மஞ்சள் பயிரில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் கட்டுப்பாடு

மஞ்சள் பயிரை 25 வகையான பூச்சிகள் தாக்கி சேதப்படுத்துகின்றன. இதில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் கட்டுப்பாடு பற்றி பார்ப்போம்.

கிழங்கு செதில் பூச்சி:

  • இது மஞ்சளைத் தாக்கும் முக்கியமான பூச்சியாகும். மஞ்சள் பயிரை வயல்களிலும் சேமிப்பு கிடங்குகளிலும் தாக்குகிறது.
  • பயிரின் கிழங்குகளின் மேல் கூட்டம் கூட்டமாக இருந்து சாறை உறிஞ்சி செடிகள் வாடி காய்ந்துவிட ஏதுவாகிறது.
  • சேமிப்பு கிழங்குகளைத் தாக்கும்போது கிழங்கின் எடை குறைந்து முளைப்புத்திறன் பாதிக்கப்படுகிறது.

கட்டுப்படுத்தும் முறைகள்:

  • பூச்சி தாக்கிய இலைகள், தண்டுகள் முதலியவற்றை சேகரித்து அழித்துவிட வேண்டும்.
  • பூச்சி தாக்காத நல்ல விதை கிழங்குகளை தேர்வுசெய்து சேகரிக்க வேண்டும். டைகுளோர்வாஸ் 2 மிலி அல்லது மானோகுரோட்டோபாஸ் 15 மிலி/லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து அந்த கலவையில் விதைக்கிழங்குகளை நனைத்து நிழலில் உலர்த்தி பின்னர் நடவுக்கு பயன்படுத்த வேண்டும்.
  • நன்கு மக்கிய 10 டன் ஆட்டு தொழு உரத்தை இரண்டாகப் பிரித்து பாதியை உழவு செய்யும்போதும் மீதியை மண் அணைக்கும்போதும் ஒரு எக்டரில் இடவேண்டும்.
  • இதனைத் தொடர்ந்து டை மீத்தோயேட் மருந்தை 2 மிலி/லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
  • விதைக்கிழங்கை குயினால்பாஸ் 2 மிலி/லிட்டர் கரைசலில் அறுவடை செய்தவுடனும், நடுவதற்கு முன் 5 நிமிடமும் நனையவைத்தும் இப்பூச்சி தாக்குதலைக் குறைக்கலாம்.

கண்ணாடி இறக்கைப்பூச்சி:

  • தாக்கிய இலைகளில் மஞ்சள் நிற புள்ளிகள் தோன்றி இலைகள் முதலில் வெளிறிய மஞ்சள் நிறமாக மாறி காய்ந்துவிடும்.
  • மஞ்சள் கலந்த நிறத்துடன் கண்ணாடி இறக்கையுடன் உள்ள இப்பூச்சிகள் இலையின் அடிப்பகுதியில் கூட்டம் கூட்டமாக இருந்துகொண்டு சாறை உறிஞ்சி சேதப்படுத்துகிறது. இதனால் இலைகள் காய்ந்துவிடும்.
  • இப்பூச்சியைக் கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட இலைகளை பூச்சிகளுடன் சேகரித்து அழிக்க வேண்டும்.
  • டைமீத்தோயேட் அல்லது மீதைல் டெமட்டான் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மிலி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

இலைப்பேன்:

  • வெளிர் மஞ்சள் நிறத்தில் குஞ்சுகளும், பழுப்பு நிறத்தில் வளர்ந்த பூச்சிகளும் இலையின் மேல் கூட்டம் கூட்டமாக இருந்துகொண்டு சாறை உறிஞ்சும்.
  • இதனால் இலைகள் சுருண்டு வெளிறிய பச்சை நிறத்தில் காணப்படும். தாக்குதல் அதிகரிக்கும்போது இலைகள் காய்ந்துவிடும்.
  • இலைப்பேன் வெளிர்மஞ்சள் நிறத்துடன் சீப்புபோல் பிளவுபட்ட இறக்கைகளுடன் காணப்படும்.
  • தாய் பூச்சியானது இலைகளில் ஒரு வெட்டுப்பகுதியை உண்டாக்கி அதனுள் முட்டை இடும்.

கட்டுப்படுத்தும் முறைகள்:

  • பாதிக்கப்பட்ட இலைகளை சேகரித்து அழிக்க வேண்டும். டைமீத்தோயேட் 2 மிலி அல்லது பாசலோன் 2 மிலி மருந்துக்கு 1 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

தகவல்: கு.கோவிந்தன், வேளாண் பூச்சியியல் துறை, சா.ராஜதுரை மற்றும் தொண்டைமான், தோட்டக்கலைத்துறை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 003. -டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

நன்றி: தினமலர்

மஞ்சள் பற்றிய மற்ற செய்திகளை இங்கே படிக்கலாம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *