களாக்காய்- உயிர்வேலிக்கு உத்திரவாதம்

வருமானத்திற்கு ஆதாரம்


நாளை கிடைக்கப்போகும் பலாக்காயைவிட இன்று கிடைக்கும் களாக்காய் சிறந்தது என்பது, முதுமொழி. இதை உண்மை என்று நிரூபித்து வருகிறார், விழுப்புரம் மாவட்டம், ரெட்டணை கிராமத்தைச் சேர்ந்த லஷ்மி நாராயணன். நிலத்திற்கு வேலியாக இருந்து, உண்பதற்கு காய்களையும் கொடுக்கும் களாக்காயை வணிகரீதியாக வளர்த்தால், அதிக செலவில்லாமல் நல்ல வருமானம் பார்க்கலாம் என்பதற்கு தன்னுடைய தோட்டத்தை உதாரணமாக்கி வைத்திருக்கிறார் லஷ்மி நாராயணன்.

லஷ்மி நாராயணன் 10ம் வகுப்பு வரை படித்திருக்கிறார். 26 வருடமாக விவசாயம் பார்க்கிறார். இவர் குடும்பத்திற்காக 22 ஏக்கர் நிலம் இருக்கிறது. வழக்கமாக நெல், மணிலா, கரும்பு மாதிரியான பயிர்களை வைத்தார். கிடைத்த வருமானத்தில் பக்கத்திலிருந்த நிலங்களை வாங்கி சேர்த்ததில், இப்போது 27 ஏக்கர் நிலம் இருக்கிறது. 15 வருடத்திற்கு முன்பு வேலையாட்கள் பிரச்சனை, தண்ணீர் பிரச்சனை என்று வந்ததும் , பெரும்பகுதி நிலத்தில் சப்போட்டா, கொய்யா, மா இப்படி பழ மரங்களை நட்டியுள்ளார். சப்போட்டாவும், மாவும் வருடத்திற்கு ஒரு முறை மட்டும் மகசூல் கொடுப்பதால் பராமரிப்பு செய்வது சுலபமாக இருந்தது. கொய்யா மரங்களைப் பொறுத்தவரை அதிகமான பராமரிப்புத் தேவைப்பட்டாலும், நல்ல விலை கிடைப்பதால், தொடர்ச்சியாக சாகுபடி செய்வதாக கூறுகிறார்.

திருட்டைத் தடுக்க களாக்காய் செடிகள்


16 ஏக்கரில் கொய்யா, ஒரு ஏக்கரில் சப்போட்டா, 5 ஏக்கரில் மா, ஒரு ஏக்கரில் சவுக்கு, 4 ஏக்கரில் செங்கல் சூளை, எடை மேடையும் இருக்கிறது. நிலம் முழுக்க சாலை ஓரத்தில் இருப்பதால் ஆரம்பத்தில் கம்பி வேலி போட்டுள்ளார். அதற்கு செலவு அதிகமாகிறது. ஆனாலும், ஆடு, மாடுகளை மட்டும்தான் கட்டுப்படுத்த முடிந்தது. திருட்டைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நண்பர்களிடம் ஆலோசனை கேட்டு காளக்காய் வளர்க்கத் தொடங்கினார். செங்கத்திலிருந்து ஐந்து படி (சுமார் 10 கிலோ) களாக்காய் பழம் வாங்கி வந்து விதை எடுத்து, காய வைத்து முளைக்க வைத்தார். அதெல்லாம் சரியாக முளைக்கவில்லை. ஒரு முறை கோயம்பேடு மார்க்கெட்டில் ஆந்திராவிலிருந்து ஒரு வியாபாரி காளாப் பழங்களைக் கொண்டுவந்தார். அவர்தான் லஷ்மி நாரயணனுக்கு நாற்றுவிட்டு முளைக்க வைக்கும் நுட்பத்தை சொல்லிக் கொடுத்தார். அவரிடம் 25 கிலோ பழம் வாங்கி வந்து அவர் சொன்ன முறையில் நாற்று தயாரித்து, தேவையான இடங்களில் மட்டும் முக்கோண முறையில் நட்டு வைத்தார். எல்லா செடிகளும் நல்ல முறையில் வேர்விட்டு வளர்ந்தது. 12 ஏக்கர் நிலத்தில் சுமார் ஆயிரம் மீட்டர் அளவுக்கு தேவைக்கு ஏற்ற மாதிரி வேலியாக நட்டு விட்டிருக்கிறார்.

காட்டுப் பழங்களிலிருந்து செடிகள்


களாக்காய் சாகுபடி செய்யும் விதம் பற்றி தகவல்களை லஷ்மி நாராயணன் அளித்தார். குத்துச்செடி என்றழைக்கப்படும் வகையைச் சேர்ந்ததுதான் களாக்காய். இதன் குறைந்தபட்ச ஆயுள் 25 ஆண்டுகள். காட்டில் கிடைக்கும் பழங்கள் அல்லது சந்தையில் கிடைக்கும் பழங்களின் விதைகளை பயன்படுத்தலாம். சந்தைகளில் விற்பனை செய்யப்படும் களாக்காய் பழங்களை வாங்கி, இரண்டு நாட்கள் வைத்திருந்தால், லேசாக அழுகிய நிலைக்கு மாறிவிடும். பிறகு, வாய் அகலமான பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி, அதில் பழங்களைப் பிசைந்து விட்டால் விதைகள் அடியில் தங்கிவிடும். அவற்றைச் சேகரித்து, சாம்பல் தூளில் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

18 அடி நீளம், 8 அடி அகலம் என்ற அளவு நிலததில் மண்வெட்டியால் கொத்திக் களைகளை நீக்கி மண்ணைப் பொலபொலப்பாக மாற்றிக்கொள்ள வேண்டும். இதன் மீது 50 கிலோ எருவைத் தூவிவிட்டு, ஓர் அங்குல இடைவெளியில், ஒவ்வொரு விதையையும் தனித்தனியாக விதைக்க வேண்டும். விதைத்த நாளிலிருந்து ஒரு மாதம் வரை, இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் தெளித்துவிட வேண்டும். அதற்கு மேல், செடி வாடினால் மட்டும் தண்ணீர் கொடுத்தால் போதுமானது. நாற்றுகளில் பூச்சித்தாக்குதல் தென்பட்டால், ஒரு லிட்டர் தண்ணீருக்கு, 50 மில்லி வேப்பெண்ணெய் கலந்து தெளிக்கலாம். நான்கு முதல் ஐந்து மாதங்களில் நாற்று, ஒன்றரை அடி உயரத்துக்கு வளர்ந்து நடவுக்குத் தயாராகிவிடும்.

100 மீட்டருக்கு 2 ஆயிரம் செடிகள்


மழைக்காலமான அக்டோபர் – நவம்பர் மாதங்களில், நடவு செய்யலாம். ஓர் அடி இடைவெளியில் முக்கோண முறையில் கடப்பாரையால் குழி இட்டு, செடியை நட்டுவிட்டால் போதுமானது. 100 மீட்டர் நீளத்திற்கு நடவு செய்வதற்கு, இரண்டு கிலோ பழத்தில் உற்பத்தி செய்த 2 ஆயிரம் செடிகள் போதுமானவை. நடவு செய்த 6 மாதங்கள் வரையில், மண்ணின் ஈரத்தைப் பொறுத்து, 5 முதல் 7 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதற்குமேல் தனியாக தண்ணீர் கொடுக்கத் தேவையில்லை. மற்ற செடிகளுகளுக்குப் பாயும்போது, கிடைக்கும் தண்ணீரை களாக்காய்ச் செடிகள் எடுத்துக்கொள்ளும். நடவு செய்த ஆறுமாதங்களுக்கு, இவற்றை வெள்ளாடுகள் கடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 6-ம் மாதத்தில் செடி இரண்டரை அடிக்கு மேல் வளர்ந்துவிடுவதால், பராமரிப்புத் தேவையிருக்காது. பூச்சி, நோய் தாக்குதல் இருக்காது. தனியாக இதற்கு எந்த ஒரு இடுபொருளும் கொடுக்கத் தேவையில்லை.

ஒரு வருடத்தில் வேலி


நட்ட ஒரு வருடத்தில் வேலியாக மாறிவிடுகிறது. ஆடு, மாடுகள், மனிதர்கள் யாரும் உள்ளே நுழைய முடியாது. நமக்கு தேவையான உயரத்தில் வளரவிட்டு கவாத்து செய்துகொள்ளலாம். கவாத்து செய்யாவிட்டாலும் பிரச்சனை இல்லை. மூன்று வருடத்தில் காய் காய்க்க ஆரம்பித்துவிடும். ஒவ்வொரு வருடமும் மே மாதம் பூவெடுத்து, ஆகஸ்ட் மாதத்திலிருந்து அக்டோபர் மாதம் வரை, காய் அறுவடை செய்யலாம். 1000 மீட்டர் நீளத்துக்கு வைத்திருக்கும் செடிகளிலிருந்து 1000 கிலோ காய் கிடைக்கும். வேலியோரமாக இருப்பதால், சாலையில் போகிறவர்கள் பறித்துவிடுகிறார்கள். எல்லாம் போக, வருடத்திற்கு 200 கிலோ காய் கிடைக்கிறது. போன வருடம் 100 கிலோ காயை, கிலோ ஐம்பது ரூபாய் என்று விற்பனை செய்திருக்கிறார். இந்த வருடம் பழுக்கவிட்டு நாற்று விட்டு, மீதி இடங்களில் நடலாம் என்றிருப்பதாகவும், இதில் மகசூல் கிடைப்பதுடன், கம்பி வேலிக்கு பதிலாக அதிக செலவில்லாத மாற்றமாகவும் இருக்கிறது என்கிறார் லஷ்மி நாராயணன்.

தொடர்புக்குலஷ்மி நாராயணன், செல்போன் – 09488863995
ஆதாரம் : பசுமை விகடன் வெளியீடு 25.10.14 www.vikatan.com

நன்றி: தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *