சத்தி காளிதிம்பம் மலைக் கிராம மக்கள் வித்தியாசமான சொட்டுநீர் பாசன முறையில் எலுமிச்சை சாகுபடி செய்து வருகின்றனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தலமலை வனச்சரகத்தில் உள்ளது காளிதிம்பம் மலைக் கிராமம். அடர்ந்த வன்ப் பகுதியில் உள்ள இக் கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.
பருவமழையை நம்பித்தான் இங்கு விவசாயம் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துவிட்டதால், பயிர்சாகுபடி செய்ய முடியாமல் இங்குள்ள விளைநிலங்கள், தரிசு நிலங்களாக மாறிவிட்டன.
வைகாசி முதல் வாரத்தில் நல்ல மழை பெய்துள்ளதால், விவசாயிகள் பீம்ஸ் சாகுபடி தொடங்கியுள்ளனர். முன்னதாக, இங்குள்ள ரங்கநாதர் மற்றும் சிவன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து விவசாயப் பணியை துவங்கினர். இந்த வழிபாடுகளால் காட்டு விலங்குகள் விவசாயப் பயிர்களை சேதப்படுத்துவது தடுக்கப்படும் என்பது ஐதீகம்.
- வறட்சியில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவதில், இவர்கள் புதிய யுக்தியை கையாண்டுள்ளனர். அரை ஏக்கர் நிலத்தில் 50-க்கும் மேற்பட்ட குழிகளை தோண்டி அதில் எலுமிச்சை நாற்றுகளை நடுகின்றனர்.
- ஒரு லிட்டர் அளவுள்ள குடிநீர் பிளாஸ்டிக் பாட்டில் ஒன்றை எடுத்துக்கொண்டு அதன் அடிபாகத்தில் சிறு துளை ஏற்படுத்துகின்றனர்.
- அதில் தண்ணீரை நிரப்பி எலுமிச்சை செடிக்கு மிக அருகில் பதிக்கின்றனர்.
- துளையில் இருந்து வெளியேறும் நீர் சொட்டு சொட்டாக செடிக்கு அடியில் சென்று ஈரப்பத்தை ஏற்படுத்தி செடி வளர உதவுகிறது.
- இவ்வாறு 50-க்கும் மேற்பட்ட பாட்டில்களை பயன்படுத்தி, எலுமிச்சை செடிகளை வளர்த்து வருகின்றனர்.
- வறட்சியில் இருந்து செடிகளை காப்பாற்ற அவர்கள் இம் முறையை பின்பற்றி வருகின்றனர்.
- காட்டுப்பன்றிகள் மற்றும் பறவைகள் இந்த செடிகளை சேதப்படுத்துவதைத் தடுக்க செடியை சுற்றிலும் மரக்குச்சிகள் நட்டு, அதை வெள்ளை சிமெண்ட் சாக்குகளை போர்த்தி பாதுகாத்து வருகின்றனர்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்