வெங்காயதை தாக்கும் நோய்கள்

உழவர்களால் சாம்பல்பூச்சி என்று அழைக்கப்படும் இலைப்பேன்கள் வெங்காய இலைகளின் சாற்றை உறிஞ்சி சேதத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் இலைகள் வெளுத்துக் காணப்படும். ஒளிச்சேர்க்கை குறைவதால் பயிர் வளர்ச்சி குன்றி காணப்படும்.

தீவிரமாகத் தாக்கப்பட்ட பயிர் காய்ந்து, கருகியதுபோல காணப்படும். இதன் தாக்குதல் பொதுவாக குளிர்காலப்பயிரில் அதிக அளவில் காணப்பட்டாலும் தொடர்ந்து வெங்காயம் பயிரிடப்படும் இடங்களில் இதன் தாக்குதல் வருடம் முழுவதும் காணப்படும். பூசண, நச்சுயிர் நோய்களின் தாக்குதலை அதிகப்படுத்தும்.
இதனைக்கட்டுப்படுத்தும் வழிகள்

  • தொடர்ந்து வெங்காய சாகுபடியினை தவிர்த்து, முறையான பயிர் சுழற்சி செய்ய வேண்டும்.
  • நீர் நிர்வாகம், உர நிர்வாகம் சரியாகக் கடைபிடிக்க வேண்டும்.
  • வேம்புசார் பூச்சிக்கொல்லி (அசடிராக்டின்) ஒரு சதம் ஏக்கருக்கு 400 மில்லி தெளித்து பேன்களைக் கட்டுப்படுத்தலாம்.
  • பூச்சிக்கொல்லிகளை புரபனபாஸ் (2 மில்லி/லிட்டர்) அல்லது எண்டோசல்பான் (2மில்லி/லிட்டர்) அல்லது டைமெத்தோயேட் (2 மில்லி/லிட்டர்) தெளித்து பேன்களைக் கட்டுப்படுத்தலாம்.
  • கைத்தெளிப்பான் கொண்டு ஒட்டும் திரவம் கலந்து தெளிப்பதன் மூலம் பேன்களை நன்கு கட்டுப்படுத்தலாம்.

ஊதா நிற இலைக்கருகல் நோய்:

  • நோய் தாக்கிய செடியின் இலை நுனிப்பகுதி வெளிர்பச்சையம் இழந்து, நீள்வட்ட வடிவிலான ஊதா நிறப்புள்ளிகள் தென்படும்.
  • இப்பகுதிகளில் கருமை நிறப்புள்ளிகள் வளையங்களாகத் தோன்றும். இப்புள்ளிகளே பூசண வித்துக்கள் உற்பத்தியாகும் இடமாகும்.
  • இப்புள்ளிகள் இலைகளின் கீழ்ப்பகுதிகளுக்கும் பரவி செடி முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி இலைகள் காய்ந்து, செடிகள் கருகி சருகு போலாகிவிடும்.
  • இந்நோயினைக் கட்டுப்படுத்த நோய் பாதிக்கப்படாத வயல்களிலிருந்து விதைவெங்காயம் தேர்வு செய்ய வேண்டும்.
  • விதை வெங்காயத்தினை பூசணக் கொல்லியான திரம் மருந்தினை ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவில் கலந்து விதைப்பு செய்ய வேண்டும்.
  • வயலில் போதுமான அளவு வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும்.
  • நோய் தாக்கப்பட்டு காய்ந்த இலைகளை கிள்ளியெறிந்து பின் கீழ்க்காணும் பூசணக்கொல்லி மரநந்துகளில் ஏதேனும் ஒன்றை தெளிக்க வேண்டும்.
  • மான்கோசெப் 2 கிராம்/லிட்டர் தண்ணீர், சினப் 2 கிராம்/லிட்டர், குளோரோதலோனில் 2 கிராம்/லிட்டர், டைபோல்ட்டான் 2 கிராம்/லிட்டர், காப்பர் ஆக்ஸி குளோரைடு 2.5 கிராம்/லிட்டர்.
    மேலே கூறப்பட்டுள்ள மருந்துகளைத் தெளிக்கும்போது இம்மருந்துகள் இலைகளின் மேல் நன்கு ஒட்டுவதற்காக ஒட்டு திரவம் (அல்லது) சோப்பு கரைசலைஒரு லிட்டருக்கு 1 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
  • நோயின் தாக்குதலைப் பொறுத்து பூசணக்கொல்லி மருந்தினை 10 நாட்கள் இடைவெளியில் 2 அல்லது 3 முறை தெளித்து இந்நோயினைக் கட்டுப்படுத்தலாம்.

(தகவல்: கோ.கஜேந்திரன், த.தினகரன், கு.கதிரேசன், அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நவலூர் குட்டப்பட்டு, திருச்சி-9)

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *