நெல் விதைக்காத நிலத்தில், உளுந்து பயிர் செய்வதில் விவசாயிகள் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்.மானாவாரி விவசாயத்தை அடிப்படையாக கொண்ட சாக்கோட்டை ஒன்றியத்தில் நன்செய் நிலத்தை காட்டிலும் புன்செய் அதிகம்.
ஆண்டுக்கு ஒரு முறை பருவம் தவறாமல் விவசாயம் செய்து வந்த விவசாயிகள், பருவநிலை மாறியதால், வெளிநாடுகளுக்கு பறந்தனர். விளைந்த பூமி வெட்டவெளியானது. காணுமிடமெல்லாம் கருவேல மரங்கள் நிறைந்தது. தற்போது மீண்டும் விவசாயத்தில் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர்.
பள்ளத்தூரில் பல ஆண்டுகளாக தரிசாக கிடந்த 200 ஏக்கருக்கும் அதிகமான நிலம், பண்படுத்தப்பட்டு உளுந்து மற்றும் நெல் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே போல் சாக்கோட்டை ஒன்றியத்தில் தரிசாக கிடந்த புன்செய் நிலத்தில் உளுந்து விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
கருநாவல்குடி விவசாயி ஐங்கரன் கூறும்போது: தண்ணீர் முறையாக இருந்தால் மட்டுமே நெல் விவசாயம் மேற்கொள்ள முடியும். அதிலும் எல்லா ரகத்திலும் வெற்றி காண முடிவதில்லை. டீலக்ஸ் விளைவித்தால் மட்டுமே லாபத்தை பார்க்க முடிகிறது. அந்த ரகத்தில் நோய் தாக்குதல் அதிகரித்து வருவதால் தற்போது அதுவும் இழப்பாகவே உள்ளது. இதனால், விவசாயத்தை பல ஆண்டுகளாக கைவிட்டிருந்தோம்.
“தினமலர் நாளிதழில்’ கடந்த வாரம் தரிசாக கிடக்கும் நிலத்தில் உளுந்து பயிரிட்டால் என்ன நன்மை, தண்ணீர் இல்லாமல் எவ்வாறு விவசாயம் மேற்கொள்வது என்பது குறித்த தகவலை அறிந்து, அதன் அடிப்படையில் 3 ஏக்கரில் உளுந்து பயிரிட்டுள்ளேன். மானாவாரி ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் ஒத்துழைப்பு தந்தனர், என்றார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்