தோட்டம் வளர்ப்பு பயனுள்ள பொழுதுபோக்கு!

தர்மபுரி வட்டார வேளாண் உதவி இயக்குனர் மதுபாலன் மற்றும் கோவை மாடித் தோட்ட வல்லுனர், ‘தோட்டம்’ சிவா கூறுகிறார்:

  • காய்கறி தோட்டம் அமைப்போர், முதலில் கவனிக்க வேண்டியது, இடவசதி. மொட்டை மாடியில் அதிகளவு வெயில் அடிக்கிற மாதிரி இருந்தால், ‘ஷேடு நெட்’ எனப்படுகிற வலையைக் கொண்டு தோட்டம் அமைக்கலாம்.
  • மாடியில் தோட்டம் அமைக்கும்போது, தரையில், ‘ஒயிட் வாட்டர் புரூப் பெயின்ட்’ அடிப்பது நல்லது.
  • முடிந்தளவு புதிய பொருட்களை வாங்காமல், வீட்டிலிருக்கும் மண் தொட்டி, பானை, வாட்டர் பாட்டில், பால் போடும் கிரேடுகள், பழைய வாளி, கெட்டியான பாலிதீன் பைகள், அரிசி சாக்கு ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • அதில், நீர் செல்ல சிறு துவாரம் இட வேண்டும். வீட்டுத் தோட்டம் அமைக்கத் தேவையான இடுபொருட்கள், விதைகள் அனைத்தும் இப்போது, எல்லா வேளாண், உரக் கடைகளிலும் கிடைக்கின்றன.ஆன் – லைன் மூலமாகவும் இவற்றைப் பெறலாம்.
  • விதைகள் வாங்கும்போது முடிந்தளவுக்கு உயர்ரக விதைகளாக அல்லாமல், நாட்டு விதைகளாக வாங்குவது நல்லது.
  • இந்தப் பருவத்தில் தக்காளி, மிளகாய், பாகல், சுரை, பூசணி, பீர்க்கன், முள்ளங்கி, வெண்டை, கொத்தவரை மற்றும் கீரை வகைகளை வளர்க்கலாம்.
  • கறிவேப்பிலை, முருங்கை, எலுமிச்சை மரங்களில் ஏதாவது ஒரு மரம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளலாம். வெண்டை, கொத்தவரை, அவரை போன்ற பெரிய விதைகளை தேவையான இடைவெளி விட்டு, பாத்திகளில் நேரடியாகவே விதைக்கலாம்.
  • கத்திரி, தக்காளி, மிளகாய் போன்று சிறிய விதைகளை குழித்தட்டுகளில் வளர்த்து, பிறகு நடலாம். செடிகளின் அளவைப் பொறுத்து, 0.5 – 1 அடி வரை இடைவெளி விட்டு நட வேண்டும்.
  • கீரையில் வேர் அதிகம் கிடையாது என்பதால், ஒரு பிளாஸ்டிக் சாக்கை தரையில் விரித்து, மண் நிரப்பி கீரை வகைகளை வளர்க்கலாம்.
  • வேப்ப இலைகளை நன்கு காய வைத்து துாள் செய்து, செடி ஒன்றுக்கு ஒரு கைப்பிடி வீதம், செடியின் வேர்ப்பகுதியில் போட்டு நன்கு கொத்தி விட வேண்டும். இதுவே அடியுரமாகவும், பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.
  • முட்டை ஓடு, மீன் தொட்டிக் கழிவுநீர், அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய நீரை கூட செடிகளுக்கு இடலாம்.
  • மாடித்தோட்டம் அமைப்பதன் மூலம் செடிகளில் நீராவிப் போக்கு நடைபெற்று, வெப்ப நிலையைக் குறைக்க வழி வகுக்கிறது. இதனால் செடிகளைக் கொண்டுள்ள கட்டடங்கள், இவை அல்லாத கட்டடங்களை விட குளிர்ச்சியாக இருக்கும்.
  • தோட்டம் வளர்ப்பு என்பது, பயனுள்ள பொழுதுபோக்கு மற்றும் உடற்பயிற்சி மட்டுமின்றி, மன அழுத்தத்தையும் குறைக்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • நமக்குத் தேவையான காய்கறிகளை, நாமே விளைவித்து சாப்பிடுவதில் கிடைக்கும் திருப்தியும், சந்தோஷமும் தனி தான்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “தோட்டம் வளர்ப்பு பயனுள்ள பொழுதுபோக்கு!

Leave a Reply to A.Gayathri Shenoy Cancel reply

Your email address will not be published. Required fields are marked *