பருத்தியில் மகசூல் இழப்பைத் தவிர்க்கும் வழிகள்

பருத்தியில் பூச்சிகள் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் முறைகளைப் பின்பற்றினால் மகசூல் இழப்பைத் தவிர்க்கலாம் என, தருமபுரி உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் பெ.பாஸ்கர் தெரிவித்தார்.

தருமபுரி மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை 31,755 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள குளிர்கால பருத்தி பயிர்கள் பூ, பிஞ்சு உருவாகும் பருவத்தில் உள்ளன.

இளம்பருவம் (விதைத்த 50 நாள்கள் வரை):

  • இந்தப் பருவத்தில் தத்துப்பூச்சி மற்றும் அசுவினி தாக்குதல் தென்படும். தத்துப்பூச்சி தாக்குவதால் பருத்தி இலைகள் மஞ்சள் நிறமாக மாறி ஓரங்கள் மடிவதோடு, இலைகள் உதிரும்.
  • அசுவினி தாக்கப்பட்ட பயிர்களின் தளிர் இலைகள் சிறிதாக தோன்றுவதோடு, இலைகள் கிண்ணம் போல் குவியும்.
  • தத்துப் பூச்சி, அசுவினியின் தாக்குதலைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு மீத்தைல் டெமட்டான் 200 மி.லி. அல்லது வேப்பங்கொட்டைச் சாறு ஐந்து சதம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைத் தெளிக்கலாம்.
  • பருத்தியில் பூ மற்றும் பிஞ்சுகள் உருவாகி காய் பிடிக்கும் தருணத்தில் காய்ப்புழுக்களின் தாக்குதல் காணப்படும்.
  • புள்ளிக்காய்ப்புழு, பச்சை அல்லது அமெரிக்கன் காய்ப்புழு, இளஞ்சிவப்புக் காய்ப்புழு போன்ற மூன்று வகை காய்ப்புழுக்கள் பருத்தி காய்களை தாக்கி பயிருக்கு சேதம் விளைவிக்கும்.
  • புள்ளிக்காய்ப் புழுக்கள் பிஞ்சு காய்களை துளைத்தால் அவை செடியிலிருந்து உதிர்ந்து விடும். முற்றுகிற காய்களை குடைந்து உண்டால் உள்ளே இருக்கும் பஞ்சின் தரம், மகசூல் குறையும்.
  • பச்சை அல்லது அமெரிக்கன் காய்ப்புழு பயிர்கள் பூக்கும், காய்ப்பு பருவத்தில் தாக்குதலை ஏற்படுத்தும். இந்தப் புழுக்கள் காய்களுக்குள் தலையை மட்டும் உள்ளே நுழைத்து பஞ்சு மற்றும் விதைகளை குடைந்து உண்ணும்.

காய் முதிரும் பருவங்கள்:

  • இந்தப் பருவத்தில் இளஞ்சிவப்பு காய்ப்புழுக்கள் பயிரைத் தாக்கும்.
  • புழுக்கள் தாக்கப்பட்ட பயிர்களில் மலர அல்லது விரிய வேண்டிய பூக்களின் இதழ்கள் விரியாமல் நுனிகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டப்பட்டு ரோஜா மலரின் மொட்டுகள் போன்று தோற்றம் அளிக்கும்.
  • அவ்வாறு உள்ள பூக்களைப் பிரித்து பார்த்தால் இளஞ்சிவப்பு காய்ப்புழு, மகரந்தம், சூல்பை ஆகியவற்றை உண்டு சேதப்படுத்தி விடும்.
  • இதைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு குளோர்பைரிபாஸ் 800 மில்லி அல்லது குயினால்பாஸ் 800 மி.லி., பாசலோன் ஒரு லிட்டர் அளவில் தேவையான தண்ணீருடன் கலந்து தெளிக்கலாம்.

தண்டு மூக்கு வண்டு அல்லது மோதிரப் புழு:

  • இந்தப் புழுக்கள் பருத்தி விதைத்த 25 நாளிலிருந்து 90 நாள்கள் வரை தாக்குதலை ஏற்படுத்துவதோடு, அடித்தண்டில் வீக்கம் காணப்படும்.
  • செடிகளின் இடையே களை எடுக்கவோ, உரமிடவோ, நீர் பாய்ச்சும் போதும், பலத்த காற்று அடிக்கும் போதும் தண்டின் வீங்கிய இடத்தில் செடிகள் முறிந்து சேதம் விளைவிக்கும்.
  • இதைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு 12 கிலோ கார்போபியுரான் குருணை மருந்தை செடிகளுக்கு அருகில் இட்டு மண் அணைப்பது அல்லது ஒரு லிட்டர் குளோர்பைரிபாஸ் மருந்தை தேவையான அளவு தண்ணீருடன் கலந்த கரைசலை தண்டுகள் நன்கு நனையும்படி தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

காய் பிடிக்கும் மற்றும் முற்றும் பருவங்கள்:

  • இந்தப் பருவத்தில் புரோடீனியா புழுக்கள் பருத்தியில் தாக்குதல் ஏற்படுத்தும்.
  • புழுக்கள் தாக்கிய பயிரின் இலைகள் சல்லடை போல் அறிக்கப்பட்டிருக்கும்.
  • இந்தப் புழுக்களைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு குயினால்பாஸ் 800 மில்லி, குனோர்பைரிபாஸ் 800 மில்லி இவற்றில் ஏதேனும் ஒன்றைத் தெளிக்கலாம்.

ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம்:

  • ஒவ்வொரு பூச்சிக்கும் தனித்தனியே நிர்வாகம் செய்வதை விட ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம் செய்வதன் மூலம் பருத்தியை தாக்கும் பூச்சிகளை திறன்பட கட்டுப்படுத்தலாம்.
  • எனவே, பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகளை கடைப்பிடித்து பருத்தியில் ஏற்படும் பூச்சி நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பருத்தி விவசாயிகள் சாகுபடி செலவைக் குறைத்து அதிக மகசூல் பெறலாம் என்றார் பாஸ்கர்.

நன்றி: தினமணி 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *