நாவல்பழ நிறத்தில் நா இனிக்கும் சுவையில் வாய் மணக்கச் செய்கிறது, இலுப்பை பூ சம்பா அரிசி. காற்றடிக்கும் வேளையில் நெல்வயலுக்குள் நடந்து சென்றால், கதிர்கள் உரசும் போது மணம் வீசுவது உண்மை என்கிறார் மதுரை தேனூர் காங்காமடையைச் சேர்ந்த செல்வக்குமார். அவர் கூறியது –
- இயற்கை விவசாயி நம்மாழ்வாரின் பயிற்சி மையத்திற்கு சென்ற போது, திருவாரூர் விவசாயி உதயகுமார் மூலம் இலுப்பை பூ சம்பாவைப் பற்றி தெரிந்து கொண்டேன்.இந்த நெல்லை தான் பயிரிட்டு வருவதாக தெரிவித்தார்.
- அவரிடம் இருந்து வாங்கி, 14 நாட்கள் நாற்று வளர்த்து ஒன்றரை ஏக்கரில் பயிரிட்டேன். நெல்லின் வயது 135 நாட்கள்.
- வறட்சியை தாங்கி வளரும்.
- செயற்கை உரமின்றி ஜீவாமிர்த கரைசல் தான் வயலுக்கு தருகிறேன். பூக்கும், காய் பிடிக்கும் பருவத்தில் தேமோர் கரைசல் தெளித்தால் நோய் தாக்குதல் வராது. காய்கள் நன்றாக பிடித்து வளரும். வளர்ச்சி ஊக்கியாக மீன்அமிலம் தெளிக்கிறேன். இது பெரிய செலவே இல்லை.
- மற்ற வயல்களில் இல்லாத அதிசயம் உண்டென்றால், இங்கே குருவிகளும், ஊசி, வண்ணத் தட்டான்கள் நிறைய வருகின்றன. இயற்கையாக ஏற்படும் பூச்சி தாக்குதல்களுக்கு மருந்தடிப்பதில்லை. அதனால் குருவிகள் பூச்சிகளை பிடித்து தின்கின்றன. தட்டான்கள் அவற்றின் முட்டைகளை உண்கின்றன.
- அதிகபட்சமாக 30 மூடை நெல் கிடைக்கும். இதை நெல்லாக விற்காமல் அரிசியாக விற்பேன். இப்போதே இந்த அரிசியை வாங்கத் தயாராக உள்ளனர். அடுத்த தலைமுறைக்கு நஞ்சில்லாத உணவு தரவேண்டும். பளபளக்கும் பசுமை, விதையில்லா தன்மை இரண்டுமே நம் சந்ததிக்கு ஆபத்து என்பதை உணரவேண்டும். ஒவ்வொரு முறையும் பாரம்பரிய நெல் ரகத்தை மட்டுமே பயிரிடுவேன் என்றார்.இவரிடம் பேச 07639825050.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்