மாடித்தோட்ட அமைப்பில் பின் பகுதியில் சுவர்களில் துணிகளை காயவைப்பதற்காகவும் அல்லது விசேஷ காலங்களில் பந்தல் அமைப்பதற்கான இரும்பு வளையங்கள் அமைத்திருப்பார்கள். அவைகளில் உயரமான நான்கு மரத்திலான கம்புகள் அல்லது இரும்பாலான கம்பி குழாய்களை அமைத்து அதில் கம்பிகளைக் கொண்டு பின்னல்களை அமைத்து அதன்மீது படரும். காய்கறிகளான பாகல், கோவைக்காய், பீர்க்கன் போன்றவற்றை மரப்பெட்டிகளையோ அல்லது மண் தொட்டிகளையோ வைத்து அதில் செம்மண், மணல், மக்கிய உரம் ஆகியவற்றை சரிசமமாகக் கலந்து பெட்டிகளின் மேல் விளிம்பிலிருந்து கீழே மூன்று அங்குலம் இடைவெளி இருக்குமாறு நிரப்பி வளர்க்கலாம்.
மாடித்தோட்டத்தில் முக்கிய பிரச்னை மண் இறுகி போவது நாம் என்ன தான் மணலையும், செம்மண்ணையும் கலந்து, தேவையான அளவு உரம், இலை மக்கு போன்றவற்றை போட்டு கலந்து எடுத்தாலும் நீர் ஊற்ற ஊற்ற மெதுவாக மண் இறுகி போகும் தன்மையை பெற்று விடும். இதில் ரோஜா போன்ற ஒட்டுச்செடிகள் தாக்குப்பிடித்து வளர்ந்து விடும். ஆனால் கீரை, காய்கறி செடிகள் வளர மிகவும் சிரமப்படுகின்றன. அதே நேரத்தில் காற்றின் வேகமும் மேலே அதிகமாக இருப்பதால் இலைகள் வேகமாக வறட்சிக்கு உட்படுகின்றன.
எனவே இதனைத் தவிர்க்க மாடித்தோட்டத்தில் மிக முக்கியமாய் மணலை விட்டு விட்டு, அதற்கு பதிலாக தேங்காய் நார் தூளை அல்லது கோகோ பித் அல்லது தேங்காய் நாரிலிருந்து உதிரும் பவுடர் போன்ற பொருட்களைப் பயன்படுத்தலாம்.இந்த பவுடர் வெறும் ஊடகமாக மட்டுமே பயன்படும்.அதில் செடிக்கு தேவையான எந்த கனிமங்களோ சத்துக்களோ கிடைக்காது.

இருப்பினும் நீரை நன்றாக வெகு நாட்களுக்கு பிடித்து வைத்துக் கொள்ளும் இந்த பவுடருடன் ஏதாவது மக்கிய தாவர கழிவு உரம் மற்றும் கொஞ்சம் செம்மண் கலந்து தென்னை நார்க்கழிவு, செம்மண், மண்புழு உரம் 2:2:1 என்ற விகிதத்தில் கலவையைத் தயார் செய்து பயன்படுத்தலாம்.
மொட்டை மாடியில் பரப்பிற்கேற்றவாறு பல பகுதிகளைப் பிரித்து தொட்டிகளையும் பெட்டிகளையும் சீராக வரிசையாக வைத்து பயிர் வளர்க்கலாம். தேவையான இடைவெளி கொடுத்து, எல்லா செடிகளுக்கும் சூரிய வெளிச்சம் கிடைக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்