குறைந்த நீரில், மண் தேவை இல்லாமல் விவசாயம்!

தருமபுரி அருகே ஆஸ்திரேலிய தொழில்நுட்பத்தை கொண்டு தேங்காய் நாரில் தக்காளி செடிவைத்து அதிக மகசூல் எடுத்து வரும் பட்டதாரி இளைஞர்கள்.

தருமபுரி மாவட்டம் பாலக்கொடு அருகே உள்ள பொடுத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்த பட்டதாரி  ராஜதுரை. இவர் ஆஸ்திரேலியாவில் பண்ணை ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் ஆஸ்திரேலியாவில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நமது கிராமத்தில் விவசாயத்தை தொடங்கலாம் என நினைத்து தனது தம்பிகளான சோலைராஜன், புவனேஸ்வரன், சூர்யாபிரகாஷ் ஆகிய இளைஞர்கள ஒருங்கிணைத்து நச்சுத்தன்மை இல்லாமால், இயற்கை முறையிலும், அதிக மகசூல் பெறும் வழியினை மேற்கொள்ள திட்டமிட்டனர்.

தண்ணீர் இல்லாமலும் வேறு சில காரணங்களாலும் அழிந்து வரும் தருவாயிலுள்ள விவசாயத்திற்கு உயிர் கொடுக்கும் முயற்சியில் இறங்கினர் இந்தப் பட்டதாரி இளைஞர்கள்.


பெங்களுர் இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்திலிருந்து காய்கறி விதைகளை வாங்கி வந்து, ஆஸ்திரேலியாவிலுள்ள தொழில்நுட்பத்தை கொண்டு, பசுமைக் குடில் அமைத்து தேங்காய் நாரை உலர வைத்து, பையிக்குள் வைத்து தக்காளி விதையினை நட்டு சொட்டுநீர் விட்டு வளர்க்க ஆரம்பித்தனர்.

தேங்காய் நாரில் வைப்பதால், தண்ணீர் செலவு குறைவு, பாய்ச்சுகின்ற தண்ணீர் முழுவதும் செடியே உறிஞ்சும். ஆகவே அதிக நீர் செலவாகாது. சுமார் ஒரு அடிக்கு இடைவெளி விட்டு செடியை வைத்து, 8 முதல் 10 மாதம் வரை பராமரித்தால் போதும்.

பூமியில் நட்டச் செடிகளை விட ஒரு செடி சுமார் இருபது அணி உயரம் வரை வளர்ந்து செழிக்கிறதை கண்களால் காணலாம். மேலும் இது முழு  இயற்கை முறையிலானது. இவர்கள் நச்சுத் தன்மை வாய்ந்த வேதிப்பொருட்களை பயன்பாடுகள் கிடையாது.

செடிகளை பூச்சித் தாக்குதலிலிருந்து காக்கவே பூச்சுக்கொல்லி மருந்துகள் தொளிக்கப்படுகிறது. இது தக்காளிக்கு எந்தப் பாதிப்பும் கிடையாது. இந்தத் தொழில் நுட்பத்தில் மண்ணில் நட்டச் செடிகளிலிருந்து மகசூல் கிடைப்பது போல இரண்டு அல்லது மூன்று காய்கள் வருவதில்லை. ஒரு கொத்தில் சுமார் 10 முதல் 15 தக்காளிக்கு வருகின்றன. ஒரு தக்காளியின் எடை 110 முதல் 130 கிராம் வரை உள்ளது. இதனால், ஒரு செடியில் 15 முதல் 20 கிலோ வரை மகசூல் கிடைக்கிறது. மேலும் மண்ணில் வளரும் செடிகளை போல இல்லாமல், சுமார் 8 மாதங்கள் வரை தக்காளி செடிகள் காயமல் வளர்ந்து மகசூல் கொடுக்கின்றன. இந்தச் செடியிலுள்ள தக்காளி நன்கு சிவந்த நிலையில் பழுத்தாலும், சுமார் 15 நாட்களுக்கு அழுகாமல் உள்ளது.

மேலும் செடியிலிருந்து அறுவடை செய்த பிறகும் கூட குளிர்சாதன பெட்டியில் வைக்காமலே திறந்த வெளியில் வைத்தாலும் அதன் தன்மை கெடாமலும் 15 நாட்களுக்கு அப்படியே இருக்கிறது.

இப்படி ஆஸ்திரேலிய தொழில் நுட்பத்தின் மூலம் தக்காளி சாகுபடியில் அதிக மகசூல் எடுத்த இந்த இளைஞர்கள், தற்போது வெண்டை, பச்சை மிளகாய் பீர்க்கங்காய், அவரை உள்ளிட்ட காய்கறிகளையும் சாகுபடி செய்ய தொடங்கியுள்ளனர்.

இந்த விவசாயம் செய்ய நிலம் தேவையில்லை என்பதால், மாடி தோட்டங்கள் அமைப்பது குறித்து இவர்கள் வழிகாட்டி வருகின்றனர். இதற்காகவே  இரண்டு இளைஞர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆகவே சில பட்டதாரி இளைஞர்கள் இந்த விவசாயத்திற்கு மெல்ல திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த முறை விவசாயத்தில் அதிக மகசூலும், லாபமும் கிடைப்பதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வாய்ப்பு உள்ளதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.

வறட்சி மிகுந்த தருமபுரி மாவட்டத்திற்கு உகந்த தொழில்நுட்பம் இது என்பதால் அரசுத் தோட்டக்கலை துறையினர், இதனை அனைத்து விவசாயிகளுக்கும் எடுத்துரைத்து விரிவுப்படுத்த வேண்டும் என இந்தப் பட்டாதாரி இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி: புதிய தலைமுறை

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *