தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை சேர்ந்தவர். விவசாயத்தின் மீது ஆர்வம் கொண்ட இவர் தனது வீட்டின் வளாகத்தில் ஏழு சென்ட் நிலத்தில் கடந்த எட்டு ஆண்டுகளாக பழத்தோட்டம், மூலிகை தோட்டம், காய்கறி தோட்டம், நர்சரி கார்டன் அமைத்து தினமும் பராமரித்து வருகிறார்.
வீட்டிற்கான காய்கறிகள்
கார்த்திகேயன் கூறியதாவது: தென்னை, மாதுளை, ராக்கெட் சப்போட்டா, எலுமிச்சை, நாட்டு கொய்யா, பன்னீர் கொய்யா, சீதாப்பழ மரம், எலுமிச்சை, அல்போன்ஸ் ரக மாமரம், வேப்ப மரம், பெரிய நெல்லிக்காய் ஆகியவற்றில் தலா ஒரு மரத்தை வளர்த்து வருகிறேன். தவிர மூலிகை செடிகள், நர்சரி கார்டன், வீட்டிற்கு தேவையான பாகற்காய், பீர்க்கங்காய், அவரை, புடலங்காய் பயிரிட்டுள்ளேன். ஊடு பயிராக பச்சை மிளகாய், நுால்கோல், தோட்டத்தின் ஓரங்களில் 20 சவுக்கு மரங்களை வளர்த்து வருகிறேன். இது தோட்டத்தின் வேலியாகவும் பயன்பட்டு வருகிறது. வீட்டு தேவைக்கான பழங்கள், காய்கறிகளை வீட்டின் தோட்டத்தில் இருந்து பயன்படுத்தி வருகிறோம். இயற்கை முறையில் விளைவிப்பதால் சுவையும், ரசாயனம் கலக்காத பழங்கள், காய்கறிகள் கிடைக்கிறது.
பூச்சி விரட்டி மருந்துகள்
வெள்ளை பஞ்சுப் பூச்சிகள் ஒரு சில மரங்களில் இருக்கும். பஞ்சுப் பூச்சிகள் புற்றுநோய் கிருமி போன்றது. செடிகளில் அப்பிக்கொள்ளும். கொய்யா, செம்பருத்தி, மாதுளை போன்ற மரங்களின் இலைகளில் அதிகம் இருக்கும். இப்பூச்சிகள் செடிகளை வளர விடாமல் தடுக்கும். இவற்றை வரவிடாமல் தடுக்க வேண்டும். இதற்காக வீட்டில் உள்ள தயிரை நான்கைந்து நாட்கள் புளிக்க வைத்து, அதனுடன் தண்ணீர் சேர்த்து மோராக்கி வடிகட்டி, அதனுடன் மஞ்சள் துாள் கலந்து 15 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்க வேண்டும். அதன் வாசனைக்கு பஞ்சுப் பூச்சிகள் பஞ்சாக பறந்து விடும்.
முருங்கையை தாக்கும் அரி
முருங்கை மரத்தில் அரிப்பூச்சி உற்பத்தியாகும். இதை தடுக்க கட்டி பெருங்காயத்தை முதல் நாள் இரவு தண்ணீரில் ஊற வைத்து அடுத்த நாள் அந்த தண்ணீரை முருங்கை மரத்தின் துாரில் ஊற்ற வேண்டும். இப்படி செய்வதால் முருங்கையில் அரிப்பூச்சிகள் அண்டாது. இத்தொழில்நுட்பத்தை ஆறு மாதத்திற்கு ஒரு முறை செய்தால் போதும். எனது தோட்டத்தில் முருங்கை மரம் வளர்த்த எட்டு ஆண்டுகளில் அரிப்பூச்சியே வரவில்லை. மூன்று மாதத்திற்கு ஒரு முறை களை எடுத்து மரங்களில் கவாத்து செய்ய வேண்டும்.
மண் புழு உரம், ஆட்டுப்புழுக்கை, கடலை புண்ணாக்கு, கீழே விழும் இலைகள் போன்றவை இயற்கை உரமாகிறது. வீட்டு தோட்டத்தில் விவசாயம் செய்வது உடல் உழைப்புக்கு ஏற்றது; மன நிறைவை தரும் அற்புத ஆற்றல் கொண்டது.
பறவைகளின் இசை மழை
பழ மரங்கள், தென்னை, எலுமிச்சை மரங்களை தேடி அழகிய பறவைகள் வந்த வண்ணம் உள்ளன. வீட்டு தோட்டம் மூலம் மாதம் தோறும் பழங்கள், காய்கறி செலவு மிச்சம். வீட்டின் தேவை போக மீதமாவதை விலைக்கு விற்கலாம், என்றார்.
தொடர்புக்கு 09003258329 .
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்