உடன்குடி வட்டாரம் சிறுநாடார் குடியிருப்பு ஊராட்சியில் பெரியபுரம் கிராமத் தில் விவசாயிகள் பங்கேற்ற மண்புழு உரம் தயாரித்தல் பயிற்சி நடைபெற்றது.அதில் உடன்குடி வேளாண்மை உதவி இயக்குநர் த.பாரதி முன்னிலையில் தூத்துக்குடி வேளாண்மை அலுவலர் (தரக்கட்டுபாடு) ந.மலர்விழி மண்புழு உரம் தயாரித்தலின் செயல்முறைகளை விளக்கங்களுடன் கூறினார்.அவர் கூறியதாவது:
- மண்புழுவைக் கொண்டு மக்கு உரம் தயாரிக்க சாணம், மண் மற்றும் நிழலான இடம் தேவைப்படும். நன்கு சமமான சற்றே மேடான நிலப் பகுதியில் 3 மீட்டர் அகலம் 2 மீட்டர் நீளம், 1 அடி ஆழத்திற்கு தொட்டி அமைக்க வேண்டும்.
- அடியில் உடைத்த செங்கல் மற்றும் மணல் பரப்ப வேண்டும்.
- இது தண்ணீர் அதிக அளவில் தேங்காமல் தடுக்க கூடியது. அந்த மண்ணை நன்றாக நனையும் அளவிற்கு ஈரப்படுத்த வேண்டும்.
- நிழலில் காய்ந்த பொடி செய்த மாட்டுச்சாணத்தை ½ அடி உயரத்திற்குப் பரப்பி ஈரப்படுத்த வேண்டும்.
- இவற்றின் மீது மண்புழுக்களை விட்டு சாணியை சிறிதளவு தண்ணீரில் கரைத்து மண்புழுக்கள் மீது ஊற்ற வேண்டும்.
- அதற்கு மேல் காய்கறி கழிவுகளை பரப்பி வைக்கோல் கொண்டு மூடி விட வேண்டும். இதனை தினமும் ஈரப்படுத்துதல் வேண்டும்.
- மண்புழுக்கள், சாணத்தை தின்று கழிவுகளை குவியல் குவியலாக வெளியிடும். இந்த குவியலை வாரம் ஒருமுறை அப்புறப்படுத்தி நிழலில் காய வைத்து உபயோகிக்கலாம்.
- மண்புழுக் கழிவுகளில் நல்ல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. தழை, மணி, சாம்பல் சத்துடன், சுண்ணாம்பு மற்றும் மெக்னீஸியம் சத்தும் நிறைந்து காணப்படும் மண்புழு உரம் தயாரித்தல் மிகவும் எளிதானதாகும்.
- 45 முதல் 60 நாட்களில் 1 கிலோ எடையுள்ள மண்புழுக்கள் 10 கிலோ அளவில் மண்புழுக்களை உற்பத்தி செய்யும்.
- மாட்டுச்சாணம், காய்கறி கழிவுகள் தீரத்திர அவற்றை மீண்டும் இட வேண்டும்.
- 45 நாட்களில் மண்புழு உரம் தயாராகி கறுப்பு நிறத்தில் காணப்படும். இது நன்கு மக்கியமைக்கான அறிகுறி ஆகும்.
- இத்தகைய இயற்கை உரங்களைக் கொண்டு பயிரிடும் பயிர்கள் மற்றும் விளைப் பொருட்கள் நல்ல சுவையுடனும், உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்காதவனவாகவும் இருக்கின்றன. விவசாய ஆர்வலர் குழுக்கள் மண்புழு உரத்தினை தயார் செய்து, விற்பனை செய்து தங்கள் வருமானத்தை பெருக்கி கொள்ளலாம் என்றார்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
thanks to you mam