துவரை சாகுபடியில் நாற்று விட்டு நடும் முறை

துவரை சாகுபடியில் நாற்று விட்டு, நடும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், ஏக்கருக்கு, ஒரு லட்சம் ரூபாய் லாபம் ஈட்டலாம்.
துவரையை நேரடியாக விதையை ஊன்றுவது வழக்கம். தற்போது, நெற்பயிரைப் போல், துவரையையும் நாற்று விட்டு நடும் முறை அறிமுகமாகி உள்ளது.
கோபி வோளண் உதவி இயக்குனர் ஆசைத்தம்பி கூறியதாவது:

  • பொதுவாக, பயறு வகைகளை நாற்று நடும் பழக்கம் இல்லை. துவரை போன்ற பயறுகளை, நாற்று விட்டு, நடும் போது அதிக மகசூல் கிடைப்பதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
  • இத்திட்டத்துக்காக தமிழக அரசு, ஹெக்டேருக்கு, 7,500 ரூபாய் மானியம் வழங்குகிறது.
  • ஈரோடு மாவட்டத்தில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை ஆடிப்பட்டம், செப்டம்பர் முதல் நவம்பர் வரை புரட்டாசிப் பட்டம் என இரண்டு பட்டங்களில் துவரை சாகுபடி செய்யப்படுகிறது.
  • நாற்று விட்டு நட, 130 நாட்கள் வயதுள்ள, “ஆர்.ஜி.,7′ என்ற துவரை ரகம் புரட்டாசி பட்டத்துக்கு ஏற்றதாகும். ஏக்கருக்கு ஒரு கிலோ தேவைப்படும்.
  • மணல், மண் மற்றும் எரு ஆகியவற்றை சம அளவில் கலந்து ஐந்து அங்குலத்துக்கு மூன்று அங்குலம் அளவுள்ள பாலித்தீன் பைகளில் நிரப்ப வேண்டும்.
  • ஒரு பாலித்தீன் பைக்கு ஒரு விதை என்ற விதத்தில் விதைக்க வேண்டும்.
  • விதைத்த எட்டாவது நாள் விதை முளைத்து வரத்துவங்கும். 15வது நாள் நன்கு முளைத்துவிடும். 20வது நாள் களை எடுக்க வேண்டும்.
  • துவரை நாற்றங்காலை நிழற்பாங்கான இடத்தில் அமைத்தல் அவசியம். தினசரி பூவாளி கொண்டு நீர் தெளித்தல் வேண்டும்.
  • விதைத்த, 30வது நாள், நடவு செய்ய நாற்றுகள் தயார் நிலைக்கு வரும்.
  • துவரை நடவுக்கு மூன்று வாரங்களுக்கு முன் நன்கு மக்கிய, ஐந்து டன் எரு அல்லது, 2.5 டன் மண் புழு உரம் இட வேண்டும். வரிசைக்கு வரிசை, ஐந்து அடிக்கு, மூன்று அடிக்கு என்ற இடைவெளியில் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.
  • வாழை போன்ற பயிர்கள் சாகுபடி செய்யும்போது ஊடுபயிராகவும் செய்யலாம்.
  • காய்கள், 80 சதவீதம் முதிர்ச்சி அடைந்தவுடன், செடிகளை அறுத்து, கட்டி வைத்து, பின் வயலில் காய வைக்க வேண்டும். பிரித்தெடுக்கப்படும் விதைகளை 10 சதவீத ஈரப்பதம் வரும் வரை காய வைக்க வேண்டும்.
  • சாதாரணமாக நேரடியாக துவரை விதைப்பதால் ஏக்கருக்கு, 300 கிலோ மகசூல் கிடைக்கிறது. நாற்று விட்டு, நடவு செய்வதால் ஏக்கருக்கு, 1,000 கிலோ வரை மகசூல் கிடைக்கிறது. ஏக்கருக்கு, ஒரு லட்சம் ரூபாய் வரை லாபம் ஈட்டலாம்.

கோபி வட்டாரத்தில், 23 இடங்களில், செயல் விளக்க திடல் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *