மிளகாயில் காய்ப்புழுக் கட்டுப்பாடு

ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு மூலம் மிளகாயில் காய்ப்புழுவைக் கட்டுப்படுத்தி உயர்மகசூல் பெறலாம் என்று சேரன்மகாதேவி தோட்டக்கலை உதவி இயக்குநர் தி.சு. பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

  • மிளகாய் பயிர் இப்போது காய்ப்புப் பருவத்தில் உள்ளது. இத் தருணத்தில் காய்ப்புழு மிகுந்த மகசூல் இழப்பை மிளகாயில் ஏற்படுத்தும்.
  • இந்தக் காய்ப்புழுக்களை ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளை மேற்கொண்டு கட்டுப்படுத்தலாம். அதன்மூலம் உயர் மகசூலும், அதிக லாபமும் பெறலாம்.

1. இனக்கவர்ச்சி பொறி வைத்தல்: ஒரு ஏக்கருக்கு 5 என்ற அளவில் இனக்கவர்ச்சி பொறிகளை வைத்து, புரோடினியா காய்ப்புழுக்களின் தாய் அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.

2. பாதிக்கப்பட்ட காய்கள் மற்றும் புழுக்களைச் சேகரித்து அழிக்கலாம்.

3. ஒரு லிட்டர் நீரில் 2 கிராம் என்ற அளவில் பேசில்லஸ் துரின்ஜன்சிஸ் என்ற உயிர்ப் பூச்சிக் கொல்லியைத் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

4. நச்சுத்தீனி வைத்தல்: ஒரு ஏக்கருக்கு 500 கிராம் கார்பரில் 50 சத நனையும் தூள், 5 கிலோ பச்சரிசித் தவிடு, 500 கிராம் வெல்லம், 3 லிட்டர் தண்ணீர் கலந்து தயாரித்த நச்சுத்தீனியை மாலை வேளைகளில் வயலின் பல்வேறு இடங்களில் சிறுசிறு உருண்டைகளாக வயல் முழுவதும் வைக்கலாம்.

இரவுதான் இப்புழுக்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் மாலை வேளைகளில்தான் இந்த நச்சுத் தீனியை வைக்க வேண்டும். காலையில் இதை உண்டு இறந்து கிடக்கும் புழுக்களைக் காணமுடியும்.

5. பயிர்ப் பாதுகாப்பு மருந்து தெளித்தல்: ஒரு லிட்டர் நீருக்கு 3 கிராம் கார்பரில் 50 சதம் அல்லது 3 மிலி குளோர்பைரிபாஸ், 20 ஈ.சி. அல்லது இரண்டரை மிலி குயினோல்பாஸ், 25 ஈ.சி. மருந்துகளில் ஏதேனும் ஒன்றை கலந்து மாலை வேளைகளில் தெளிக்கலாம்.

இவ்வாறு ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளைக் கடைபிடித்து மிளகாயில் காய்ப்புழுவைக் கட்டுப்படுத்தி உயர் மகசூலும், லாபமும் பெறலாம் என்றார் அவர்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *