தண்ணீர் குடிக்காத பாரம்பரிய நெல் கூம்பாளை

மணல், மணல் சார்ந்த பகுதிகளில் மழையை நம்பிச் சாகுபடி செய்யக்கூடிய பாரம்பரிய நெல் ரகங்களில் முதன்மையானது கூம்பாளை. இந்த ரகத்துக்கு ரசாயன உரங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும், தொழு உரத்தைக்கூட அளவோடு பயன்படுத்த வேண்டும்.

வறட்சியைத் தாங்கும்

தென்னம்பாளை பூத்து வெளியில் வரும்போது பார்ப்பதற்கு எப்படி அழகாக இருக்குமோ, அதைப் போல் அறுவடைக்குத் தயாராக இருக்கும் இந்த நெல்லின் கதிர்கள் விரிந்து பார்ப்பதற்கே அழகாக இருக்கும். அதனால் இந்த ரகத்துக்குக் கூம்பாளை எனப் பெயர் வந்திருக்கலாம். சிவப்பு நெல், சிவப்பு அரிசி, நேரடி விதைப்புக்கு ஏற்ற ரகம். நூற்று இருபது நாளில் அறுவடைக்குத் தயாராகும் இந்த ரகம், ஐந்தடிவரை வளரும் தன்மை கொண்டது.

மண்ணில் உரச் சத்து அதிகமானால் பயிர் இயற்கைச் சீற்றங்களைத் தாங்காது. இந்த ரகம் மழை ஈரத்தில் முளைத்து வளரும். ஒரு மாதத்துக்கு மேல் வறட்சியைத் தாங்கும் சக்தி கொண்டது. பசுமைப் புரட்சி நெல் வகைகளைப் போல, பயிர் சாகுபடி செய்த காலத்தில் தண்ணீரைத் தொடர்ந்து நிறுத்தி வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஈரப்பதம் காய்ச்சலும் பாய்ச்சலுமாக இருந்தாலே போதுமானது. ஏக்கருக்கு இருபது மூட்டைவரை மகசூல் கிடைக்கும்.

மருத்துவக் குணம்

பாரம்பரிய நெல் ரகங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பு மருத்துவக் குணம் இருந்தாலும், கூம்பாளைக்கு மகத்தான மருத்துவக் குணம் உண்டு. நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டது. இந்த நெல்லை ஊறவைத்து ஆட்டுக்கல்லில் அரைத்து, பருத்தித் துணியில் போட்டுப் பால் பிழிந்து, அதில் சிறிது தேன் அல்லது நாட்டுச் சர்க்கரை கலந்து தினசரிக் காலை உணவாக உண்டுவந்தால் அசதியைப் போக்கி, உடல் வலிமை பெறும். கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்த அரிசியில் சோறு சமைத்துக் கொடுத்தால், பிரசவக் காலத்தில் வலி அதிகம் இருக்காது.

நெல் ஜெயராமன் தொடர்புக்கு: 094433 20954


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *