மேய்ச்சல் நிலங்களுக்கு கால்நடைகளை அனுப்புவது காலம் காலமாகவே இருந்து வருகிறது. கிராம விவசாயிகள் பெரும்பாலானோர் தங்கள் பகுதிகளில் வளரும் நச்சுத் தாவரங்களை பற்றி அறிந்து வைத்திருப்பார்கள்.
சாதாரணமாக நச்சுத் தாவரங்களை மேய்ச்சலின் போது கால்நடைகள் தவிர்த்து விடும். இருப்பினும் வறட்சி காலங்களில் கடும் தீவன தட்டுப்பாடு ஏற்படும் நேரங்களில் சில வகையான நச்சுத் தாவரங்களை அவை சாப்பிட்டு விடுவதுண்டு. இதனால் சில சமயங்களில் கால்நடைகள் இறந்து விடும்.
பால் உற்பத்தி குறையும்
இம்மாதிரி நேரங்களில் கிராம விவசாயிகள் சிலர் தங்கள் கால் நடைகளுக்கு கை வைத்தியம் பார்ப்பார்கள்.
அப்போது சில தாவரங்களின் செடி கொடிகளை மருந்தாக தருவார்கள். இதனாலும் நோய் பாதித்த கால்நடைகளில் நோயின் தன்மை தீவிரமடையும்.
மனிதனுக்கு மருந்தாகப் பயன்படும் சில தாவரங்கள் கால்நடைகளுக்கு நஞ்சாகலாம். நச்சுத் தாவரங்களின் அளவினை பொறுத்து கால்நடைகளால் பால் உற்பத்தி குறையும் அல்லது சினையுற்ற மாடுகளில் கருச்சிதைவு உண்டாகும்.
இவ்வாறான பொருளாதார இழப்பினை விவசாயிகள் சந்திக்காமல் இருப்பதற்கு தங்கள் சுற்றுப்புறங்களில் உள்ள செடி கொடிகளின் தன்மை பற்றி தெரிந்து வைத்திருப்பது நலன் பயக்கும்.
பெரும்பாலும் ஒடித்தால்
அவற்றில் இருந்து பால் வந்தால், அத்தாவரங்களெல்லாம் நச்சுத்தன்மை உடையவையாகும். மணத்தக்காளி, கண்டங்கத்திரி, காட்டுக்கத்தரி, சுரை, தக்காளி போன்ற தாவரங்கள் கால்நடைகளை பொறுத்தமட்டில் மிக நச்சுத்தன்மை உடைய தாவரங்களாகும்.
நோய் அறிகுறி
செம்பருத்தி வகை செடிகள், பேய் அவரை, கல்வாழை, ஆரைகீரை, அவரி, பரங்கி, ஆவாரை, மிளகாய்ப்பூண்டு போன்ற தாவரங்களை கால்நடைகள் சாப்பிடும்போது, எவ்வித உடனடி நோய் அறிகுறி இன்றி, நாள் ஆக ஆக வலு விழந்து பல நாட்கள் சென்ற பின் இறந்து விடும். நெருஞ்சி, ஆனை நெருஞ்சி, விதைகளோடு கூடிய முட்டைக்கோஸ், டர்னிப், பூஞ்சக்காளான் போன்றவற்றை சாப்பிடுவதால் மடிப்பகுதியில் புண்கள் உண்டாகும். இதனால் மடி நோய் ஏற்பட்டு பால் அளவு குறையலாம்.
மேய்ச்சல் நிலங்களில் வளரும் நச்சு தாவரங்களை முடிந்தளவு கண்டுபிடித்து அழித்து விட வேண்டும். அப்பகுதியில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது. உப்புக்கள், தாது உப்புக்களை கால்நடைகளின் தீவனத்தில் சேர்ப்பதால் சில நச்சுத்தாவரங்களை கால்நடைகள் சாப்பிடாமல் தவிர்க்கலாம். போதுமான அளவு குடிதண்ணீர் இருந்தால் சில நச்சு தாவரங்களை கால்நடைகள் உண்ணாமல் தவிர்த்து விடும்.
தொடர்புக்கு 9486469044 .
– டாக்டர் வி. ராஜேந்திரன்
முன்னாள் இணை இயக்குனர்
கால்நடை பராமரிப்பு துறை, நத்தம்.
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்