கும்பகோணம் அடுத்த திருவலஞ்சுழியை சேர்ந்த ஒரு விவசாயி, அவரது நிலத்தில் மலை காய்கறிகளான கேரட், முள்ளங்கி, பீட்ரூட், காலிபிளவர், நூக்குல் உள்ளிட்ட காய்கறிகளை கடந்த சில ஆண்டுகளாக சாகுபடி செய்து வருகிறார்.
இந்தாண்டு முதன்முறையாக இவரது ஒரு ஏக்கர் நிலத்தில் ஊட்டி மிளகாய் சாகுபடி செய்துள்ளார்.
இதற்காக கடந்த 3 மாதத்துக்கு முன் நிலத்தை உழுது பக்குவப்படுத்தி விட்டு ஊட்டிக்கு சென்று அங்குள்ள விவசாயியிடம் ஊட்டி மிளகாய் விதைகளை வாங்கி கொண்டு அவர்களிடமே 2 நாட்கள் பயிற்சி எடுத்து வந்து விதையை நிலத்தில் தெளித்துள்ளார். தற்போது அனைத்து மிளகாய் செடிகளும் நன்றாக வளர்ந்து காய்கள் பெரியதாகியுள்ளது. இதனால் ஒரு கிலோ ஊட்டி மிளகாய் ரூ.50க்கு விற்பனை செய்து வருகிறார்.
இதுகுறித்து விவசாயி சேகர் கூறுகையில், கும்பகோணம் பகுதியில் ஊட்டி மிளகாய் சாகுபடியை முதன்முறையாக செய்துள்ளேன். இதற்காக இயற்கை உரங்களை, விதைப்பதற்கு முன் வயலில் போட்டு உலர வைத்து அதில் தண்ணீர் விட்டு உழுது பதப்படுத்திய பின் மிளகாய் விதையை விதைத்தேன். கடந்த அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் விதைக்கப்பட்ட செடிகளில் மிளகாய் காய்த்துள்ளது.
தற்போது பனிக்காலமாக இருப்பதாலும் ஊட்டி மிளகாவுக்கு ஏற்ற சீதோஷ்ண நிலையாக இருப்பதாலும் ஊட்டி மிளகாய் செடிகளில் மிளகாய்கள் அதிகளவில் காய்த்து தொங்குகிறது. இங்கு தரமான இயற்கை முறையில் சாகுபடி செய்வதால் கும்பகோணம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ளவர்கள் ஒரு கிலோ ரூ.40க்கு வாங்கி செல்கிறார்கள் என்றார்.
நன்றி: தினகரன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்