மாடுகளில் மடி நோய்

நோயின் தன்மை

  • மடி நோய் பல்வேறு பட்ட காரணிகளால் மாடுகளின் மடியில் ஏற்படும் அழற்சியாகும்
  • இந்நோயினால் மாடுகளின் பாலின் நிறம் மற்றும் தன்மை மாறி விடுகிறது
  • பால் உற்பத்தி திடீரென குறைந்து விடுவதுடன் அதனால் அதிகமான பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது
  • அதிக பால் உற்பத்தி செய்யும் மாடுகள், குறைந்த அளவு பால் உற்பத்தி செய்யும் மாடுகளை விட அதிகம் பாதிக்கப்படுகின்றன
  • அயல் நாட்டின மற்றும் கலப்பின மாட்டினங்கள், உள்நாட்டின மாட்டினங்களை விட இந்நோயினால் அதிகம் பாதிக்கப்படுகின்றன

நோய்க்கான காரணங்கள்

பாக்டீரீயா, பூஞ்சைள் மற்றும் மைக்கோபிளாஸ்மா போன்ற நுண்ணுயிரிகள் மடி நோய் உண்டாக்கும் காரணிகளாகும்

மடி நோயினை ஏற்படுத்தும் முக்கியமான நுண்ணுயிரிகளாவன- ஸ்டஃபைலோகாக்கஸ் ஆரியஸ், ஸ்டஃபைலோகாக்கஸ் அகலக்சியே, ஸ்ட்ரெப்டோகாக்கஸ் ஜூஎபி டெமிக்கஸ், ஸ்ட்ரெப்டோகாக்கஸ் ஃபீகாலிஸ், ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பயோஜீனஸ், கிளெப்சியல்லா ஸ்பீஸ், மைக்கோபாக்டீரியம் போவிஸ், ஈ.கோலை, புரூசெல்லா அபார்டஸ், சூடோமோனாஸ் பயோசயனியஸ், லெப்டோஸ்பைரா பொமானா, பேஸ்சுரெல்லா மல்டோசிடா போன்ற நுண்ணுயிரிகள் மடி நோயினை ஏற்படுத்தும் பொதுவான நுண்ணுயிரிகளாகும்.

மடி நோயினை உண்டாக்கும் பூஞ்சைகளாவன, டிரைக்கோஸ்போரான் ஸ்பீசிஸ், அஸ்பெர்ஜில்லஸ் ஃப்யூமிகேட்டஸ், அஸ்பெர்ஜில்லஸ் மிடுலஸ் மற்றும் கேன்டிடா ஸ்பீசிஸ் போன்றவையாகும்.
பண்ணையின் சுகாதாரமற்ற நிலை, மடியில் அடி படுதல், முழுவதுமாக பால் கறக்காமை, மடிக்காம்பில் ஏற்படும் காயங்கள் போன்றவை மடி நோய் ஏற்பட உதவி புரிகின்றன.

நோய் பரவும் முறை

மடிக் காம்பின் வழியாக மடி நோயினை ஏற்படுத்தும் நுண்கிருமிகள் மடியின் உட்சென்று மடிநோயினை ஏற்படுத்துகின்றன.

மாடுகளின் மடி மற்றும் சுற்றுப்புறத்தில் சாதாரணமாக இருக்கும் ஸ்டஃபைலோகாக்கஸ் ஆரியஸ், ஸ்டஃபைலோகாக்கஸ் அகலக்சியே,ஈ.கோலை, சூடோமோனாஸ் பயோசயனியஸ் போன்ற நுண்ணுயிரிகள் அவற்றுக்கேற்ற வளரும் சூழ்நிலை இருக்கும் போது நன்றாக வளர்ந்து மாடுகளின் மடிக்குள் ஊடுருவி மடி நோயினை ஏற்படுத்துகின்றன.

மாடுகளின் உடலின் மேற்புறத்தில் இருக்கும் பல்வேறு விதமான நுண்ணுயிரிகளும், மாடுகளைப் பராமரிக்கும் பணியாட்களின் கைகள் வழியாக மாடுகளின் மடிக்காம்பில் உட்சென்று மடி நோயினை ஏற்படுத்துகின்றன

பால் கறப்பவரின் அசுத்தமடைந்த கைகள், துணிகள், மற்றும் பால் கறக்கும் இயந்திரத்தின் அசுத்தமடைந்த மடிக்காம்பில் பொருத்தும் பகுதி போன்றவற்றின் வழியாக நுண் கிருமிகள் பாதிக்கப்பட்ட மடிப் பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு சென்று மடிநோயினை பரப்புகின்றன

பூச்சிகள், மற்றும் பறக்கும் பூச்சிகள் வழியாகவும் மடி நோய் ஏற்படுத்தும் நுண்கிருமிகள் பரவுகின்றன
பாதிக்கப்பட்ட மாடுகளின் மடிக்காம்பிலிருந்து வெளியேறும் நுண்கிருமிகள் மாடுகள் படுக்கும் இடங்களை அசுத்தமடையச் செய்து பிறகு மற்ற மாடுகளுக்குப் பரவுகிறது

அறிகுறிகள்

  • மாடுகளின் மடிப்பகுதி வீங்கி,கடினமாக காணப்படுதல்
  • மடி வீங்கி, சூடாக காணப்படுதல். இது தவிர மடிப்பகுதியினைத் தொடும்போது வலி ஏற்படுதல்
    மாடுகளின் மடியைத் தொடும்போது வலி ஏற்படுவதால், அவை மடியைத் தொட விடாமல் உதைத்தல்
    மடிக்காம்புப் பகுதி சிவந்து காணப்படுதல்
  • இரத்தம் கலந்த பால்
  • பால் மஞ்சள் அல்லது பழுப்பு நிற திரவம் போன்று கட்டிகளுடன் காணப்படுதல்
    பால் உற்பத்தி குறைதல்

மேலாண்மை முறைகள்

நோய்த்தடுப்பு முறை

  • கன்று ஈன்றவுடன் மாடுகள் மென்மையான படுக்கை பொருட்கள் இட்ட கொட்டகையில் பராமரிக்கப்பட வேண்டும்.
  • அதிக பால் உற்பத்தி செய்யும் மாடுகளின் கொட்டகையில் சிமெண்ட் கான்கிரீட்டினால் ஆன தரையினை அமைக்கக்கூடாது. மாடுகளின் கொட்டகையில் வைக்கோல், மரத்தூள்கள், மணல் கொண்டு தரைப்பகுதியில் படுக்கை அமைக்கவேண்டும். மணல் மூலம் படுக்கை அமைப்பது மிகவும் நல்லது. ஏனெனில் மணலில் குறைவான அளவே நுண்ணுயிரிகள் இருக்கும்.
  • மாடுகளின் மடிக்காம்பிலிருந்து நன்றாக பாலைக் கறந்த பின்பே மடியில் மருந்துகளைச் செலுத்தவேண்டும்
  • மாடுகளின் கொட்டகை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்கவேண்டும்.
  • பால் கறப்பதற்கு முன்பாக மாடுகளின் மடிப்பகுதி மற்றும் பால் கறப்பவரின் கைகளை 4% பொட்டாசியம் பர்மாங்கனேட் கரைசல் கொண்டு கழுவ வேண்டும்.
  • பால் கறப்பவரின் கை விரல்களில் நகங்கள் இருக்கக்கூடாது.
  • ஒவ்வொரு முறை பால் கறந்த பின்பும் பால் கறவை இயந்திரம், அதன் மடிக்காம்பு பம்பு, பாத்திரங்கள் போன்றவற்றை கிருமி நாசினி கொண்டு நன்றாக சுத்தம் செய்யவேண்டும்.
  • மாடுகளில் பால் கறக்கும்போது, முதல் பாலை தரையில் பீயச்சி விடக்கூடாது. இதனை தனியாக பாத்திரத்தில் கறந்து, கிருமி நாசினிகளைக் கலந்து பிறகு கொட்டி விட வேண்டும்.
  • ஒவ்வொரு முறை பாலைக் கறந்த பின்பும் 1% ஐயோடின், அல்லது ஹைப்போகுளோரைட் கரைசல் மற்றும் குளோர்ஹெக்சிடின் கரைசல் கலந்த 0.5 -1% பாலி வினைல் பைரோலிடோன் கலந்த ஐயோடோஃபோர் கிருமி நாசினியில் காம்புகளை முக்கி எடுக்கவேண்டும்.
  • தினமும் ஒரே நேரத்தில் பால் கறப்பதைப் பின்பற்ற வேண்டும்.
  • ஒவ்வொரு முறையும் மாடுகளின் மடியிலிருந்து முழுமையாக பாலைக் கறக்கவேண்டும். மடியில் பால் தேங்கியிருக்க அனுமதிக்கக்கூடாது.
  • மாடுகளின் பால் மடி மற்றும் மடிக்காம்புகளில் காயம் ஏற்படாதவாறு மாடுகளைப் பராமரிக்கவேண்டும்.
  • பால் கறக்கும்போதும், பால் கறப்பதற்கு முன்பும், பால் கறந்த பின்பும் சுகாதாரமான முறைகளைப் பின்பற்ற வேண்டும்.
  • மேலும் பால் கறந்தவுடன் மடிக்காம்புகளை கிருமி நாசினிக் கரைசலில் முக்கி எடுக்க வேண்டும்.
    பண்ணையில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தவேண்டும். இதற்காக பூச்சிக்கொல்லிகளை பண்ணையினைச் சுற்றியிலுள்ள பகுதிகளில் தெளிக்கவேண்டும்.
  • மடி நோயால் பாதிக்கப்படாத மாடுகளில் முதலில் பால் கறந்து விட்டு, பிறகு மடி நோயினால் பாதிக்கப்பட்ட மாடுகளில் பாலைக் கறக்கவேண்டும்.
  • புதிதாக பண்ணையில் மாடுகளை வாங்கும்போது அவற்றுக்கு மடி நோய் இருக்கிறதா என கலிஃபோர்னியா மேஸ்டைடிஸ் பரிசோதனை மூலம் பரிசோதித்து, மடி நோய் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்த பின்பே மாடுகளை வாங்கவேண்டும்.

பரிந்துரைக்கப்பட்ட முதலுதவி

  • மாடுகளின் மடியில் ஐஸ் மூலம் ஒத்தடம் கொடுத்தல்.
  • பாதிக்கப்பட்ட மடிக்காம்பிலிருந்து பாலை தினமும் மூன்று முறை கறந்து பாதுகாப்பாக கொட்டி விடுதல்
  • கன்றுகளை மாடுகளின் பாதிக்கப்பட்ட மடிக்காம்பில் பால் ஊட்ட அனுமதிக்கக் கூடாது.
  • எதிர் உயிரி மருந்துகளைக் கொண்டு தகுதி வாய்ந்த கால்நடை மருத்தவரின் ஆலோசனைப்படி சிகிச்சை அளித்தல்.

நோய்த்தடுப்பு முறை

  • மடி நோயினால் மாடுகள் பாதிக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்தவுடன், தகுதி வாய்ந்த கால்நடை மருத்துவரைக் கொண்டு உரிய எதிர் உயிரி மருந்து சிகிச்சை அளிக்கவேண்டும்.
  • மடி நோயினால் பாதிக்கப்பட்ட மாடுகளை மற்ற மாடுகளிடமிருந்து தனியே பிரித்து பராமரிக்கவேண்டும்.
    கன்றுகளை மடி நோய் தாக்கியுள்ள காம்பில் பால் ஊட்ட அனுமதிக்கக்கூடாது.
  • மடி நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளில் ஒரு நாளைக்கு மூன்று முறை பால் கறந்து, கறந்த பாலை முறையாக, சுற்றுப்புறம் கெடாதவண்ணம் கொட்டி விட வேண்டும்.
  • மடி நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளின் பாலை, 5% பீனால் கலந்து கொட்ட வேண்டும்.
  • மடி நோயால் பாதிக்கப்படாத மாடுகளில் முதலில் பால் கறந்து விட்டு பிறகு மடி நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளில் பால் கறக்கவேண்டும்.
  • சிகிச்சை பலனளிக்காமல் இருக்கும் பாதிக்கப்பட்ட மாடுகளின் மடிக்காம்பினை நிரந்தரமாக மருந்துகளைப் பயன்படுத்தி வற்ற வைத்துவிட வேண்டும்.

நன்றி:தமிழ் நாடு வேளாண் பல்கலை கழகம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *