கால்நடை வளர்ப்பு: பால் உற்பத்தியில் வெளிச்சத்தின் பங்கு


பால் உற்பத்தியில் மாடு தண்ணீர் அருந்துவது எவ்வளவு முக்கியமானதோ, அந்த அளவு மாட்டுக்கு அளிக்கப்படும் வெளிச்சமும் முக்கியமானது. ஆனால், வெளிச்சத்தின் தேவை குறித்து பண்ணையாளர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

பண்ணையில் வெளிச்ச மேலாண்மை குறித்து ஆய்வு மேற்கொண்டு இந்த உண்மை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இயற்கை ஒளி மட்டும் அளிக்கப்பட்ட மாடுகள் குறைவாகப் பால் கறக்கின்றன. அதேவேளை மின்விளக்குகள் மூலம் தேவையான வெளிச்சம் கிடைத்த மாடுகள், அவற்றைவிட அதிக அளவில் பால் தருவது நிரூபிக்கப்பட்டுள்ளது.

பால் உற்பத்தி எவ்வாறு பாதிக்கப்படுகிறது?

மாட்டின் கண் உயரத்தில் ஏறக்குறைய 150 Lux வெளிச்சம் நிச்சயம் கொடுக்கப்பட வேண்டும்.

வெளிச்சம் குறைவதன் காரணமாக மாடுகளில் கீழ்க்காணும் மாற்றங்களைக் காண முடியும்.

  • பெரும்பாலான நேரம் தூங்குவது போலிருக்கும்அதிக சுறுசுறுப்பு இல்லாமல் இருக்கும்
  • தீவனம் உட்கொள்ளும் அளவு குறைவாக இருக்கும்
  • பால் உற்பத்தியும் குறைவாக இருக்கும்.

போதுமான வெளிச்சம் கொடுக்கப்பட்டால் தூக்கத்துக்குக் காரணமான ‘ஹார்மோன்’ (இயக்கு நீர்) உற்பத்தி குறைகிறது என்பதால்

  • மாடு அதிக விழிப்புடன் காணப்படுகிறது
  • செயல்பாடுகள் அதிகரிக்கிறது
  • தீவனம் உட்கொள்ளும் திறன் அதிகரிக்கிறது
  • பால் உற்பத்தி அதிகரிக்கிறது

இளங்கறவைக் காலம் (0-3 மாதம்)

இந்த உற்பத்திக் காலத்தில்தான் அதிக அளவில் பால் உற்பத்திசெய்யும் வாய்ப்பு இருப்பதாலும், முதல் 6-10 வாரங்களில் பால் உற்பத்தி உச்சபட்ச நிலையை அடைவதாலும் 16 மணி நேரம் வெளிச்சம் இன்றியமையாத ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

நடுக்கறவைக் காலம் (4-7 மாதம்)

இந்த உற்பத்திக் கால நிலையில்தான் பால் உற்பத்தி நிலையான அளவை அடைந்து, அதன் பிற்பகுதியில் குறையத் தொடங்குகிறது. ஆகவே, 14 மணி நேர வெளிச்சம் இன்றியமையாதது. இந்தக் காலத்தின் பிற்பகுதியில் 12 மணி நேர வெளிச்சம் கொடுக்கும்போது அதிக உற்பத்தியைப் பெறலாம்.

வற்றுக் கறவை காலம் (7-10 மாதம்)

இந்தக் கறவைக் காலத்தில் பால் உற்பத்தி ஏற்கெனவே குறையத் தொடங்கி இருக்கும். ஏறக்குறைய கன்று ஈன்று 300-305 நாட்களில் பால் நிறுத்தம்செய்ய வேண்டும். அதாவது பால் நிறுத்தம் செய்யும் காலகட்டத்தில் மாடு ஏறக்குறைய 7 மாத நிறை சினைப்பருவத்தில் இருக்கும். இந்தப் பருவ நிலையில் அதிக வெளிச்சம் தேவையில்லை. மாறாக, 16 மணி நேரம் இருட்டை ஏற்படுத்தும்போது, அடுத்த கறவைக் காலத்தில் அதிகப் பால் உற்பத்தியை பெறலாம்.

நிறை மாதச் சினைக் காலம் (10-12 மாதம்)

பால் நிறுத்தம் செய்த நாளில் இருந்து கன்று ஈனும் நாள்வரை உள்ள காலம் இது. இந்தக் காலகட்டத்தில் குறைந்த வெளிச்சம் கொடுத்தால் போதும். மேலும் அதிக நேரம் இருளாக (16 மணி) இருக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் அதிகப் பால் உற்பத்தியை, அடுத்த கறவைக் காலத்தில் பெறலாம்.

நாம் கொடுக்கும் தீவனம் மட்டுமே பால் உற்பத்திக்கு முழுக் காரணம் இல்லை. மாறாக, வெளிச்சமும் இதில் முக்கியப் பங்காற்றுகிறது. அதனால், மற்ற பராமரிப்புடன் போதுமான அளவு வெளிச்சத்தையும் கொடுக்க வேண்டியது அவசியம். இதன் மூலம் அதிகப் பால் உற்பத்தியை பெற முடியும்.

கட்டுரையாளர், கால்நடை மருத்துவர், சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத் தொழில்நுட்ப வல்லுநர்

தொடர்புக்கு: 9976645554

நன்றி: ஹிந்து

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “கால்நடை வளர்ப்பு: பால் உற்பத்தியில் வெளிச்சத்தின் பங்கு


Leave a Reply to வெற்றிச்செல்வன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *