ஏழைகளின் ஆப்பிள் என அழைக்கப்படும் கொய்யா, வெப்ப மண்டலத்தில் வளரக்கூடிய ஒரு பழப்பயிர்.
அடர் நடவு முறையில் கொய்யா பயிரிட்டு, சொட்டு நீர் பாசனத்தின் மூலம் அதிக தண்ணீர் செலவின்றி நல்ல லாபம் ஈட்டலாம் என்கிறார், மதுரை மாவட்டம் பூஞ்சுத்தி விவசாயி ஏ.சுப்பையா.
இவர் வேப்படப்பு கிராமத்தில் தனது 20 ஏக்கரில் அடர் நடவு முறையில் கொய்யா சாகுபடி செய்துள்ளார். பயிரிட்டு 16 மாதங்களான நிலையில் ஒரு அறுவடை செய்துள்ளார். ஏக்கருக்கு ஏழு டன் வரை கிடைத்ததாகவும், ஏராளமான விவசாயிகள் வயலுக்கு வந்தே கொள்முதல் செய்வதுடன், கொய்யாவை சார்ஜாவிற்கு ஏற்றுமதி செய்வதாகவும் தெரிவிக்கிறார்.
கொய்யா சாகுபடியில் சாதித்தது குறித்து சுப்பையா கூறியதாவது:
- 20 ஏக்கரில் அடர் நடவு முறையில் கொய்யா 16 மாதங்களுக்கு முன் பயிரிட்டேன்.
- ஆறு அடிக்கு ஆறு அடி அகலத்தில் ஒரு சதுர மீட்டர் அளவுள்ள குழிகளில் செடிகள் நடப்பட்டன.
- தோட்டக்கலைத்துறை மானியத்துடன் சொட்டு நீர் பாசனம் அமைத்தேன்.
- ஒரு ஏக்கருக்கு 900 வீதம் 20 ஏக்கருக்கு 12 ஆயிரம் கன்றுகளை நட்டேன்.
- ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை செலவானது. பனாரஸ், லக்னோ 49, லக்னோ 46 ரக கன்றுகள் நடப்பட்டன.
- சொட்டு நீர் பாசனம் அமைக்க தோட்டக்கலைத்துறை 56 ஆயிரம் ரூபாய் வரை 3.20 எக்டேருக்கு மானியம் வழங்கியது.
- ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கவாத்து செய்வதால் கொய்யா மரம் செழிப்பாக வளர்கிறது.
- தேன். கோமியம், பசு சாணம், ஜீவஅமிர்தம், மூலிகை பூச்சி விரட்டி ஆகிய இயற்கை உரங்களை பயன்படுத்தியதால் எதிர்பார்த்ததை விட நல்ல பலன் கிடைத்தது.
- 16 மாதங்களான நிலையில் ஒரு ஏக்கருக்கு ஏழு முதல் பத்து டன் வரை காய்கள் கிடைக்கிறது. ஒரு காய் ஒரு கிலோ வரை எடை கொண்டதாகவும் இருக்கிறது.
- கொய்யா ருசியாகவும், இனிப்பாகவும் இருப்பதால் ஏராளமானோர் தோட்டத்துக்கே வந்து வாங்கி செல்கின்றனர். ஒரு கிலோ 80 ரூபாய் வரை போகிறது. சில வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறேன்.
- கன்றுகள் நட்டதுடன் தினமும் கண்காணிக்க வேண்டும். தோட்டக்கலைத்துறையினரின் ஆலோசனையின்படி இயற்கை உரங்களை பயன்படுத்தியதால் செடி 15 அடி வரை வளர்ந்துள்ளது.
- கன்றுகள் வளர்ந்த பிறகு மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விட்டால் போதும்.
- இரண்டாண்டுகளுக்கு பிறகு செலவை எடுப்பதுடன், தொடர்ந்து லாபம் ஈட்டலாம்.
- கொய்யா பயிரிடுவதன் மூலம் குறைந்தாண்டுகளில் அதிக மகசூல் ஈட்டலாம், என்றார்.
தொடர்புக்கு: 09442204550 .
– எம்.ரமேஷ்பாபு மதுரை.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்