செளசெள சாகுபடி

இரகங்கள் : பச்சைக் காய் வகை மற்றும் வெள்ளைக் காய் வகை.

மண் மற்றும் தட்பவெப்பநிலை: செளசெள அதிக வெப்பநிலை நிலவக்கூடிய கடலோரப்பகுதியிலும், குளிர்ச்சியான மலைப்பகுதியிலும் பயிரிடலாம். கடல் மட்டத்திலிருந்து 1200 முதல் 1500 மீட்டர் உயரம் வரை நன்கு வளரக்கூடியது. நல்ல வடிகால் வசதியுடைய, ஈரத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் குணம் நிறைந்த மண் ஏற்றது, மண்ணின் கார அமிலத் தன்மை 5.5 முதல் 6.5 வரை  வெப்பநிலை 180 செல்சியஸ் – 240 செல்சியஸ் வரை இருந்தால் பயிரின் வளர்ச்சிக்கு ஏற்றதாக இருக்கும்.

பயிர்ப்பெருக்கம் : செளசெள முளைவிட்ட காய்கள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றது. காய்கள் கொடியில் இருக்கும் பொழுதே அதனுள் இருக்கும் விதை முளைத்துவிடுகிறது. குருத்து 13 செ.மீ முதல் 15 செ.மீ வரை வளர்ந்தவுடன் நடவு  செய்ய உபயோகப்படுத்தலாம். இதைத் தவிர தண்டின் வெட்டுத் துண்டுகளையும் நடவிற்குப் பயன்படுத்தலாம்.

நிலம் தயாரித்தல்:நிலத்தை 2-3 முறை உழுது பண்படுத்த வேண்டும். பின்பு 45 செ.மீ நீளம், அகலம், ஆழம் உள்ள குழிகளை 2.5 x 1.8 மீட்டர் என்ற இடைவெளியில் எடுக்கவேண்டும். குழி ஒன்றுக்கு 10 கிலோ நன்கு மக்கிய தொழு உரம், 250 கிராம் யூரியா, 500 கிராம் சூப்பர் பாஸ்பேட் உரங்களை மேல் மண்ணுடன் நன்கு கலந்து குழிகளை மூடவேண்டும்.

பருவம் : மலைப்பிரதேச பகுதிகளுக்கு ஏப்ரல் – மே சமவெளிப்பகுதிகளுக்கு ஜீலை – ஆகஸ்ட்.

நடவு : நன்கு முற்ற முளையிட்ட காய்களை குழிக்கு 2 முதல் 3 நடவு செய்து நீர் ஊற்றவேண்டும்.

பின்செய் நேர்த்தி: முளைத்து வெளிவரும் கொடிகளைக் கயிறுடன் இணைத்துக் கட்டி கயிற்றை 6 அடி உயரத்தில் எழுப்பப்பட்டுள்ள பந்தலில் கட்டி கொடிகளைப் பந்தலில் விட்டு படரச்செய்யவேண்டும். குழிகளின் இடைப்பகுதிகளில் களைக்கொத்து கொண்டு களைகளை அகற்றவேண்டும். விதைத் 3 முதல் 4 மாதங்கள் கழித்து கொடிகள் பூக்க ஆரம்பிக்கும். அப்பொழுது குழி ஒன்றுக்கு 250 கிராம் யூரியா இட்டு நீர்  பாய்ச்ச வேண்டும்.

கவாத்து செய்தல் : அறுவடை முடிந்தவுடன் தரையில் இருந்து 60 நெ.மீ உயரத்தில் கொடியினை அறுத்துவிடவேண்டும். அப்போது பக்கக் கிளைகள் குழிகளில் உருவாகி பந்தலில் படரத்  தொடங்கும். இவ்வாறு ஒவ்வொரு முறையும் அறுவடை முடிந்தபின் இந்தச் சுழற்சியினை மேற்க்கொண்டால் 4 முதல் 5 ஆண்டுகள் வரை கொடியினை நன்றாக காய்க்கும் திறனில் வைத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு முறை அறுவடை முடிந்து கொடியினை அறுத்துவிடும் போது சிபாரிசு செய்யப்பட்ட தழை,மணி மற்றும் சாம்பல் சத்துக்களை இடவேண்டும். ஜனவரி மாதம் கவாத்து செய்தால் கொடி மீண்டும் ஜீலை மாதத்தில் அறுவடைக்கு தயாராகி டிசம்பர் மாதம் வரையிலும் காய்கள் கிடைக்கும்.

நீர் நிர்வாகம்

மழைப் பகுதிகளுக்கு நீர்ப்பாசனம் தேவையில்லை மற்ற பகுதிகளுக்கு இரண்டு வாரத்திற்கு ஒரு முறை நீர்ப்பாய்ச்சவேண்டும்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுபாப்பு

மாவுப்பூச்சி, அசுவினிப்பூச்சி : இவைகள் இலைகள் மற்றும் பிஞ்சுகளில் சாற்றை உறிஞ்சி சேதப்படுத்துகின்றன. இவைகளை கட்டுப்படுத்த டைமெத்தோயேட் 1 மில்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.

பழ ஈக்கள் : ஈக்களின் தாக்குதலை கட்டுப்படுத்த, பாதிக்கப்பட்ட காய்களை சேகரித்து அழிக்கவேண்டும். மாலத்தியான் மருந்தை 1 லிட்டர் நீரில் 2 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்கவேண்டும். வேர் முடிச்சு நூற்புழுக்களின் தாக்குதல் அதிகமாக உள்ள பகுதிகளில் பியூராடன் குருணை மருந்தை குழிகளைச் சுற்றி இடுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

அறுவடை

விதைத்த 5-6 மாதங்களில் அறவடைக்கு தயாராகிவிடும், காய்களை சாதாரண
வெப்பநிலையில் 2 முதல் 4  வாரங்கள் வரையில் கெட்டுப் போகாமல் சேமித்து வைக்கலாம்.

மகசூல் : எக்டருக்கு 25-35 டன்கள், நன்கு வளர்ந்த ஒரு கொடியிலிருந்து ஒரு  வருடத்திற்கு சுமார் 25 முதல் 30 கிலோ காய்கள் கிடைக்கும்.

நன்றி: க்ரிஷி ஜக்ரான்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “செளசெள சாகுபடி

Leave a Reply to Chandra Cancel reply

Your email address will not be published. Required fields are marked *