கீரை சாகுபடி

மண் மற்றும் தட்பவெப்பநிலை : நல்ல மண்ணும், மணலும் கலந்த சற்றே அமிலத்தன்மை கொண்ட இரு மண் பாட்டு நிலம் கீரை சாகுபடிக்கு உகந்தது. அதிகக் களிமண் மற்றும் முற்றிலும் மணல் கொண்ட நிலத்தை தவிர்க்கவேண்டும். உப்பு நீர் விதை முளைப்புத் திறனைப் பாதிப்பதால் முளைக்கும் வரை நல்ல நீரும் பின் செடி வளர்ந்த பின் ஓரளவு உப்பு நீரும் உபயோகிக்கலாம்.

கீரை வகைகள் அதிக சூரிய ஒளியில் அதிக விளைச்சல் தரவல்லது. 25-30 டிகிரி செல்சியஸ் என்ற வெப்பநிலையில் நன்கு வளரும். தானியக்கீரை வெப்ப மண்டலத்திலும் குளிர் மண்டலத்திலும் பயிரிட ஏற்றது.

பருவம் : ஆண்டு முழுவதும் பயிர்  செய்யலாம்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை மூன்று முறை நன்கு எக்டருக்கு 25 டன்கள் நன்கு மக்கிய தொழு எருவை கடைசி உழவின் போது இட்டு மண்ணுடன் நன்கு கலக்கவேண்டும். பின் 2 x 1.5 மீ என்ற அளவில் சமபாத்திகளும் பக்கத்தில் நீர்ப்பாசனத்திற்கு வாய்க்கால்களும் அமைக்கவேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

உரமிடுதல் : எக்டருக்கு அடியுரமாக தழைச்சத்து 75 கிலோ, மணிச்சத்து 50 கிலோ, சாம்பல் சத்து 25 கிலோ கொடுக்கக்கூடிய அராசயன உரங்களை அளிக்கவேண்டும்.

பயிர் இடவேண்டிய சத்துக்கள்(கிலோவில்) இப்கோ காம்ப்ளக்ஸ் 10:26:26, யூரியா இடவேண்டிய அளவு (கிலோவில்)
தழை மணி சாம்பல் 10:26:26 யூரியா சூப்பர் பாஸ்பேட்
கீரை வகைகள் அடியுரம் 75 50 25 97 142 157

விதையும் விதைப்பும்

விதையளவு : எக்டருக்கு 2.5 கிலோ

விதைத்தல் : விதைகள் மிகவம் சிறியவையாக இருப்பதால் சீராக விதைக்க விதையுடன் 2 கிலோ மணல் கலந்து பாத்திகளில் நேரடியாகத் தூவவேண்டும். பின் விதைகளின் மேல் மண் அல்லது மணலை மெல்லிய போர்வை போல் தூவி மூடிவிடவேண்டும்.

நீர் நிர்வாகம்

நீர்ப்பாய்ச்சுதல் : விதைத்தவுடன் பாத்திகளில் நிதானமாக நீர்ப்பாய்ச்சவேண்டும். அப்போதுதான் விதைகள் ஒரு பக்கமாக அடித்துச் செல்லாமல் இருக்கும். பின்னர் விதைத்த 3ம் நாள் உயிர்த் தண்ணீர் விடவேண்டும். அதன் பின்னர் வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சவேண்டும். விதைத்த 6-8 நாட்களில் விதைகள் முளைத்துவிடும். பிறகு 12-15 செ.மீ இடைவெளியில் செடிகளை கலைத்து விடவும்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

விதைத்த 21 நாட்களில் இருந்தே அறுவடை செய்யப்படுவதால் மருந்துகள் தெளிக்காமல் இருப்பது நல்லது. எனினும் இலை கடிக்கும் புழுக்களை கட்டுப்படுத்த கார்பரில் நனையும் தூள் 2 கிராமை ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவேண்டும்.

ஒரு எக்டருக்கு லிண்டேன் தூவும் மருந்து 1.3 சதம் மருந்தை 10 கிலோ என்ற அளவில் பாத்திகளைச் சுற்றி தூவி, எறும்புகள், கரையான்கள் மற்றும் மற்ற பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.

அறுவடை

அரைக்கீரை : விதைத்த 25 நாட்களில் தரையிலிருந்து 5 செ.மீ அளவில் கிள்ளி எடுக்கவேண்டும். பின் 7 நாட்கள் இடைவெளியில் 10 முறை அறுவடை  செய்யலாம். எக்டருக்கு மகசூல் 30 டன்கள்.

முளைக்கீரை : விதைத்த 21-25 நாட்களில் வேருடன் பறிக்கவேண்டும். சிறிய செடிகளை 10 நாட்கள் இடைவெளியில் மற்றொரு முறை அறுவடை செய்யலாம். மகசூல் எக்டருக்கு 10 டன்கள்.

தண்டுக்கீரை : விதைத்த 35-40 நாட்களில் வேருடன் அல்லது கிளைகளை மட்டும் அறுவடை செய்யலாம். மகசூல் எக்டருக்கு 16 டன்கள்.

தானியக்கீரை : விதைத்த 25 நாட்களில் பசுங்கீரை எக்டருக்கு 8 டன்கள், விதைத்த 90-100 நாட்களில் அறுவடை செய்து விதைகளைப் பிரித்தெடுக்கலாம். தானியம் எக்டருக்கு 2.4 டன்கள்.

நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *