தமிழகத்தில் விவசாயிகள் உழவு மாடுகளை அதிகமாக பராமரிப்பதில்லை. பெரும்பாலும் டிராக்டர் இயந்திரக்கலப்பை மூலம் நிலத்தை உழுகிறார்கள். ஆகையால் நமக்கு சாணம் எரு, இதர கழிவுகள் அதிகம் கிடைக்க வாய்ப்பில்லை.
ரசாயன உரங்களை அதிகம் பயன்படுத்துவதால் நிலத்தின் வளம் பாதிப்படைகிறது.
இச்சூழலில் குறைவான இயற்கை எருவை கொண்டு ஊட்டமேற்றிய தொழுஉரம் தயாரிக்க எளிய முறையை விவசாயிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.
இதன்படி நன்கு அழுகிய தொழுஉரம் 300 கிலோ. பரிந்துரைக்கப்படும் மணிச்சத்து (பயிரை பொறுத்து மாறுபடும்) அவசியம். உதாரணமாக நிலக்கடலைக்கு 4 கிலோ மணிச்சத்து, 25 கிலோ சூப்பர் பாஸ்பேட்.
மானாவாரி பருத்திக்கு 8 கிலோ மணிச்சத்து, 50 கிலோ சூப்பர் பாஸ்பேட். மண் வெட்டி மற்றும் இரும்பு தட்டு போன்றவை தேவை.
தயாரிக்கும் முறை
- முதலில் ஒரு மேடான மர நிழல் உள்ள பகுதியை 6 க்கு 3 அடி என்ற அளவில் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
- பின் 300 கிலோ தொழுவுரத்தையும், பயிரை பொறுத்து பரிந்துரை செய்யப்படும் சூப்பர் பாஸ்பேட்டையும் நன்கு மண் வெட்டி கொண்டு கலந்து விட வேண்டும்.
- தேவையான அளவு தண்ணீர் விட்ட பின்பு கலவையை குவியலாக்கி செம்மண் கலவையால் நன்கு பூசி விட்டு காற்று புகாமல் மூடி விட வேண்டும்.
- ஒரு மாதம் கழித்து குவியலை பிரித்து பயிருக்கு தேவையான அளவு யூரியா மற்றும் பொட்டாஷ் உரங்களை கலந்து உழவு சாலில் ஊட்டமேற்றிய தொழுவுரத்தை போட வேண்டும்.
- இப்படியாக ஒரு மாதம் மூடி வைத்து ஊட்டமேற்றிய உரத்தை தயாரிப்பதனால் மணிச்சத்து பயிருக்கு கிடைக்கும் வகையில் மாற்றப்பட்டு பயனாகிறது.
- ஊட்டமேற்றிய தொழுஉரம் 300 கிலோ ஒரு ஏக்கருக்கு இடுவது 2.5 டன்கள் எரு இடுவதற்கு ஈடாகும்.
- மண்ணின் வளமும் கூடுகிறது. தொழுஉரம் கிடைக்காத இடங்களில் மேற்கூறிய முறையில் ஊட்டமேற்றிய தொழுவுரத்தினை தயாரித்து இடலாம்.
- இது மண் வளத்தை மேம்படுத்தும், மகசூல் பெருக வழி வகுக்கும்.
தொடர்புக்கு 9380755629 .
– எம்.ஞானசேகர்
விவசாய ஆலோசகர், சென்னை.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்