கன்னியாகுமரி மாவட்டத்தில் விளைச்சல் பாதிப்படைந்துள்ளதால் புளி விலை உயர்ந்துள்ளது. குமரி மாவட்டத்தில் பண்டை காலங்களிலே பொதுமக்கள் ஆர்வமாக புளிய மரங்களை நட்டனர்.
புளியமரங்கள் ஏப்ரல் மாத இறுதியில் பூ பூக்க துவங்கும். பின் பூக்கள் காயாகி தை மாத குளிரில் பழுக்க துவங்கும். மாசி மாதம் பழமாகும். பின் புளியை பறித்து, வெளிப்பகுதியை பொதிந்திருக்கும் தோடை உடைத்து, கொட்டை அகற்றி, காய வைத்து பக்குவப்படுத்தி தரமான புளியாக கடைகளில் விற்பனை செய்து வந்தனர்.
கால சூழ்நிலை மாற நிலங்களை ஆக்ரமித்து கொண்டிருந்த புளியமரங்கள் முறிக்கப்பட்டது. இதனால் புளியமரங்கள் குறையத்துவங்கியது.
மேலும் பழைய காலங்களில் புளியமரங்களில் ஏறுவதற்கு ஆட்கள் இருந்தனர். தற்போது புளியமரம் ஏறுவதற்கு ஆட்கள் இல்லாத சூழ்நிலை உள்ளது.
இந்தியாவிலே மிகுதியான புளிப்புத்தன்மை உடைய புளி குமரி மாவட்டத்தில் கிடைக்கும் புளியாகும்.
குமரியில் விளையும் புளி சமையலுக்கு பயன்படுத்தினால் மிகவும் சுவையாக இருக்கும்.எனவே அனைவரும் விரும்பும் புளியாக குமரிப்புளி உள்ளது.
குமரிப்புளி கடந்த ஆண்டு கிலோ ஒன்றிற்கு 75 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது குமரிப்புளி ஒரு கிலோ 150 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஆனால் கம்பம், ஆந்திராவில் உள்ள புளி ஒரு கிலோ 75 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இதுகுறித்து சக்திநகரை சேர்ந்த வியாபாரி காளிதாஸ் கூறியதாவது: குமரி மாவட்டத்தில் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் வரை அதிக வருமானம் கிடைக்கும் மரங்களாக பனைமரம், புளியமரம் இருந்தது.
புளியமரத்தில் இருந்து ஆண்டிற்கு ஒரு முறை வருவாய் கிடைக்கும். நாளடைவில் புளிய மரங்கள் வெட்டப்பட்டதால் புளி விளைச்சல் பாதித்துள்ளது. இந்த ஆண்டு குமரிப்புளி ஒரு கிலோ 150 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்