திருந்திய நெல் சாகுபடி முறையில் கூடுதல் மகசூல்

திருந்திய நெல் சாகுபடி முறையில் சாகுபடி செய்தால் குறைந்த செலவில் அதிக மகசூல் பெறலாம் என புதுக்கோட்டை வேளாண் இணை இயக்குநர் கே.எம். ஷாஜஹான் மற்றும் குடுமியான்மலை உழவர் பயிற்சி நிலையத் துணை இயக்குநர் வ. சாந்தி ஆகியோர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

  • திருந்திய நெல் சாகுபடி முறையில் நாற்றங்கால் அமைப்பதற்கு ஒரு ஏக்கருக்கு ஒரு சென்ட் நாற்றங்கால் போதுமானது.
  • இம்முறையில் சாகுபடி செய்ய ஏக்கருக்கு 2 கிலோ விதை போதுமானது.
  • திருந்திய நெல் சாகுபடி நாற்றங்காலை வயலின் ஓரத்தில் 5 மீட்டர் அளவுள்ள 8 மேடைகளை அப்பகுதி மண்ணை எடுத்து உருவாக்க வேண்டும்.
  • இதையடுத்து அந்த மேடைகளில் மக்கிய தொழு உரம் இடவேண்டும்.
  • நாற்று மேடை ஒன்றுக்கு 95 கிராம் வீதம் 8 நாற்று மேடைகளுக்குத் 760 கிராம் டிஏபி உரத்தை பொடி செய்து மணலுடன் கலந்து நாற்று மேடைகளில் நிரப்ப வேண்டும்.
  • நிலப்பரப்புக்கு மேல் 5 செ.மீ., உயரமேடை அமைத்த பின் மேடையின் மேல் பிரித்த உரச் சாக்குகளையோ அல்லது பாலித்தீன் தாளையோ பரப்பிவிட வேண்டும். அதன் மீது 4 செ.மீ., உயரத்திற்கு மண்ணைப் பரப்பி அதனுடன் மக்கிய தொழு உரம் கலக்க வேண்டும்.
  • 1 கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் என்ற உயிரியல் பூஞ்சானக்கொல்லி கலந்து விதைநேர்த்தி செய்யவும்.
  • இவ்விதைகளைத் தண்ணீரில் ஊறவைத்துப் பின்னர் வடிகட்டி இருட்டறையில் 24 மணிநேரம் வைத்திருந்து முளைகட்ட விட வேண்டும்.
  • முளைகட்டிய விதைகளை நாற்று மேடையில் பரவலாக விதைக்க வேண்டும். பூவாளி கொண்டு நாற்று மேடைகளில் நீர் தெளிக்க வேண்டும்.
  • நாற்றின் வளர்ச்சி குறைவாக இருந்தால் 50 கிராம் யூரியாவை 10 லி., தண்ணீரில் கரைத்துப் பூவாளி கொண்டு தெளிக்கலாம்.
  • 14 நாட்கள் வயதுள்ள நாற்றுகளை மேடை மண்ணோடு பெயர்த்தெடுத்து நடவு வயலுக்குக் கொண்டு செல்வது சிறந்தது.
  • இவ்வாறு திருந்திய நெல் சாகுபடி முறையில் நாற்றங்கால் அமைத்து சாகுபடி செய்தால் கூடுதல் மகசூல் பெறலாம்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *