கெர்கின்ஸ் வகை வெள்ளரிக்காய் சாகுபடி

கள்ளக்குறிச்சி பகுதியில் வெளிநாடுகளில் ஊறுகாய் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் கெர்கின்ஸ் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயம் முக்கிய பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதியில், அதிகளவிலான அரிசி ஆலைகள், கூட்டுறவு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகள் உள்ளதால் நெல், கரும்பு அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.அதேபோன்று, பருவநிலை மாற்றத்திற்கேற்ப வெண்டை, சின்ன வெங்காயம், கத்திரிக்காய், மிளகாய் போன்ற தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடியிலும் விவசாயிகள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

விவசாயத்தில் லாபம் ஈட்டும் வகையில் நவீன தொழில் நுட்பங்களுடன் மாற்று பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். வெளிநாடுகளில் ஊறுகாய் தயாரிப்புக்கு அதிகளவில் பயன்படுத்தப்படும் வெள்ளரிக்காய் ஒட்டு ரகமான ‘கெர்கின்ஸ்’ காய் சாகுபடியில் விவசாயிகள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அமெரிக்கா, ஜெர்மன், பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு ‘கெர்கின்ஸ்’ வகை வெள்ளரிக்காய்கள் பதப்படுத்தப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. திண்டுக்கல் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிறுவனத்தினர் விதைகள் மற்றும் பந்தல் அமைப்புக்கு தேவையானவற்றை விவசாயிகளிடம் கொடுத்து சாகுபடிக்கான வழிவகை மேற்கொள்கின்றனர்.பாகற்காய் சாகுபடிக்கு பந்தல் அமைப்பது போல் ‘கெர்கின்ஸ்’ சாகுபடி செய்யப்படுகிறது.

2 மாத பயிரான ‘கெர்கின்ஸ்’ 25வது நாளில் இருந்து காய்க்கத் துவங்கும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் காய்கள் பறிக்கப்படுகிறது.ஒரு ஏக்கர் சாகுபடியில் 25வது நாளிலிருந்து, ஆயுட்காலமான 60 நாட்கள் வரை 6 டன் அளவிற்கு மகசூல் கிடைக்கிறது. தரமான ஒரு கிலோ காய் 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விலை கிடைக்கும்.நிறுவனத்தினர் நிலத்திற்கே வந்து விவசாயிகளிடம் பணத்தைக் கொடுத்து வாங்கிச் செல்கின்றனர்.

குறைந்த நாட்களில் அதிகம் லாபம் கிடைப்பதால், கள்ளக்குறிச்சி அடுத்த குதிரைச்சந்தல், எஸ்.ஒகையூர், கோமுகி டேம், வடதொரசலுார், பீளமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ‘கெர்கின்ஸ்’ வகை வெள்ளரிக்காய் சாகுபடியில் விவசாயிகள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நன்றி: தினமலர்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “கெர்கின்ஸ் வகை வெள்ளரிக்காய் சாகுபடி

  1. வெங்கடேசன் says:

    இது கீரைக்காய் வகையா?திருவண்ணாமலை போன்ற பகுதிகளில் பயிரிடலாமா! அவ்வாறாயின் தி.மல விவசாயிகளுக்கு தெரிவிக்கலாமே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *