாலே தொழு உரத்துக்கு இணை யான மகசூலும், விளைபொருட்களின் தரமும், மண்ணின் வளமும் பாதுகாக்கப்படுவதுடன் சுற்றுச்சூழல் கேடும் தவிர்க்கப்படுகிறது.
  • எனவே விவசாயிகள் தென்னை நார்கழிவு கம் போஸ்ட் உரம் தயாரித்து பயிர்களுக்கு இட்டு அதிக பலனை பெறலாம்.

நன்றி: தினகரன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *