இறைவை நிலக்கடலை சாகுபடியில் அதிக மகசூல் பெற விவசாயிகள் நவீன தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்று வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வேளாண் துணை இயக்குநர் ந. மேகநாதன் கூறியது:
கார்த்திகைப் பட்டத்தில் (நவம்பர் 15 முதல் டிசம்பர் 15 வரை) இறவை நிலக்கடலை சாகுபடி செய்வதற்கு மிகவும் உகந்த பருவமாகும். இறவை நிலக்கடலையில் அதிக மகசூல் பெற நவீனத் தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.
நிலம், உழவு:
- மணல்பாங்கான வண்டல், செம்மண் மற்றும் கருவண்டல் நிலங்கள் நிலக்கடலை சாகுபடிக்கு ஏற்றவை.
- மண்ணின் தன்மைக்கு தகுந்தபடி 4 அல்லது 5 முறை இரும்புக் கலப்பை அல்லது நாட்டுக் கலப்பைக் கொண்டு கட்டிகள் நன்கு உடையும் வரை உழவு செய்ய வேண்டும். கடைசி உழவுக்கு முன்பாக ஏக்கருக்கு 5 டன் தொழு உரம் இட வேண்டும்.
விதை:
- ஏக்கருக்கு சிறிய பருப்பு ரகங்களாக இருந்தால் 50 கிலோவும், பெரிய பருப்பு ரகங்களாக இருந்தால் 55 கிலோ விதையும் தேவைப்படும்.
- விதை கடினப்படுத்துதல் என்ற தொழில்நுட்பத்தின் மூலம் முளைக்காத விதைகளை தனியாக அப்புறப்படுத்தி நல்ல முளைப்புத் திறன் உள்ள விதைகளை மட்டும் விதைப்பதன் மூலம் செலவைக் குறைக்கலாம்.
- வறட்சியைத் தாங்கி விதைகள் முளைத்து வளர கால்சியோம் குளோரைடு என்ற ரசாயனக் கரைசலில் விதைகளை ஊற வைத்து கடினப்படுத்தி பின்னர் விதைக்க வேண்டும்.
செய்முறை:
- விதைகளைக் கடினப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் கால்சியம் குளோரைடு என்ற அளவில் 28 லிட்டர் தண்ணீரில் 140 கிராம் கரைத்து கரைசால் தயார் செய்து அதில் ஓர் ஏக்கருக்குத் தேவையான விதைகளை 6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
- ஊற வைத்த விதைகளை ஈரமான கோணிப்பை மீது பரப்பி மற்றொரு கோணிப் பையால் 24 மணி நேரம் மூடி வைக்க வேண்டும். பின்னர், மேலே மூடியுள்ள கோணிப் பையை நீக்கி சிறிதளவு முளைப்பு கண்ட விதைகளை தனியே பிரித்தெடுத்து நிழலில் உலர்த்த வேண்டும். இதேபோல, 2 மணி நேர இடைவெளியில் உலர்த்தி எடுத்து விதைப்பு செய்ய வேண்டும்.
- விதைகளைக் கடினப்படுத்துவதன் மூலம் அவை வறட்சியைத் தாங்கி வளரும். விதைகளில் தண்ணீர் ஊடுருவும் திறன் அதிகரிக்கும். இளம் பயிர்களில் வீரியம் அதிகரிக்கும். பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்க முடியும்.
உரமிடுதல்:
- இறவை நிலக்கடலைப் பயிருக்கு மண் ஆய்வு பரிந்துரையின்பேரில் உரம் இட வேண்டும்.
- பொதுப் பரிந்துரையான 7 கிலோ தழைச்சத்து தரவல்ல 15 கிலோ யூரியா, 14 கிலோ மணிச்சத்து தரவல்ல 87.5 கிலோ சூப்பர் பாஸ்பேட், 21 கிலோ சாம்பல் சத்து தரவல்ல 35 கிலோ மூரியேட் ஆப் பொட்டாஷ் உரங்களுடன் 80 கிலோ ஜிப்சம் சேர்து அடியுரமாக இட வேண்டும்.
- நிலக்கடலை நுண்ணூட்டக் கலைவயை ஏக்கருக்கு 5 கிலோ வீதம் 20 கிலோ மணலுடன் கலந்து விதைத்தவுடன் மேலாக தூவ வேண்டும்.
- விதைத்து 40 முதல் 45 நாள்களில் 80 கிலோ ஜிப்சம் இட்டு மண் அணைப்பதன் மூலம் தரமான காய்கள் உருவாகி நல்ல மகசூல் கிடைக்கும்.
- பூ பிஞ்சு உதிர்வதைத் தடுக்கவும், நல்ல வளர்ச்சியடைந்த முழுமையான பருப்புகளைப் பெறவும் ஊட்டச்சத்துக் கலவையைத் தெளிக்க வேண்டும்.
- இந்தக் கலவை தயாரிக்க டிஏபி 1 கிலோ, அம்மோனியம் சல்பேட் 400 கிராம் மற்றும் போராக்ஸ் 200 கிராம் ஆகியவற்றை 15 லிட்டர் தண்ணீரில் ஒன்றாக கலந்து இரவு முழுவதும் வைத்திருக்க வேண்டும்.
- மறுநாள் காலை இந்தக் கலவையை வடிகட்டினால் 13 லிட்டர் வரை தெளிந்த ஊட்டச்சத்து நீர் கிடைக்கும். இதை 187 லிட்டர் தண்ணீருடன் சேர்த்து 200 லிட்டர் தெளிப்பு திரவமாக தயாரிக்க வேண்டும்.
- இந்தத் திரவத்துடன் 180 மி.லி. பிளானோபிக்ஸ் சேர்த்து விதைத்த 25 மற்றும் 35-ஆவது நாள்களில் தெளிப்பதன் மூலம் நிலக்கடலையில் அதிக மகசூல் பெறமுடியும் என்றார் அவர்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்