அவரை சாகுபடி

அவரை  இரகங்கள்

குற்றுச்செடி வகை : கோ 6, கோ 7, கோ 8, கோ 9, கோ 10, கோ 11, கோ 12, கோ 13, கோ (ஜிபி) 14, அர்கா ஜாய் மற்றும் அர்கா விஜய்.

பந்தல் வகை : கோ 1, கோ 2, கோ 3, கோ 4, கோ 5 மற்றும் பூசாஎர்லி.

மண் : வடிகால் வசதியுள்ள இரும் பொறை மண் உகந்தது. மண்ணின் கார அமிலத்தன்மை 6.5 – 8.5 இருத்தல்வேண்டும்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை உழுது பண்படுத்தவேண்டும். குற்று வகைகளுக்கு 60 x 30 செ.மீ அளவில் பார்கள் எடுக்கவேண்டும். பந்தல் வகைகளுக்கு 30 செ.மீ அளவில் நீளம் அகலம், ஆழம் உள்ள குழிகள் எடுத்து மேல் மண் மற்றும் தொழு உரம் இட்டு, ஒரு வாரம் ஆறப்போடவேண்டும்.

விதையும் விதைப்பும்

விதையளவு :

குற்றுச்செடி வகைகளுக்கு : எக்டருக்கு : 25 கிலோ

பந்தல் வகைகளுக்கு : எக்டருக்கு : 5 கிலோ

விதை நேர்த்தி : ஒரு எக்டருக்கு தேவையான விதைகளை மூன்று பொட்டலம் ரைசோபியம் நுண்ணுயிர் உரத்துடன் சிறிது அளவு அரிசிக் கஞ்சி சேர்த்து நன்கு கலக்கி நிழலில் அரைமணி நேரம் உலர்த்தி பின்னர் விதைக்கவேண்டும்.

விதைத்தல் : குற்று வகைகளுக்கு ஒரு விதையை பார்களின் ஒரு புறமாக 2-3 செ.மீ ஆழத்தில் விதையை ஊன்றவேண்டும். பந்தல் வகைகளுக்கு ஒரு குழிக்கு 2-3 விதைகளை ஊன்றவேண்டும். இடைவெளி 2 x 3 செ.மீ அளவில் கொடுக்கவேண்டும். கோ 1 இரக அவரைக்கு இடைவெளி போதுமானதாகும்.

நீர் நிர்வாகம்

நீர் பாய்ச்சுதல் : விதைத்தவுடன் ஒரு தண்ணீரும், பிறகு மூன்றாம் நாள் உயிர் தண்ணீரும் பாய்ச்சவேண்டும். பின்பு வாரம் ஒரு முறை நீர்ப்பாய்ச்சவேண்டும்.

களை கட்டுப்பாடு மற்றும் பின்செய் நேர்த்தி

பின்செய் நேர்த்தி : கொடிகள் உருவாகியுடன், ஆறு அடி உயரத்தில் பந்தல் அமைத்து பந்தலில் கொடிகளை எடுத்துக் கட்டி படரவிடவேண்டும். தேவைப்படும் போது களைக்கொத்து கொண்டு கொத்தி களை எடுக்கவேண்டும்.

உரமிடுதல்

பந்தல் வகைகளுக்கு : நிலம் தயாரிக்கும் போது எக்டருக்கு 20 டன் (குழி ஒன்றுக்கு 10 கிலோ) நன்கு மக்கிய தொழு உரத்தை கடைசி உழவின் பொது இட்டு உழவேண்டும். அடியுரமாக குழி ஒன்றுக்கு 6:12:12 (தழை:மணி:சாம்பல்) கலப்பு உரம் 100 கிராம் இடவேண்டும். விதைக்கும் போது எக்டருக்கு 2 கிலோ அசோபைரில்லம் அல்லது பாஸ்போ பாக்டீரியம் இடவேண்டும். விதைத்த 30 நாட்கள் கழித்து குழி ஒன்றுக்கு 10 கிராம் தழைச்சத்து இடவேண்டும்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

சாறு உறிஞ்சும் அசுவினி முதலான பூச்சிகளைக் கட்டுப்படுத்த ஒரு மில்லி மாலத்தியான் அல்லது டைமெத்தியோட் அல்லது மீதைல் டெமட்டான் இவற்றுள் ஏதாவது ஒன்றுடன் ஒரு லிட்டர் நீர் கலந்து தெளிக்கவேண்டும்.

சாம்பல் நோய் : இந்நோயைக் கட்டுப்படுத்த நனையும் கந்தகத்தூள் 2 கிராமை ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவேண்டும்.

அறுவடை

பந்தல் வகை : எக்டருக்கு 240 நாட்களில் 12-13 டன்கள்

குற்றுவகை : எக்டருக்கு 120 நாட்களில் 8-10 டன்கள்.

காய்ப்புழு : காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்த கார்பைரல் 2 கிராம் / தண்ணீரில் கலந்து மூன்று முறை 15 நாள் இடைவெளியில் தெளிக்கவேண்டும் (அ) எண்டோசல்பான் 2 மிலி / லிட்டர் கலந்து தெளிக்கவேண்டும்.

நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பலகலை கழகம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “அவரை சாகுபடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *